ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

மின்னல் விளையாடும் உன் விழிகளை கண்டு விண்மீன்களும் பொறாமையில் பொங்கும், ரோஜா இதழ்களில் செதுக்கியதோ உன் செவ்விதழ்கள், கார்மேகமும் ஆசைப்படும் உன் கருங்கூந்தலில் சேர, வெண்மேகத்தில் உருவானதோ தேகம் என இளசுகள் கொண்டாடும் நடிகை சாய் அபிநயா மனம் திறந்த நிமிடங்கள் இதோ....
பிறந்தது, வளர்ந்தது மதுரை. அப்பா ஓய்வுபெற்ற வங்கி மேலாளர். அதனால் திருப்பூரில் பள்ளி படிப்பு துவங்கி, மதுரையில் கல்லுாரி பட்டப்படிப்பை முடித்தேன். அம்மா தான் எனக்கு எல்லாம். அம்மாவின் ஆசை, லட்சியம் எல்லாமே நான் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது தான். முதலில் விளம்பர படங்கள், குறும்படம், ஆல்பம் என கலைப்பயணம் துவங்கியது.
எங்கு ஷூட்டிங் போனாலும் அம்மா தான் என்னை அழைத்து செல்வார். குறும்படத்தில் நடிப்பை பார்த்த அம்மாவின் உறவினர் மூலமாக சினிமாத்துறையில் வாய்ப்பு கிடைத்தது. முதலில் சிறிய கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்தேன். இதுவரை ராபின்ஹூட், சீமராஜா, தேவராட்டம், காடைபுறா கலைக்குழு, கொட்டுக்காளி என பத்துக்கும் மேற்பட்ட படத்தில் நடித்து விட்டேன்.
கொட்டுக்காளி படம் என் வாழ்க்கையை மாற்றி விட்டது. அதில் அண்ணன் மீது அதிக பாசமுள்ள தங்கை கதாபாத்திரம். மதுரை சுற்றியுள்ள கிராம பெண்களின் வாழ்க்கை முறையே என் கதாபாத்திரமாக அமைந்ததால் இப்படத்தில் நடிக்க எனக்கு எளிமையாக இருந்தது.
இப்படத்திற்காக மூன்று மாதம் வெயிலில் நின்று இயற்கையாக கறுப்பாக வேண்டும் என்பது இயக்குநர் உத்தரவு. ஷூட்டிங் ஸ்பாட்டில் மூன்று மாதமாக நிழல் இருக்கும் பக்கமே போகவில்லை. கஷ்டப்பட்டு உழைத்ததற்கு கிடைத்த வரவேற்பு பெருமகிழ்ச்சி தந்தது.
படத்தை பிரிவியூ ஷோவில் பார்த்த சில இயக்குநர், நடிகர்கள் திரையில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் பார்த்துவிட்டு அருகில் மார்டன் உடையில் நான் நின்றிருந்ததை பார்த்து 'நீதானா அந்த பொண்ணு' என கேட்டு ஆச்சர்யப்பட்டு விட்டார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு என்றாலும் படம் பார்த்துவிட்டு அவர் பாராட்டியது என்றும் மறக்க முடியாது.
தற்போது இயக்குநர் மணிகண்டனின் மக்கள் காவலன், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகங்கை சீமையிலே ஆகிய படத்தில் நடித்து வருகிறேன். நான் பெயர் சொல்லும் நடிகையாக வேண்டும் என்ற அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்பதே என் வாழ்நாள் ஆசை. புதுமுகங்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்று தான். பொறுமையும், தைரியமும் முக்கியம். வாய்ப்பு கிடைப்பதே அரிது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்தினால் வெற்றி நம் வசப்படும் என்றார்.