டிரிபிள் வி ரெகார்ட்ஸ் வி.வினோத்குமார் தயாரித்து வழங்க, விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே, சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன், ரோகினி, வித்யா, பரத் ரெட்டி, கருணாஸ், சண்முக சுந்தரம், தேவதர்ஷினி, தலைவாசல் விஜய், கும்கி அஸ்வின் ஆகியோர் நடிக்க, பி.ராஜபாண்டியின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் "அச்சமின்றி".
பிக்பாக்கெட் பேர்வழி சக்தி எனும் விஜய் வசந்த், நண்பர் பட்டு - கருணாஸ். பெரியவர் சண்முகசுந்தரம், மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் சகிதம் பேமிலி கெட்-அப்பில் பிக்பாக்கெட் அடிப்பதில் வல்லவர். அவரை தவறுதலாக போலீஸ் என கருதும் மலர் எனும் நாயகி சிருஷ்டி டாங்கே, நட்புடன் பழகி வருகிறார். அந்த ஏரியாவுக்கு புதிய போலீஸ் அதிகாரி சத்யாவாக சமுத்திரகனி வருகிறார். சிருஷ்டி, தன் வீட்டு வேலைக்காரம்மாவின் மகள் பள்ளி பொதுத் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் வாங்கி தற்கொலை முயற்சி செய்து ஆஸ்பிடலில் அட்மிட் ஆக, ஸ்டேட் பர்ஸ்ட் வர வேண்டிய அந்தப் பெண் கம்மி மார்க் வாங்கியது கண்டு பொறுக்காத சிருஷ்டி பரிட்சை பேப்பர் ரீ-வேல்யூ வேஷனுக்கு விண்ணப்பிக்கிறார். அதனால் அவரை கொல்ல வருகிறது ஒரு கூட்டம். சிருஷ்டிக்கு உதவ களம் இறங்குகிறார் விஜய் வசந்த். அவரை அந்தக் கூட்டமும் துரத்துகிறது .இன்னொரு கூட்டமும் துரத்துகிறது.
இவர்களுக்கு உதவ களம் இறங்குவார் போலீஸ் இன்ஸ் சத்யா -சமுத்திரகனி எனப் பார்த்தால், தன் நீண்டநாள் காதலியை சமீபத்திய விபத்தில் இழந்த சமுத்திரகனியையும் கொலை வெறியோடு வேறு ஒரு போலீஸ் தலைமையில் துரத்துகிறது மற்றொரு கூட்டம். இந்த மூன்று கூட்டத்திற்குமிடையேயான சம்பந்தம் என்ன?, கொலை வெறி கும்பலிடமிருந்து மூவரும் தப்பிப் பிழைத்தார்களா?, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி சமுத்திரகனி தண்டித்தாரா?, விஜய் வசந்த் - சிருஷ்டி டாங்கே இடையேயான நட்பு காதலானதா...? என்பதுடன், நம் ஊரில் காசுக்காக சிலரது சுயநலத்திற்காக கல்வித்துறையில் நடைபெறும் தகிடுதித்தங்கள் என்னென்ன...? என்பதையும் பக்காவாக கலந்து கட்டி பளிச்சென்று "அச்சமின்றி" படமாக படைத்திருக்கின்றனர் இப்படக்குழுவினர்.
சக்தி எனும் பிக்பாக்கெட் பேர்வழியாக விஜய் வசந்த், செம கச்சிதம். நடை, உடை, பாவனை, பேச்சு, வழக்கு எல்லாவற்றிலும் சம்பந்தப்பட்ட சென்னை பித்பாக்கெட் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் விஜய். தன்னை போலீஸாக கருதும் சிருஷ்டியை ஒன் சைடாக டாவடிப்பதிலும் புகுந்து விளையாடியிருக்கிறார் மனிதர் பேஷ். பேஷ்!
சிருஷ்டி டாங்கே அநீதியைக் கண்டால் பொங்கி எழும் மார்டன் பெண்ணாக மலர் எனும் மலர் விழி பாத்திரத்தில் விஜய் வசந்தை மட்டுமல்ல ரசிகனையும் வெகுவாக கவருகிறார்.
நேர்மையான போலீஸ் அதிகாரி சத்யாவாக சமுத்திரகனி லெமன் டீ சாப்பிடும் போது சினிமா இன்ஸ்... ஆக தெரிந்தாலும் "மனசாட்சியை விட சிறந்த மேலிடம் வேறு எதுவும் கிடையாது..." எனும் "பன்ச்" மற்றும் என்கவுன்ட்டர் பில் - டப்புகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார். இளம்பிராயத்து கைகூடாத காதல், ஒரு கட்டத்தில் கைகூடி வரும் போது விதி வில்லன் விளையாடுவதிலும், வில்லனின் ஆளாக தன் சக போலீஸ் நண்பனே இருப்பதையும் கண்டு பொங்கி எழும் இடங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கனி.
நேர்மையான கல்வி அமைச்சர் கரிகாலனாக ராதாரவி, கல்வித் தாய் ராஜலட்சுமியாக சரண்யா பொன்வண்ணன், வக்கீல் தமிழ்செல்வியாக ரோகினி, சமுத்திரகனியின் காதலி ஸ்ருதியாக வித்யா, கெட்டபோலீஸ் சரவணனாக பரத் ரெட்டி, பிக்பாக்கெட் பட்டுவாக கருணாஸ், ஒற்றைத் திருக்குறளை வைத்துக் கொண்டு ஓட்டும் சண்முகசுந்தரம், செல்லமாக தேவதர்ஷினி, கலெக்ட்டர் அருண்குமாராக தலைவாசல் விஜய், கும்கி அஸ்வின்... உள்ளிட்ட எல்லோரும் கச்சிதம்.
பிரவீன் கே.எல்.லின் படுத்தாத படத்தொகுப்பு, ஏ.வெங்கடேஷின் கதைக்கேற்ற கருத்தாழமிக்க ஒளிப்பதிவு, பிரேம்ஜி அமரனின் இசையில், "அச்சமின்றி..". "காசு கைல...", "பாப்பா பாப்பா...", "தாவி வரும் அலைகடல்", "உன்னை பார்த்ததால்..." உள்ளிட்ட யுகபாரதியின பாடல் வரிகளும் பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம்.
"ஆண்டவன் அருள் மட்டுமல்ல.... ஆண்டு கிட்டிருக்கிற நம்ம அருளும் தேவைன்னு.. அந்த அம்மா நல்லா புரிஞ்சு வச்சிருக்கு.." என்பது உள்ளிட்ட ஜி ராதாகிருஷ்ணனின் வசன "பன்ச்"களுடன் பி.ராஜபாண்டியின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் ஒரு சில லாஜிக் குறைகள் ஆங்காங்கே தென்பட்டாலும் நம் அரசாங்கத்தின் பள்ளி கல்வித்துறைக்கே பாடம் நடத்தும் படமாக பட்டொளி வீசிபறக்கிறது "அச்சமின்றி".
ஆக மொத்தத்தில், "மிச்ச சொச்சமின்றி, அச்சமின்றி பா(ப)டத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும், பெற்றோரும், பிள்ளைகளும், குறிப்பாய் கல்வித்துறை அதிகாரிகளும் பார்க்க வேண்டும்! ரசிக்க வேண்டும்! படிக்க வேண்டும்! ...ம்!"