ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'தெறி' படத்தை எம்ஜி அடிப்படையில் வாங்க முடியாது, விகிதாச்சார அடிப்படையில் மட்டுமே வெளியிட முடியும் என செங்கல்பட்டு ஏரியா திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து உலகெங்கிலும் வெளியான 'தெறி' படம் செங்கல்பட்டு ஏரியாவில் சுமார் 60 திரையரங்குகளில் வெளியாகாமல் போனது. இதனால் சுமார் 10 கோடிக்கும் மேல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கமும், திரையரங்கு உரிமையாளர் சங்கமும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தங்களது நிலைப்பாட்டைத் தெரிவித்தார்கள். இனி, 'தெறி' படத்தைத் திரையிடாத திரையரங்குகளுக்கு ஒத்துழைப்பு இல்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இருந்தாலும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்களது நிலையை மாற்றிக் கொள்ளவேயில்லை.
'தெறி' படம் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியாகாதது இனி வரும் படங்களுக்கும் நல்லதல்ல, திரையுலகத்திற்கும் நல்லதல்ல என்று நினைத்த சிலர் இரு தரப்பிற்கும் இடையே சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். பிரபல வினியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் இதை முன்னெடுத்துச் சென்றதாகத் தெரிகிறது.
கடந்த சில நாட்களாகவே நடந்த சமாதானப் பேச்சு வார்த்தை நேற்று இரவு முடிவுக்கு வந்தது. அதன்படி இனி செங்கல்பட்டு ஏரியாவில் விகிதாச்சார அடிப்படையில் மட்டுமே படங்களைத் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தயாரிப்பாளர்களும் சம்மதித்துவிட்டதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சென்னை மாநகர ஏரியாவைப் போலவே இனி செங்கல்பட்டு ஏரியாவிலும் விகிதாச்சார அடிப்படையில்தான் படங்கள் திரையிடப்படும்.
மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வந்த பிறகு திரைப்பட வியாபாரத்தில் மாற்றம் ஏற்பட்டது. தற்போது செங்கல்பட்டு ஏரியாவில் நடைபெற்ற மோதலால் எதிர்வரும் காலங்களில் திரைப்பட வியாபாரத்தில் மேலும் மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் அதிகம்.
இதனிடையே தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளதால் செங்கல்பட்டு ஏரியாவில் சில தியேட்டர்களில் மட்டும் தெறி படம் ரிலீஸாகியுள்ளது. படம் வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டதால் பலர் படத்தை வாங்கவில்லை, சிலர் மட்டும் படத்தை ரிலீஸ் செய்துள்ளனர்.