விஜய் டிவியில் கடந்து நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் கமல்ஹாசன். அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு தான் கமல் அரசியல் கட்சி தொடங்குவதற்கு அச்சாரம் போட்டது என்று கூட சொல்லலாம். அந்த நிகழ்ச்சியை தனது அரசியலுக்காகவும் பயன்படுத்திக்கொண்டார் கமல்.
இந்நிலையில் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சி ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தொடங்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த நிகழ்ச்சியை கமலுக்குப் பதிலாக சிம்பு தொகுத்து வழங்கப்போவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
தற்போது சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலிலும் தீவிரம் காட்டி வரும் கமல், ஒருவேளை தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற்றால் அரசியலில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்துவார். அதன்பிறகு அவரால் பிக்பாஸில் முன்பு போன்று பங்கேற்க இயலாது என்பதால் பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மாற வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் அரசியலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதபட்சத்தில் மீண்டும் கமலே பிக்பாஸை தொடருவார் என்று இன்னொரு கருத்தும் உள்ளது. என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகிறதோ? மே 2-ந்தேதி வரை வெயிட் பண்ணி பார்ப்போம்.