மாரடைப்பு ஏற்பட்ட விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை - ஆபத்தான நிலையில் தொடர் சிகிச்சை
16 ஏப், 2021 - 12:33 IST
தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்றுள்ளது. தொடர்ந்து எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகர் விவேக். ‛மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர். தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். ரஜினி, கமல் தொடங்கி இப்போதுள்ள நடிகர்கள் வரை 200க்கும் அதிகமான படங்களில் காமெடி நடிகராக நடித்தார். நான் தான் பாலா, வெள்ளைப்பூக்கள் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
படங்களில் சமூக கருத்துக்களை கூறி சின்னக்கலைவாணர் என பெயர் எடுத்தவர். சமூகம் சார்ந்த விஷயங்களுக்கும் குரல் கொடுப்பவர். பசுமை இந்தியாவை முன்னெடுத்து கோடிக்கணக்கான மரக்கன்றுகளை இவர் நட்டுள்ளார். தொடர்ந்து அது தொடர்பான விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். கொரோனா காலத்தில் இசையிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர், நாட்டு நலன் குறித்து விஷயங்களையும் தனது கருத்தாக டுவிட்டரில் தெரிவித்து வந்தார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். மேலும், ‛‛மக்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும், அதுகுறித்த அச்சம் வேண்டாம். தடுப்பூசி செலுத்திய பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது என விவேக் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தனது வீட்டில் இருந்த விவேக்கிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவேக்கின் மைத்துனரிடம் நாம் கேட்டபோது அவர் கூறுகையில், ‛‛நேற்று தான் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி எடுத்து கொண்டார். நன்றாகத்தான் இருந்தார். திடீரென காலையில் லேசாக நெஞ்சு வலிப்பதாக கூறினார். உடம்பெல்லாம் வியர்த்தது. பிறகு அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்துள்ளோம். எமர்ஜென்சியில் அவர் உள்ளார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றார்.
ஆஞ்சியோ சிகிச்சைமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு மூச்சுதிணறலும் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பரிசோதனையில் செய்ததில் மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் சுயநினைவுடன் இருப்பதாக விவேக்கின் செய்தி தொடர்பாளர் நிகில் தெரிவித்துள்ளார்.
எக்மோ கருவியுடன் சிகிச்சைவிவேக் உடல்நிலை குறித்து சிம்ஸ் மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது : விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சுயநினைவு இன்றி எங்களது மருத்துவமனையில் காலை 11மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் 100 சதவீதம் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது எக்மோ உயிர்காக்கும் கருவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைக்கு அவரது உடல்நிலை மோசமாக தான் உள்ளது. 24 மணிநேரத்திற்கு பின்பே எதையும் சொல்ல முடியும். கொரோனா தடுப்பூசி போட்டதால் விவேக்கிற்கு பாதிப்பு ஏற்படவில்லை. இது முழுக்க முழுக்க மாரடைப்பால் ஏற்பட்ட பிரச்னை மட்டுமே என தெரிவித்துள்ளனர்.