மாரீசன்
விமர்சனம்
தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ்
இயக்கம் : சுதீஷ் சங்கர்
நடிப்பு : வடிவேலு, பஹத் பாசில், விவேக்பிரசன்னா, சித்தாரா, கோவை சரளா
இசை : யுவன்சங்கர்ராஜா
ஒளிப்பதிவு : கலைச்செல்வன் சிவாஜி
வெளியான தேதி : ஜூலை 252025
நேரம் : 2 மணிநேரம் 34 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5
அல்சைமர் என்ற ஞாபக மறதிநோயால் அவதிப்படும் வடிவேலுவின் வங்கி கணக்கில் ரூ 25 லட்சம் இருப்பதை அறிந்த திருடனான பஹத் பாசில், அதை ஆட்டையை போட திட்டமிடுகிறார். அவர் பின்னாலேயே சுற்றுகிறார். வடிவேலு வைத்திருக்கும் ஏ.எடி.எம் பின் நம்பரை பஹத் பாசில் தெரிந்து கொண்டாரா? பணத்தை வடிவேலு இழந்தாரா என ஆரம்பிக்கிறது கதை. ஆனால், இடைவேளைக்குபின் வடிவேலு கேரக்டரில் அதிரடி மாற்றங்கள். சில 'சம்பவங்களை' செய்கிறார். உண்மையில் வடிவேலு யார்? வடிவேலு, பஹத் பாசில் உறவு எப்படி முடிகிறது என்பது மாரீசன் கதை. சுதீஷ் சங்கர் இயக்கி இருக்கிறார். கதை, திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் கிருஷ்ண மூர்த்தி.
பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து விடுதலையாகும் திருடனான பஹத் பாசில், நாகர்கோவிலில் ஒரு வீட்டில் திருட நினைக்கிறார். அங்கே இருக்கும் ஞாபக மறதிக்காரரான வடிவேலு வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கறக்க நினைக்கிறார். அதற்கு அவரின் ஏடிஎம் பின் தேவைப்படுகிறது. அதை தெரிய வடிவேலு சொல்படி திருவண்ணாமலை, கோவை என அவருடன் பைக்கிலேயே சுற்றுகிறார். இப்படி பயணத்திலேயே முதற்பாதி முடிந்துவிடுகிறது. அடுத்த பாதி கதை வேறு மாதிரி நகர்கிறது. வடிவேலுவின் உண்மையான குணம், அவர் நோக்கம் வெளிப்படுகிறது. அப்புறம் கிளைமாக்சில் இன்னொரு டிவிஸ்ட்.
சற்றே வயதான வேடத்தில், தனக்கே உரிய, வழக்கமான மேனரிசம், டயலாக் டெலிவரி, காமெடி என எதையும் வெளிப்படுத்தாமல் கதைக்கு தக்கபடி நடித்து இருக்கிறார் வடிவேலு. கலகலவென, காமெடி செய்யும் வடிவேலுவை இப்படி பார்ப்பது முதலில் வித்தியாசமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் கேரக்டருடன் ஒன்றி விட, நாமும் அவரை பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி பார்க்க ஆரம்பித்துவிடுவோம். குறிப்பாக, வடிவேலு ஞாபகமறதியால் அவர் தவிக்கும் சீன்கள், இடைவேளைக்குபின் வேறு மாதிரி மாறும் சீன்கள் செம. வடிவேலுவுக்கும், அவர் மனைவியாக வரும் சித்தாராவுக்குமான பாசப்பிணைப்பு அருமை. கடைசியில் பெண் குழந்தைகள் மீதான பாசம், பரிதவிப்பில் அவர் பேசும் வசனங்களும், செயல்களும் இயக்குனரின் சமூக அக்கறையை காண்பிக்கின்றன. மனைவிக்காக வடிவேலு எடுக்கும் முயற்சிகள் உணர்ச்சிபூர்வமானவை, கொஞ்சம் கோபமானவை.
திருடனாக வரும் பஹத் பாசில் நடிப்பு தான் படத்தின் பெரிய பிளஸ். முதற்பாதி முழுக்க அவர் கலகலப்பாக படத்தை நகர்த்தி இருக்கிறார். அவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் பஹத். என்ன, இன்னுமும் அவர் பேச்சில் அதிக மலையாள வாடை. சில வார்த்தைகள் புரிய கஷ்டமாக இருக்கிறது. வடிவேலுவை ஏமாற்ற அவர் நடிப்பதும், ஒரு கட்டத்தில் அவர் யார் என்பதை உணர்ந்து தவிப்பதும் செம.
வடிவேலு மனைவியாக சில சீன்களில் வந்தாலும் ‛புது வசந்தம்' சித்தாரா மனதில் நிற்கிறார். இவர்களை தவிர, பஹத் அம்மாவாக வரும் ரேணுகா, போலீஸ் அதிகாரியாக வரும் கோவை சரளாவுக்கு அந்த கேரக்டர் செட்டாகவில்லை. நடிப்பில் அவ்வளவு செயற்கைதனம். வடிவேலு நண்பராக வரும் லிவிஸ்டனும் நடித்து கொட்டுகிறார். சின்ன கேரக்டராக அறிமுகம் ஆகி, கிளைமாக்சில் மிரட்டியிருக்கிறார் விவேக் பிரசன்னா. யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை ஓகே. பயணம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கேமரா வொர்க் ஓகே.
படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். வில்லனாக காட்டப்படும் சிலரின் பின்னணி குறித்து விரிவான சீன்கள் இல்லை. சில வசனங்களின் மூலம் அவர்கள் பிளாஷ்பேக்கை சொல்கிறார்கள், ஒருவகையில் அது குடும்பத்தினருடன் பார்க்க வைக்ககூடிய பாசிட்டிவ் மூவ்தான். என்ன, மெய்யழகன் மாதிரி இரண்டு ஹீரோ சப்ஜெட்டை எதிர்பார்த்தால் இது வேறு மாதிரியான கதை. முதற்பாதி காமெடி, பிற்பாதி திருப்பங்கள், திரில்லர் என வேறு திசைக்கு நகர்கிறது. போலீஸ் விசாரணையில் பல லாஜிக் சொதப்பல்கள். ஒரு செல்போனை டிராக் செய்யும் போலீஸ் தமிழ் சினிமா விதிப்படி, கடைசியில்தான் வருகிறது. வடிவேலு கேரக்டர் பெயரில் ஜாதி ஏன்? என சில மைனஸ் இருக்கிறது. படத்தின் தலைப்புக்கும், கதைக்குமான தொடர்பு பலருக்கு பிடிபடவில்லை.
ஞாபக மறதி விஷயத்தில் வரும் டிவிஸ்ட், வடிவேலுவின் கிளைமாக்ஸ் செயல்பாடுகள், சித்தாரா போர்ஷன் ஆகியவை டச்சிங் என்றாலும், அந்த பயணம் இழுத்துக்கொண்டே போவதை எடிட் செய்து இருக்கலாம். பல சீன்களில் பஹத் பாசில், வடிவேலு போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். காமெடியை எதிர்பார்ப்பில் சென்றால் ஏமாற்றமாக இருக்கும், கதையை நம்பி வந்தால் ஏமாற்றம் கிடைக்காது. ஒட்டு மொத்தத்தில் அழுத்தமான மலையாள படம் பார்த்த மாதிரி இருக்கிறது, வடிவேலு சிறந்த குணசித்திர நடிகராக மாறியிருக்கிறார்.
வடிவேலுவை வைத்து பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தீர்வு வேண்டும் என்ற விழிப்புணர்வு கதையை எடுத்து இருக்கிறார் இயக்குனர். உங்க வீட்டில் பெண் குழந்தைகள் பேசுவதை கவனிங்க. அவங்க சோகமாக இருந்தால், மனம் விட்டு பேசுங்க என்ற கருத்து இன்றைக்கு தேவையான ஒன்று. பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள், அந்த குடும்பத்தினர் வலியை, வடிவேலு மாதிரியான நடிகரை வைத்து சீரியசாக கதை சொல்லியிருப்பதும் இயக்குனர் தைரியத்தை, ஸ்கிரிப்ட் மீதான நம்பிக்கையையும் காண்பிக்கிறது.
நல்ல கரு, திறமைசாலி நடிகர்கள், பெரிய பட நிறுவனம் இருந்தும், திரைக்கதை, காட்சி அமைப்புகளில் கமர்ஷியல் சேர்க்காமல், கதைக்கு, பெண்கள் குழந்தை மீதான அக்கறையில் எடுக்கப்பட்ட கரு இது. என்னால் சிரிக்க வைக்கவும் முடியும். இப்படி கலங்க வைக்க முடியும் என்று பல இடங்களில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் வடிவேலு. ஒரு நல்ல கதைக்காக தனது வழக்கமான பாணியை விட்டு விலகி, இப்படிப்பட்ட படத்தில் இந்த வயதான கேரக்டரில் நடிக்க துணிந்ததற்காக அவரை பாராட்டலாம். என்ன, இன்னும் அழுத்தமாக சொல்லியிருந்தால் பல விருதுகளை அள்ளி இருக்கும்.
மாரீசன் - காமெடி படமல்ல, கலங்க வைக்கும் கதை
மாரீசன் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
மாரீசன்
- நடிகர்
- இயக்குனர்
வடிவேலு
நடிகர், காமெடியன்ல பாடகர் என பல பரிமாணங்களுடன் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வரும் வடிவேலு, மதுரையைச் சேர்ந்தவர். 1991ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வந்த வடிவேலு, பின்னர் கவுண்டமணி-செந்தில் ஜோடியுடன் இணைந்து காமெடி வேடங்களில் நடித்து வந்தார். 1994ம் ஆண்டு காதலன் படத்திற்கு பின் முன்னணி காமெடியனாக உருவெடுத்தார். பிரண்ட்ஸ், பாரதி கண்ணம்மா, வெற்றி கொடிகட்டு, வின்னர், கிரி, தலைநகரம், சந்திரமுகி உள்ளிட்ட படங்களின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற வடிவேலு, இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோ ஆனார். இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வடிவேலு, 5 முறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை பெற்றுள்ளார்.s
Subscription
































