நடிகர்கள் : மம்முட்டி, கார்த்திகா முரளிதரன், ஜாய் மேத்யூ, முத்துமணி, கே.பி.ஏ.சி லலிதா மற்றும் பலர்
ஒளிப்பதிவு : என்.அழகப்பன்
இசை : பிஜிபால்
கதை : ஜாய் மேத்யூ
டைரக்சன் : கிரிஷ் தாமோதர்
மாணவர் போராட்டத்தால் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட, ஊட்டியில் படிக்கும் கார்த்திகா சொந்த ஊரான கோழிக்கோடு கிளம்புகிறார். ஆங்காங்கே கலவரம் ஏற்பட்டு பேருந்து எதுவும் ஓடாததால் திகைத்து நிற்கும் கார்த்திகாவுக்கு, அந்த வழியில் ஏதேச்சையாக ஆபத்பாந்தவனாக காரில் வரும் மம்முட்டி லிப்ட் கொடுக்கிறார்.. தனது தந்தையின் நெருங்கிய நண்பர் என்பதால் எந்த தயக்கமும் இன்றி அவருடன் கோழிக்கோடுக்கு காரில் பயணமாகிறார் கார்த்திகா.
இந்த தகவலை தனது தாய்க்கும் தந்தைக்கும் போனில் தெரிவிக்கும் கார்த்திகா ஒரு ஜாலியான பயணத்திற்கு தயாராகிறார்.. அதேசமயம் ஒரு தந்தையாக ஜாய் மேத்யூவுக்கு அந்தக்கணம் முதல் பரபரப்பு பற்றிக்கொள்கிறது. என்னதான் மம்முட்டி நண்பர் என்றாலும், அவரது சில கல்யாண குணங்களைப்பற்றி ஜாய் மேத்யூவுக்கு நன்றாக தெரியும் என்பதால் தனது மகளின் பாதுகாப்பு குறித்து அவருக்கு டென்ஷன் அதிகரிக்கிறது..
இந்நிலையில் வரும் வழியில் இரவு செக்போஸ்ட் அடைக்கப்பட்டு விட்டதால் தெரிந்த ஓரிடத்தில் தங்கி மறுநாள் காலை கிளம்பி வருவதாக மம்முட்டி கூறுகிறார். இது ஜாய் மேத்யூவின் தவிப்பை இன்னும் அதிகரிக்க வைக்க, மறுநாள் இடியை இறக்கினாற்போல ஏதோ ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அவர் மகளை குறித்து விசாரிக்கும் போலீஸார், அவரை ஸ்டேஷனுக்கு வரச் சொல்கின்றனர். பதறியடித்துக்கொண்டு கிளம்புகின்றனர் பெற்றோர். இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது..? மகள் விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை போனது ஏன் என்பதற்கு கடைசி இருபது நிமிடம் விடை சொல்கிறது.
நண்பர் கேரக்டரில் மம்முட்டி.. பயணம் பற்றிய படம் என்பதால் இரண்டு மணி நேர படத்தில் மம்முட்டி வரும் எண்பது சதவீத காட்சிகளில் கார் ஓட்டுவதுதான் பிரதானமாக இருக்கிறது.. மேலும் படம் முழுக்க இவர் நல்லவரா கெட்டவரா என கணிக்க முடியாமல் நாம் திண்டாடுவதுதான் மம்முட்டியின் நடிப்பிற்கும் அவரது கேரக்டர் வடிவமைபிற்கும் கிடைத்த வெற்றி. பெண்கள் விஷயத்தில் அப்படி ஒரு வீக்னெஸ் கொண்ட ஆண் இந்த சூழலில் தனது உண்மை முகத்தை எப்படி வெளிப்படுத்துகிறான் என்பதையும் இதைவிட சிறப்பாக காட்சிப்படுத்த முடியுமா என தெரியவில்லை.
பொதுவாக டீனேஜ் பெண் குழந்தைகள் கொண்ட தந்தைகள் கூட, தங்கள் நட்பு வட்டாரத்தில் பார்ட்டி, கொண்டாட்டம் என இருக்கும்போது இளைஞர்களை போல ஜாலியாக மாறிவிடுவது உண்டு.. அப்போது பெண் விஷயங்களில் தாங்கள் எப்படிப்பட்ட ஜித்தர்கள் என சிலர் கர்வமாகவும் சந்தோஷமாகவும் தங்களை சித்தரிப்பதும் உண்டு.. ஆனால் அப்படிப்பட்ட ஒரு நண்பருடன் தனது மகள் காரில் பயணிக்கிறாள், இரவில் வெளி இடத்தில் தங்க வேண்டிய சூழலில் இருக்கிறாள் எனும்போது ஒரு தந்தையாக என்னென்ன உணர்வுகள் தோன்றும்..? என்பதை நடிகர் ஜாய் மேத்யூ காட்சிக்கு காட்சி எதார்த்தம் மீறாமல் பிரதிபலித்திருக்கிறார். இவரே இந்தப்படத்தின் கதாசிரியர் என்பதால், மிகவும் பேசப்பட்ட 'ஷட்டர்' படத்திற்குப்பின் மீண்டும் ஒரு அழுத்தமான மேசெஜுடன் கூடிய கதையை கொடுத்திருக்கிறார்.
ரொமான்ஸ், சோகம் கலக்காத துறுதுறு பெண்ணாக கார்த்திகா முரளிதரன்.. தனது தந்தை வயதுள்ள நபருடன் காரில் நீண்ட தூரம் பயணிக்கிறோம் எனும்போது ஏற்படும் கலவையான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது அம்மாவாக வரும் முத்துமணி சராசரி அம்மாவாக காட்சியளித்தாலும் க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த பெருங்கூட்டத்தின் முன்னே வெடித்து பொங்குகிறாரே பார்க்கலாம்.. பெண்கள் பக்கம் இருந்து செம கைதட்டல்.
முக்கால்வாசி படம் முழுதும் மலைப்பகுதியில் கார் பயணம் என்பதால் அழகுக்கு அழகு சேர்க்கும் வேலையை மட்டும் செய்திருக்கிறது என்.அழகப்பனின் ஒளிப்பதிவு. பிஜிபாலின் பின்னணி இசை நம்மை த்ரில்லிங் மூடிலேயே வைத்திருக்கிறது.
அடுத்து என்ன நடக்குமோ என்கிற ஆர்வம் உண்டாவதால் கற் பயணம் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரிப்பீட் ஆனாலும் அலுக்கவில்லை. க்ளைமாக்ஸில் கலாச்சார காவலர்கள் போர்வையில் உலா வருபவர்களின் முகத்திரையை கிழித்தெறிந்து சபாஷ் சொல்ல வைக்கிறார் இயக்குனர் கிரிஷ் தாமோதர்..
நீண்டநாள் கழித்து மம்முட்டியை ரசிக்கும்படியான ஒரு படமாக உருவாகியுள்ளது இந்த 'அங்கிள்'.