பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் |
பொதுவாகவே சினிமா உலகில் ஒரு நடிகர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, பின் அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டு, அந்தக் கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து எடுத்து வெற்றி கண்ட இயக்குனர்களும் உண்டு, தோல்வி கண்ட இயக்குனர்களும் உண்டு. இது எம் ஜி ஆர், சிவாஜி காலங்களிலிருந்தே நிகழ்ந்து வரும் இயல்பான ஒன்று.
ஒரு தயாரிப்பாளரோ, இயக்குனரோ, தாங்கள் எடுக்க இருக்கும் திரைப்படத்தின் கதைக்கு இந்த நடிகர்தான் சரியான தேர்வு என நினைத்து, அவரை தொடர்பு கொள்ளும்போது, அந்த நடிகர் வேறு சில படங்களில் பிஸியாக இருப்பதையும் அல்லது ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு ஒரு சில நாட்கள் நடந்த நிலையில் சில கருத்து வேறுபாட்டின் காரணமாக அந்த திரைப்படத்திலிருந்து அந்த நடிகர் விலகுவதையும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அப்படி ஒரு நிகழ்வினை சந்தித்த ஒரு இயக்குநர், தன் திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்தை நடிக்க வைக்க விரும்பி, அவர் நடிக்க இயலாமல் போக, பின் நடிகர் மம்மூட்டியை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து வெளியிட்டு, வெற்றி பெறச் செய்த அந்த திரைப்படத்தைப் பற்றித்தான் நாம் இங்கே காண இருக்கின்றோம்.
தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் தான் இயக்கப் போகும் ஒரு படத்தின் கதையை நடிகர் விஜயகாந்திடம் சொல்ல, கதையைக் கேட்ட விஜயகாந்திற்கு கதை மிகவும் பிடித்திருந்தும், அவர் அப்போது அவரது 125வது படமான “உளவுத்துறை” திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக நடித்து வந்த காரணத்தால் அவரால் அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை ஏற்க முடியாமல் போனது. பின்னர் அந்தப் படத்திற்கான ஒளிப்பதிவாளர், இயக்குனரிடம் நடிகர் மம்மூட்டியை இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என கூற, அவர் நடிக்க சம்மதிப்பாரா? என இயக்குனர் அவரிடம் கேட்க, நான் அவரிடம் உங்களை அழைத்துச் செல்கின்றேன் நிச்சயம் சம்மதிப்பார் என உறுதிபட கூறி, இயக்குனரை நடிகர் மம்மூட்டியிடம் அழைத்துச் சென்றார் படத்தின் ஒளிப்பதிவாளர்.
முழுக் கதையையும் கேட்ட பின்பு நடிகர் மம்மூட்டியும் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார் ஒரு நிபந்தனையோடு. என்னிடம் நீங்கள் சொன்ன கதையை சொன்னபடியே எடுக்க வேண்டும் என்ற ஒற்றை நிபந்தனையை மட்டும் முன் வைத்து நடிக்கத் தொடங்கினார் நடிகர் மம்மூட்டி. படம் பாதி வளர்ந்த நிலையில், தன்னிடம் கதை சொல்லியபடியே படத்தை எடுத்திருக்கிறார்களா? என்பதை அறிய அதுவரை எடுத்த படத்தை போட்டுக் காட்டச் சொல்லி, அதை உறுதி செய்த பின்பு முழு ஒத்துழைப்பு தந்து படத்தில் நடித்து முடித்தார் நடிகர் மம்மூட்டி. அந்தப் படத்தை இயக்கியவர் இயக்குனர் கே பாரதி. இவரை நடிகர் மம்மூட்டியிடம் அழைத்துச் சென்ற படத்தின் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான். படம் “மறுமலர்ச்சி”.
1998ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த இத்திரைப்படம் வணிக ரீதியில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணி முக்கிய வேடமேற்று நடித்த முதல் தமிழ் படமாக வெளிவந்ததும் இத்திரைப்படமே. தமிழில் வெற்றி பெற்ற இத்திரைப்படம் பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது. ஒரு நல்ல திரைப்படத்தில் தன்னால் நடிக்க முடியாமல்; போனதை எண்ணி வருத்தப்பட்ட நடிகர் விஜயகாந்த், 1999ம் ஆண்டு அதே தயாரிப்பு நிறுவனத்திற்காக இயக்குனர் கே பாரதியின் இயக்கத்திலேயே நடித்துக் கொடுத்த திரைப்படம்தான் “கள்ளழகர்”.