2019ல் மோகன்லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான 'லூசிபர்' என்கிற திரைப்படம் வெளியானது. அரசியல் பின்னணியில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கிட்டத்தட்ட 200 கோடி வசூலை தொட்டது. அதன்பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என பிரித்விராஜ் கூறி வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இந்த இரண்டாம் பாகத்திலும் இடம் பிடித்துள்ளனர்.
ஏற்கனவே மோகன்லாலை வைத்து இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் டொவினோ தாமஸ் இணைந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாகவே மூன்றுக்கும் மேற்பட்ட படங்களில் பிஸியாக மாறி மாறி நடித்து வந்தார். அதில் அவர் இறுதியாக நடித்து வந்த படத்திற்காக புதிய கெட்டப்பில் இருந்ததால் லூசிபர் இரண்டாம் பாகத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தாமதமானது. இந்த நிலையில் கைவசம் இருந்த படங்களின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு தற்போது லூசிபர்-2வுக்குள் நுழைந்துள்ளார் டொவினோ தாமஸ்.