
சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
ஏப் 26, 2026
Advertisement
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில் இவர் நடித்தாலும் அது படத்தில் "டிவிஸ்ட்" தரும் காட்சியாக இருப்பது சினிமாவுக்கே உரிய "சென்டிமென்ட்". 65 வயதிலும் சினிமாவில் சாதிக்க இளைஞனாக வலம் வந்துகொண்டிருக்கிறார் சங்கரவேல்.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்...
""என் சொந்த ஊர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி. அரசு பஸ் கண்டக்டராக இருந்து 2018ல் ஓய்வுபெற்றேன். சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம். 1984ல் அறிவொளி இயக்கத்தில் எழுத்தறிவித்தலுக்காக வீதி நாடகத்தில் பங்கேற்றேன். எழுத்து ஆர்வம் இருந்ததா ல் நாடகம், சிறுகதைகளும் எழுதினேன். பட்டிமன்றம்கூட 3 ஆண்டுகளாக பேசினேன். நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்துக்கொண்டே இருந்தது. பணி ஓய்வுக்கு பின் "நடிக்கலாம்னு இருக்கேன்" என வீட்டில் சொன்னேன். "ஏம்ப்பா, ஓய்வு வாழ்க்கையை நிம்மதியா கழிக்கலாமே" என இரு மகள்களும், ஒரு மகனும் தெரிவித்தனர்.
என் மனைவியோ, "உங்கப்பா எதுசெய்தாலும் சரியாக இருக்கும்" என நம்பிக்கையூட்டினார்.
ஒரு வருஷம் கழித்து நண்பர் மூலம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் படம் வெளிவரவில்லை. வெப் சீரியல் நடித்தேன். அதுவும் வெளியாகவில்லை. "டிவி" சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. பிறகு மதுரையைச் சுற்றி எடுக்கப்படும் படங்களில் சின்ன ரோல்களில் நடிக்க ஆரம்பித்தேன். 2023 பிப்ரவரி முதல் இதுவரை 30 படங்களில் நடித்துவிட்டேன். தனுஷ் இயக்கிய "இட்லி கடை" படத்தில் ராஜ்கிரணின் நண்பராக வந்து "சென்டிமென்டாக" டயலாக் பேசியது அனிருத், ஏ.ஆர். ரகுமான் இசை குறித்து "மீம்ஸ்" ஆக வந்தது.
அந்த படத்தில் என் கேரக்டர் குறித்து நடிகர் இளவரசு, "உங்களை சூப்பரா யூஸ் பண்ணியிருக்காங்க"னு பாராட்டினார். சிம்புதேவன் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில் என் மீசை, தாடியை பார்த்து நடிகர் தம்பி ராமையா அவருடைய படத்திற்கு என்னை பயன்படுத்திக் கொள்வதாக தெரிவித்தார். சீரியலும் நடித்து வருகிறேன்.
சமீபத்தில் வெளிவந்த "தாய் கிழவி" படத்தில் என் கேரக்டர்தான் படத்தின் திருப்புமுனையை ஏற்படுத்தும். என் நடிப்பை பார்த்து சிவகார்த்திகேயன் நடிக்கும் "சேயோன்" படத்தில் சான்ஸ் கிடைத்துள்ளது. ஒவ்வொரு படமும் முக்கியத்துவம் தரும் கேரக்டராக அமைவது என் உழைப்பிற்கான பலன் என்று நினைக்கிறேன்.
மதுரையை சுற்றி சமீபகாலமாக நிறைய படங்கள் எடுக்கப்படுகின்றன. நம்மூரு கலைஞர்களே அதிகம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் மதுரையை மையமாக வைத்து சங்கரதாஸ் சுவாமிகள் கூத்துப்பட்டறை என்ற நடிப்பு பயிற்சி கல்லுாரி ஆரம்பிக்க வேண்டும் என எண்ணம் உள்ளது. அது செயல் வடிவத்தில் வருவது காலத்தின் கையில்தான் உள்ளது"" என்கிறார் சங்கரவேல்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!