கடந்த நான்கு வருடங்களுக்கு முன் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி, சிறை சென்று, ஜாமினில் மீண்டு வந்தார் பிரபல மலையாள நடிகர் திலீப். கடந்த இரண்டு வருடங்களாக வழக்கு மெதுவாக நகர்ந்து வந்த நிலையில், சமீபத்தில் நடிகர் திலீப்பின் நண்பரும் இயக்குனருமான பாலச்சந்திர குமார் அவருக்கு எதிராக திரும்பி, இந்த வழக்கு குறித்த சில பரபரப்பான தகவல்களை நீதிமன்றத்தில் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் இந்த வழக்கு சம்பந்தமாக புதிதாக சிலரை விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். நீதிமன்றமும் அதற்கான அனுமதி அளித்துள்ளது.
அதே சமயம் இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்று எண்ணிய நடிகர் திலீப் கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே தனக்கு முன்ஜாமின் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார். ஏற்கனவே இரண்டு முறை இந்த முன் ஜாமின் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்த நீதிமன்றம் அந்த மனுவை விசாரித்தது.
ஆனால் போலீஸார் தரப்பில், தற்போது கிடைத்த கூடுதல் தகவலின்படி இந்த வழக்கில் இன்னும் தங்களது விசாரணையை முடிக்க கூடுதல் அவகாசம் தேவை என கூறப்பட்டதால், இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்தவகையில் மூன்றாவது முறையாக முன்ஜாமின் மனு விசாரணை தள்ளிப்போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.