ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மாஸ் ஹீரோக்கள் படத்துக்கான ஓபனிங், ரசிகர்களின் அமோக வரவேற்பு என, சந்தானத்தின் முகத்தில் சந்தோஷக் களை தாண்டவமாடுகிறது. தில்லுக்கு துட்டு படம் பார்த்தவர்கள், அதில் சந்தானம் அடித்துள்ள ரகளையை சொல்லி சொல்லி சிரிக்கின்றனர். இனி சந்தானம் பேசுவார்.
தில்லுக்கு துட்டு படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது?
மாஸ் ஹீரோக்கள் படத்துக்கான ஓபனிங் கொடுத்த மக்களுக்கு முதலில் நன்றி. நாங்கள் நினைத்து பார்க்காத இடத்தில் எல்லாம் கைதட்டல் கிடைக்கிறது. பல காட்சிகளில் ரசிகர்கள் வாய்விட்டுச் சிரிக்கின்றனர். இத்தனைக்கும், இந்த படத்தில் பெரிய ஹீரோயின் இல்லை; பெரும்பாலானோர் புதுமுகங்கள் தான்.
இந்த படத்தில், யாருடைய நடிப்பு உங்களை கவர்ந்தது?
ஹீரோயின் அப்பாவாக நடித்த சுக்லாவை பார்த்து அசந்து போய் விட்டேன்; காரணம் அவர் ஹிந்தியில் பெரிய நடிகர். தமிழ் சுத்தமாக தெரியாது. ஆனாலும், வசனங்களை புரிந்து, அட்டகாசமாக நடித்துள்ளார். சபாஷ் நாயுடு படத்திலும் நடிக்கிறார்.
தொடர்ந்து ஹீரோவாக நடிப்பதால், உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறீர்களோ?
முன்பெல்லாம், ஆர்யாவுடன் ஊர் சுற்றுவேன். மகாபலிபுரம் பக்கம், சைக்கிள் ஓட்டுவதற்கு கூட்டிப் போய் விடுவான். அப்புறம் நீச்சல் பயிற்சி செய்வான். ஆர்யா அளவுக்கு என்னால் கஷ்டப்பட முடியாது. ஆனாலும், இப்போது சாப்பாடு விஷயத்தில் கவனமாக இருக்கிறேன். கண்ணில் பார்ப்பதை எல்லாம் சாப்பிடுவது இல்லை. ஹீரோவாகி விட்டால், அதற்கு ஏற்ற மாதிரி தயாராக இருக்க வேண்டும் அல்லவா?
அடுத்து வரும் படங்கள்?
சர்வர் சுந்தரம் என்ற படம், 60 சதவீதம் முடிந்துள்ளது; டிசம்பரில் ரிலீசாகும். அப்புறம், வனத்துறை அதிகாரியாக, ஒரு படத்தில் நடிக்கிறேன். அதற்கு பயிற்சி எடுத்து வருகிறேன். அதைத் தொடர்ந்து, மேலும் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க சம்மதித்திருக்கிறேன்.
பேய் சீசன் என்பதால், நீங்களும் பேய் பக்கம் போயிட்டீங்களா?
நானும் இப்படித் தான் தயாரிப்பாளரிடம் கேட்டேன். எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்து, ஆக் ஷன் படங்கள் வரத்தான் செய்கின்றன. ஜெமினி கணேசன் காலத்தில் இருந்து, காதல் படங்கள் வரத்தான் செய்கின்றன. அதேபோல் தான், பேய் படங்களும்; அவ்வப்போது வரும்.
உங்களுக்கு மட்டும் அழகான ஹீரோயின் கிடைப்பது எப்படி? நீங்கள் தான் ஹீரோயினை தேர்வு செய்கிறீர்களா?
அதெல்லாம் இல்லைங்க. அந்த பக்கமே தலைவச்சி படுக்க மாட்டேன். இயக்குனர், தயாரிப்பாளர் தான், ஹீரோயினை தேர்வு செய்வர்.
விஜய் அளவுக்கு டான்ஸ் ஆடியிருக்கீங்களே?
எல்லாரையும் நான் கலாய்ப்பேன். என்னை நீங்கள் கலாய்கிறீங்கன்னு நினைக்கிறேன். இந்த படத்தில், என்னால் எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறேன். கலர் கலரா கண்ணாடி போட்டு, நானும் ஹீரோ தான்னு நடித்தால் எடுபடாது. ரசிகர்கள் தெளிவாக இருக்கின்றனர். உன்னிடம் என்ன புதிதாக இருக்கிறதோ, அதை செய்து காட்டு என்கின்றனர். அதற்கான உழைப்பை நான் கொடுத்திருக்கிறேன்.
ரொம்ப முக்கியமான கேள்வி; இனி, ஹீரோவாக மட்டும் தான் நடிப்பீர்களா?
இப்போதைக்கு ஐந்து படங்களில் நடிக்கிறேன். எல்லா படங்களிலுமே ஹீரோவாகத் தான் நடிக்கிறேன். இப்போதைக்கு இந்த நிலை தொடரும்.
இப்போது ரசிகர்கள் எந்த மாதிரியான படத்தை விரும்புகின்றனர்?
ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பது தான், ரசிகர்கள் எதிர்பார்ப்பு. கதை, காமெடி இப்படி எதிலாவது வித்தியாசமாக செய்ய வேண்டும். பழைய குருமாவை திரும்ப சமைச்சு கொடுக்காதீங்க; புதிதாக ஏதாவது சமைத்து கொடுங்கள் என்கின்றனர். வித்தியாசமாக செய்தால், அதை ஏற்றுக் கொள்கின்றனர்.