ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள், அவர்களில் வெகு சிலரே காமெடியில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தனர். அப்படி ஒருவர் தான் சுப்பிரமணி என்கிற கவுண்டமணி. கொங்கு மண்டலத்தை சேர்ந்த இவர் கோயம்புத்தூர் மாவட்டம், வல்லகொண்டபுரத்தில் 1939ம் ஆண்டு மே 25ம் தேதி பிறந்தார்.
ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்து வந்தகவுண்டமணி தனது 26வது வயதிலேயே சினிமா துறையில் கால் பதித்தார். 1964ம் ஆண்டு நடிகர் நாகேஷ் நடிப்பில் வெளிவந்த "சர்வர் சுந்தரம்" திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்த சிறு சிறு வேடங்களில் நடித்து
வந்தார்.
1977 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வந்த "16 வயதினிலே" திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த வேடமே தமிழ் ரசிகர்களுக்கு இவரை அடையாளம் காண்பித்தது. இப்படத்தில் இவர் பேசி நடித்த 'பத்த வச்சுட்டயே பரட்ட' என்ற வசனம் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று. வந்த "கிழக்கே போகும் ரயில்" "சிகப்பு ரோஜாக்கள்" "புதிய வார்ப்புகள்" "சுவரில்லாத சித்திரங்கள்" போன்ற படங்களில் இவருக்கு குறிப்பிடும்படியான கதாபாத்திரங்கள் கிடைக்க தமிழ் திரைப்படங்களின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவரானார்.
மற்றொரு நகைச்சுவை நடிகரான செந்திலோடு இணைந்து இவர் அமைத்த நகைச்சுவை காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றன. ஹாலிவுட்டின் 'லாரல்-ஹார்டி' ஜோடியை போல் கோலிவுட்டின் 'லாரல்-ஹார்டி' எனும் அளவுக்கு இவர்கள் இருவரின் பங்களிப்பு தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் பிண்ணி பிணைந்திருந்தது. ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் 1989 ஆம் ஆண்டு இயக்குநர் கங்கை அமரனின் இயக்கத்தில் வெளிவந்த "கரகாட்டக்காரன்" திரைப்படத்தில் வரும் வாழைப்பழ காமெடி ஒன்று போதும் இவர்களின் நகைச்சுவை நடிப்பிற்கு.
80 90களில் வந்த தமிழ் திரைப்படங்களில் இந்த இருவரின் நகைச்சுவை காட்சிகள் இல்லாத திரைப்படமே இல்லை எனும் அளவுக்கு இருந்தது. "வைதேகி காத்திருந்தாள்", "சேரன் பாண்டியன்", "நாட்டாமை", "கரகாட்டக்காரன்", "தாலாட்டு கேக்குதம்மா", "சின்ன கவுண்டர்" என்று இந்த கூட்டணியின் நகைச்சுவை பயணம் தொடர்ந்திருந்தது.
முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த கவுண்டமணி ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். "பிறந்தேன் வளர்ந்தேன்" "ராஜா எங்க ராஜா" போன்ற திரைப்படங்களில் இவர் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். ஒரு சில படங்களில் குணசித்திர வேடமேற்றும் நடித்திருக்கும் நடிகர் கவுண்டமணி ஏறக்குறைய 900 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் ஆளுமையாக காமெடியில் கிங்காக வலம் வருகிறார் இந்த கவுண்டர் மணியான கவுண்டமணி.