மலையாளத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய்பல்லவி. முதல் படத்திலேயே மலையாளம் மட்டுமல்லாது தென்னிந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை எல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் செலெக்ட்டிவாக மட்டுமே நடித்து வருகிறார். பிரேமம் படத்தை முடித்ததுமே இவருக்கு பஹத் பாசிலுடன் இணைந்து மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
அந்த சமயத்தில் தனது டாக்டர் படிப்பை முடிப்பதற்காக அவர் வெளிநாடு செல்ல வேண்டி இருந்ததால் அந்த வாய்ப்பை அவரால் ஏற்க இயலவில்லை. அதன்பிறகு தான் அந்த வாய்ப்பு அறிமுக நடிகையான அபர்ணா பாலமுரளிக்கு சென்றது. தன்னிடம் ஆடிசனுக்கு வந்த அபர்ணா பாலமுரளியின் நடிப்பு திறமையை பார்த்து இயக்குனர் அன்வர் ரஷீத் இந்த படத்தின் தயாரிப்பாளர் சந்தோஷ் டி குருவில்லாவிடம் சிபாரிசு செய்தார். அப்படி நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அபர்ணாவுக்கு மிகப்பெரிய அறிமுகத்தை ஏற்படுத்தியது.
அதன்பிறகு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திய அபர்ணா பாலமுரளி அதன் பிறகு சூரரைப்போற்று படம் மூலம் தேசிய விருது பெரும் அளவிற்கு சிறந்த நடிகையாக மாறியுள்ளார். அப்படி ஒரு நடிகையை அறிமுகப்படுத்தியது எங்களுக்கு பெருமை தான் என சமீபத்திய பேட்டி ஒன்றில் மகேஷிண்டே பிரதிகாரம் பட தயாரிப்பாளர் சந்தோஷ் குருவில்லா கூறியுள்ளார்.