
சாதிக்க தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் நம்பிக்கை பளிச்சிடும் மணிஷா ஸ்ரீ
ஜூன் 14, 2026
Advertisement
விழியோரம் ஒரு காவியம். மையெழுதிய விழிகளில் மவுனமாய் பேசும் மங்கை இவர். புன்னகை சிதறலில் பூக்களும் தோற்கும் இவரது அழகில். இவர் அழகு கேமரா லென்ஸுக்கும் கவிதை சொல்லித் தரும். மாடலிங், விளம்பரம் துவங்கி இன்று பல்வேறுதிரைப்படங்களில் நடித்து வரும் நடிகை மணிஷா ஸ்ரீ கூறியதாவது
பார்க்க நான் வட இந்திய பெண் போல் இருந்தாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை தான். அம்மா ஜெய்ப்பூர். முதலில் மாடலிங் செய்தேன். நிறைய விளம்பரங்களிலும் நடித்தேன். 2014ல் வெளியான "இருக்கு ஆனா இல்லை" திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானேன். 2016ல் நானே பாடி, நடித்த "வான் போல் வருவான்" என்ற ஆல்பம் பாடலை வெளியிட்டேன். அச்சு ராஜாமணி இசையமைத்தார். அதே ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு நடித்த வீரசிவாஜி படத்தில் நடிகை ஷாலினியின் தங்கை ஷாம்லிக்கு தோழியாக நடித்தேன். அது துருதுருவென பேசும் கதாபாத்திரம்.
அதற்கு பின் 2017ல் நடிகர் நட்டியுடன் "போங்கு" படத்தில் நடித்தேன். 2019ல் "என் எதிரே ரெண்டு பாப்பா,"எனும் வெப் சீரிஸில் நடித்தேன். சமீபத்தில் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக்கின் "மெசஞ்சர்" திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தேன். பிரபுதேவா நடிக்கும் "உல்ப்" திரைப்படத்தில் நடித்து வருகிறேன். சில தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடிக்க உள்ளேன். தமிழில் போலீஸ் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறேன்.
விளம்பர துறையில் இருந்த போது பெரிதாக உணர்வுகளை காட்ட வேண்டியதில்லை. ஆனால் சினிமா என்பது நிறைய உணர்வுகளை கடத்தும் இடம். ஒரு போலீஸ், வக்கீல் என எதுவாக நடித்தாலும் அதுவாகவே மாறுவது அவசியம்.
"உல்ப்" திரைப்படம் வந்தால் என் நடிப்பு பாராட்டப்படும் என நம்புகிறேன். எமோஷனலாக "கனெக்ட்" ஆகும். ரசிகர்கள் மனதில் நிற்பேன். நட்டி, விக்ரம் பிரபு ஆகியோருடன் நடித்த அனுபவம் பெரியது. ஷாம்லியிடம் அவரின் சிறு வயது படங்கள் பிடிக்கும் என்றேன். நான் மிகவும் ரசித்த சைல்டு ஆர்ட்டிஸ்ட் அவர்.
எனக்கு இரட்டையர் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை. ஒரே படத்தில் இரு வேறு விதமான கதாபாத்திர வித்தியாசத்தை காட்ட விரும்புகிறேன். பாடவும் ஆசை அதிகம்.
எந்த கதை வந்தாலும்,"ஸ்கிரிப்டில்" ஒன்றி போய் நடிக்க வேண்டும். மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வர விரும்புவோருக்கு நான் கூற விரும்புவது ஒன்று தான்; பொறுமை. பொறுமை இருந்தால் சினிமா நம்மை தாங்கி பிடிக்கும்.
10 ஆண்டுகளாக விடாப்பிடியாக விட்டுக் கொடுக்காமல் நடித்து வருகிறேன். நமக்கு பிடித்த விஷயத்தை சாதிக்க தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். அது தான் சினிமாவின் ரகசியம். மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வர விரும்புவோருக்கு நான் கூற விரும்புவது ஒன்று தான்; பொறுமை. என்றார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!