கொரோனா மூன்றாவது அலை 'ஒமிக்ரான்' அலையாக கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருகிறது. சில மாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே என்ற அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகிறது.
நாட்டின் தலைநகரான டில்லியில் தியேட்டர்களை முழுவதுமாக மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. டில்லியில் சுமார் 90 தியேட்டர்கள் உள்ளன. அவற்றில் முக்கிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் அடங்கும். தியேட்டர்கள் மூடல் எவ்வளவு நாளைக்கு என்பது பற்றி மாநில அரசு அறிவிக்கவில்லை.
இதன் காரணமாக ஜனவரி 7ம் தேதி வெளியாக உள்ள 'ஆர்ஆர்ஆர்', ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ள 'ராதேஷ்யாம்' ஆகிய படங்கள் பாதிக்கும் சூழ்நிலை வந்துள்ளது. அடுத்த பத்து நாட்களுக்குள் மேலும் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் இரவுக் காட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும். இன்னும் சில மாநிலங்களில் 50 சதவீத இருக்கை அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த வாரம் வெளியாவதாக இருந்த 'ஜெர்ஸி' படத்தை படக்குழுவினர் தள்ளி வைத்துவிட்டார்கள். பொங்கலை முன்னிட்டும் பலர் படங்களை வெளியிட தயாராக இருக்கிறார்கள். தற்போது பரவி வரும் கொரோனா அலை என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தப் போகிறதென்பது இனிமேல் தான் தெரிய வரும்.