ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
சினிமா வட்டாரத்திலும் சரி; அரசியல் வட்டாரத்திலும் சரி... அஜித் விவகாரம்தான் சூட்டை கிளப்பி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாசத்தலைவருக்கு பாராட்டு விழா என்ற பெயரில் திரையுலகம் நடத்திய விழாவில் அரசியல்வாதி கெட்-அப்பில் கலந்து கொண்ட அஜித் பேசிய பேச்சுதான் இந்த பரபரப்புக்கு காரணம். அஜித்தின் பேச்சு அரசியல், திரையுலகம், ரசிகர் பட்டாளத்தில் தொடங்கி பாமர மக்களையும் பரபரப்பாக்கியுள்ளது. பத்திரிகைகளை திறந்தால் அஜித் பேச்சு தொடர்பான சர்ச்சை செய்திதான் முதன்மை செய்தியாக இருக்கிறது.
இவ்வளவு பரபரப்பை கிளப்பும் அளவுக்கு அப்படி அஜித் என்னதான் பேசினார்? என்ற கேள்வி பலருக்குள்ளும் எழும். இதோ... அந்த விழாவில் அஜித் பேசிய பேச்சு முழு விவரம். படித்து விட்டு அஜித் பேசியது சரியா... தவறா? என்பதை சொல்லுங்கள்!
ஒட்டுமொத்த சினிமாத்துறைக்கும், அன்பான ரசிகர்களுக்கும் வணக்கம்!
இங்கே... இப்போ.. ஐந்தரை அடி தமிழ்நாட்டை நம்ம முன்னாடி ஐயா முதல்வர் அவர்கள் உருவத்துல பார்க்கிறோம். சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு நிலம் கொடுத்தற்காக பாராட்ட நாங்க இங்கே வரலை. அப்படி வந்திருந்தா அது சுயநலம். 60 வருஷத்துக்கும் மேல தமிழ்நாட்டுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும், அவரோட வாழ்க்கையை அர்ப்பணிச்சுக்கிட்ட ஒரு மாபெரும் மனிதருக்காகத்தான் நான் வந்திருக்கேன். நாங்கெல்லாம் வந்திருக்கோம். சூரியனை வாழ்த்த வயசு தேவையில்லை. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்துல சூரியனுக்கு வாழ்த்தி நன்றி சொல்லியிருக்காரு. ஒவ்வொரு பொங்கலுக்கும் தமிழ்நாட்டுல சூரியனுக்கு பொங்கல் வெச்சு நன்றி சொல்றோம். அதனால திரையுலக சூரியன், நம்ம அய்யா முதல்வர் பல்லாண்டு வாழணும்னு வாழ்த்தி, நன்றி சொல்றேன். நன்றி!
ஐயா.. இன்டஸ்ட்ரில (சினிமாத்துறையில்) எல்லோரும் எவ்ளோ உழைக்கிறோம்னு உங்களுக்கு தெரியும். கொஞ்ச நாளா எல்லாருக்கும் சினிமா இன்டஸ்ட்ரி மேல ஒரு கோபம். ஏன் நாமெல்லாம்... நமக்கு தேவையில்லா விஷயத்துல தலையிடுறோம்னு கோபம். அதுக்கு நாங்க... நடிகர்கள் மட்டும் காரணம் கிடையாது. நீங்க எவ்ளோ பிரச்னைகளை சால்வ் பண்ணிருக்கீங்க. இன்னிக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இனிமே சென்சிட்டிவ் இஷ்யூஸ், பொலிட்டக்கல் இஷ்யூஸ்ல இன்டஸ்ட்ரி தலையிட வேண்டாம்னு ஒரு அறிக்கை விடுங்க. ப்ளிஸ்... கெஞ்சிக் கேட்டுக்கிறேன். ஒவ்வொரு முறையும் இஷ்யூஸ் வர்றப்ப இன்டஸ்ட்ரில பொறுப்புல இருக்குற ஒரு சிலர் எங்களை எப்படியாவது கலந்துக்க வெக்கிறாங்க. அதனாலதான் நாங்க வர்றோம். சினிமா இன்ஸ்ட்ரி ஒரு பொதுவான இன்டஸ்ட்ரியா இருக்கணும். அதுக்கு ஒரு வழி காட்டுங்க அய்யா. வி ஆர் டயர்ட்.
ஒரு பிரச்னை வரும்போது அரசாங்கம் ரீ-ஆக்ட் பண்றதுக்குள்ளேயே... இன்டஸ்ட்ரில பதவில இருக்கிற ஒரு சிலர் அறிக்கை விட்டுடுறாங்க. நாங்க ஊர்வலம் எடுக்கப் போறோம்னு அறிக்கை விடுறாங்க. பதவில இருக்கிற ஒரு சிலர், நடிகர்கள் எல்லாரும் கலந்துக்கணும்னு சொல்லி மிரட்டி வர வைக்கிறாங்க. அதுக்கு ஒரு முடிவு கட்டுங்க அய்யா. வராவிட்டா ஒத்துழைப்பு தரமாட்டோம்னு மிரட்டுறாங்கய்யா. முடிங்கய்யா. அதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுங்க. அதுக்கு பயந்து வரவேண்டியிருக்கு. சப்போஸ்... வராவிட்டால்... அத வேற மாதிரி திசை திருப்பி தமிழ் பற்று இல்லைனு கிளப்பி விடுறாங்க. ப்ளீஸ் ஹெல்ப் இன்டஸ்ட்ரி. வேண்டாம். எங்களுக்கு அரசியல் வேண்டாம். பொது விஷயங்கள்ல தலையிடணுமா வேண்டாமான்னு நீங்க சொல்லுங்கய்யா. அதுல இன்டஸ்ட்ரி தலையிட வேண்டாம். தண்ணீ பிரச்னைய பார்த்துக்கிறதுக்கு அரசாங்கம் இருக்கு. நீங்க பாத்துக்குவீங்க. காவிரி பிரச்னையில் எங்களைப் போன்ற நடிகர்களால் என்ன செய்ய முடியும். யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களை அனுசரித்துத்தான் செல்ல முடியும். மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் போராடுவார்கள். நடிகர்களை நடிக்க விடுங்கள். அரசியலையும், சினிமாவையும் ஒண்ணு சேர்க்காதீர்கள். நாங்க நிம்மதியா வேலை செய்யணும். ஏதாவது பண்ணுங்கய்யா. நாங்க டயர்டா இருக்கோம்.
இவ்வாறு அஜித் பேசிய பேச்சுதான் இன்று தமிழ் திரையுலகையே புரட்டிப் போடும் அளவுக்கு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜித் பேசிய பேச்சு சரியா, தவறா? என்ற உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே..!
- தினமலர் சினி டீம் -