கல்கி எழுதிய சரித்திர நாவலான 'பொன்னியின் செல்வன்', மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி கடந்த வாரம் உலகமெங்கம் ஐந்து மொழிகளில் வெளியானது. இதுவரையிலும் தியேட்டர்கள் பக்கம் வராதவர்களைக் கூட இந்தப் படம் வரவழைத்துள்ளது. சிறு வயதில் நாவலைப் படித்து இன்று முதியோர்களாக இருப்பவர்களும் தள்ளாத வயதிலும் தியேட்டர்களுக்கு வந்து படத்தைப் பார்க்கிறார்கள்.
தமிழகத்தில் ஐந்தே நாட்களில் ரூ.100 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்த இந்தப் படம் தற்போது ஒரு வாரத்தில் இந்திய அளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து மற்றுமொரு சாதனையைப் படைத்திருக்கிறது. தமிழகத்தில் ரூ.126 கோடி, கர்நாடகாவில் 20 கோடி, வட மாநிலங்களில் ரூ.20 கோடி, கேரளாவில் ரூ.18 கோடி, ஆந்திரா, தெலங்கானாவில் ரூ.16 கோடி என ரூ.200 கோடி வசூலை இந்திய அளவில் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் ரூ.125 கோடி வரை வசூலித்து ஒட்டு மொத்தமாக முதல் வார முடிவில் ரூ.325 கோடி வரை வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
இன்று இரண்டாவது வாரத்தைத் தொட்டுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு இன்றும் பெரும்பாலான காட்சிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை நாட்கள் என்பதால் அந்நாட்களிலும் முன்பதிவுகள் மும்முரமாக நடந்து முடிந்துள்ளன. இந்த வார முடிவில் இப்படம் 400 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.