
மேடை முதல் மெகா சீரியல் வரை.. நகைச்சுவை நடிகர் இந்திரன்
என்னுடைய பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம். இரண்டு வயதிலேயே சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டோம். அப்பா கார்பெண்டர், அம்மா இல்லத்தரசி, ஒரு தங்கை. பள்ளியில் பேச்சுப்போட்டிகளில் நிறையப் பரிசுகள் வாங்கும் அளவுக்கு தமிழ் மீது ஆர்வம் இருந்தது. நடிப்பின் மீது ஆரம்பத்தில் ஆசை இல்லை.
தாம்பரம் கிறிஸ்துவ கல்லுாரியில் படிக்கும்போது, குடும்பச் சூழ்நிலை, வறுமை காரணமாக ஒன்றரை வருடத்திலேயே படிப்பை பாதியில் நிறுத்த வேண்டியதாயிற்று. குடும்பத்தைக் காப்பாற்ற முழுநேர வேலை தேடியபோதுதான் என் கண்கள் நடிப்பின் பக்கம் திரும்பின.
பணம் தேவைப்பட்ட நேரத்தில் "அக்னி கலைக்குழு" என்ற அமைப்பில் சேர்ந்து வீதி நாடகங்கள், மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். மேடையில் பேசும்போது கீழே இருந்து மக்கள் தட்டிய கைதட்டல் சத்தம் எனக்குள் மிகப்பெரிய தன்னம்பிக்கையை விதைத்தது. உடல்மொழி, "லைட்டிங் சென்ஸ்" என நடிப்பின் அடிப்படை பாடங்களை அங்குதான் கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் சினிமாவில் நான்கு நண்பர்களில் ஒருவராக, நல்ல கேரக்டர்களில் நடித்தேன். ஆனால் அந்தப் படங்கள் மக்களிடம் போய் சேராததால் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. ஐந்து வருடப் போராட்டத்திற்குப் பின், சீரியல் பக்கம் வந்தேன்.
சீரியல் உலகம் எனக்கு கேமரா ஆங்கிள், குளோஸ்-அப் லுக் போன்ற தொழில்நுட்ப விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது. சீரியல் சூட்டிங், காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கட்டாயம். சில நேரங்களில் நள்ளிரவு வரை கூட நீளும். கல்யாணத்திற்கு முன்னாடி பிரச்னை இல்லை, இப்போதெல்லாம் இரவு 9:00 மணியைதாண்டிவிட்டால் மனைவியிடமிருந்து "எப்போ வருவீங்க?" என "மைனா" பட பாணியில் போன் வந்துவிடும்.
எனக்கு அடையாளத்தை தந்த "சத்யா" சீரியலில், மறைந்த நடிகர் நிழல்கள் ராஜசேகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுபோன்ற நடிகர்களிடம் இருந்து தொழில் நேர்த்தி, நேர மேலாண்மை உள்ளிட்டவற்றை கற்றுக்கொள்ளலாம். ராஜசேகரின் மனைவி, செட்டிலேயே அவருக்கு மேக்கப் போடுவது முதல் சாப்பாடு ஊட்டுவது வரை கூடவே இருந்து கவனித்துக் கொள்வதைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கும்.
சத்யா சீரியலில் என்னை "குள்ளபூதம்" என்றுதான் கூப்பிடுவார்கள். ஒருமுறை ரோட்டில் நடந்து போகும்போது, ஒரு மூன்றரை வயதுக் குழந்தை என்னைப்பார்த்து "டேய் குள்ளபூதம் வாடா" என்று கூப்பிட்டது. பதறிப்போன குழந்தையின் அம்மா என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், அந்த சின்னக் குழந்தையின் மனதில் என் கேரக்டர் போய் சேர்ந்துள்ளதே என்ற சந்தோஷத்தில் நான் உறைந்து போனேன். அதை என் வாழ்நாளில் மறக்க முடியாது.
2020ல் சிறந்த நகைச்சுவை நடிகர் விருது பெற்றேன். முதல் விருது பெற்ற மேடையில் நான் எமோஷனலாக அழுததை 3 வருடங்கள் கழித்து நினைவு கூர்ந்து மறைந்த இயக்குனர் பாக்யராஜ் பாராட்டியது என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம். தானாகத் தேடிவந்த பெரிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியுள்ளேன். சினிமாவில் நடிகர் புகழ் போன்ற ஒருசில நண்பர்கள் இருக்கிறார்கள்.
இயக்குனர் ஆசை இருக்கிறதா என்று கேட்கிறார்கள். அது மிகப்பெரிய நாலேட்ஜ், பொறுப்பு சார்ந்த வேலை, அதற்குரிய பொறுமை என்னிடம் இல்லை. எனக்குக் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்து, மக்களை வயிறாரச் சிரிக்க வைக்க வேண்டும், அதுமட்டுமே என் ஒரே குறிக்கோள்! எனத் தெம்பாக முடிக்கிறார் இந்திரன்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!