தொடரும் (மலையாளம்),Thudarum (Malayalam)
Advertisement
3.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : ரெஜபுத்ரா விஷுவல் மீடியா
இயக்கம் : தருண்மூர்த்தி
நடிகர்கள் : மோகன்லால், ஷோபனா, பாரதிராஜா, இளவரசு, பினு பப்பு, பிரகாஷ் வர்மா, மனியம்பிள்ள ராஜூ மற்றும் பலர்இசை : ஜேக்ஸ் பிஜாய்வெளியான தேதி : 25.04.2025
நேரம் : 2 மணி நேரம் 48 நிமிடம்
ரேட்டிங் : 3.25 / 5

கதைக்களம்

மனைவி ஷோபனா, கல்லூரியில் படிக்கும் மகன், பள்ளி செல்லும் மகள் என அழகான குடும்பத்துடன் டாக்ஸி டிரைவராக வாழ்க்கையை நடத்துகிறார் மோகன்லால். குடும்பத்தினரை விட தனது பழைய அம்பாசிடர் காரை அளவு கடந்த அன்பு செலுத்தி நேசிக்கிறார். மகனும் தோழர்களும் தெரியாமல் டாக்ஸியை எடுத்துச் சென்றபோது மகனையே அடிக்கும் அளவிற்கு டாக்ஸி மீது பிரியம். ஒரு காலத்தில் சென்னையில் சினிமாவில் பைட்டராக இருந்தபோது அவரது குருநாதராக இருந்த பாரதிராஜா இறந்துவிட்டார் என செய்தி வர, அதற்காக சென்னை சென்று திரும்புகிறார் மோகன்லால். அவர் திரும்பி வருவதற்குள் ஒர்க்ஷாப்பில் வேலைக்காக விடப்பட்டிருந்த அவரது டாக்ஸியில் அங்கு வேலைபார்த்த இளைஞன் ஒருவன் கஞ்சா கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, டாக்ஸி பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் நிற்கிறது; அந்த இளைஞன் தலைமறைவாகி விட்டான். திமிர் பிடித்த எஸ்ஐ பினு பப்பு, டாக்ஸியை தர மறுக்கிறார். தினசரி டாக்ஸிக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அலையும் மோகன்லாலிடம், நண்பர்கள் முன்னிலையில் தன்னை அடித்துவிட்டார் என்கிற கோபத்தில் பேச மறுக்கிறார் ஹாஸ்டலில் தங்கி இருக்கும் அவரது மகன்.

அடுத்த சில நாட்களில் அந்த ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வர்மா, கொஞ்சம் மனம் இறங்கி, மோகன்லாலிடம் அவரது டாக்ஸியை ஒப்படைக்கும்படி எஸ்.ஐ.,க்கு உத்தரவிடுகிறார். அதே சமயம் அன்றைய தினம் இரவு, தங்களது ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸ்காரர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்வுக்கு தங்களை அழைத்துச் சென்றுவந்து மீண்டும் விட்டு விடும்படி மோகன்லாலிடம் கேட்கிறார் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வர்மா. கிடைக்காமலேயே போய்விடுமோ என நினைத்த தனது டாக்ஸியை தனக்கு திருப்பி கொடுத்தவர் என்பதால் அதற்கு ஒப்புக்கொண்டு, அங்கே அவர்களுக்கு டாக்ஸி ஓட்டி செல்கிறார் மோகன்லால்.

ஆனால் சென்ற இடத்தில் இன்ஸ்பெக்டரும் எஸ்ஐயும் அவரை காட்டுக்குள் நடக்கும் ஒரு விசேஷ திருவிழாவை பார்க்க வேண்டும் என வற்புறுத்தி அழைத்து செல்கின்றனர். வேறு வழியின்றி மோகன்லாலும் செல்கிறார். அங்கே சென்ற பிறகுதான் அவரது டாக்ஸியின் டிக்கியில் மோகன்லாலுக்கே தெரியாமல் தாங்கள் மறைத்து வைத்திருந்த சாக்குப்பையில் திணிக்கப்பட்டிருந்த ஒரு உடலை அந்த காட்டுக்குள் அப்புறப்படுத்த தன்னையும் தனது டாக்ஸியையும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது மோகன்லாலுக்கு தெரிய வருகிறது. அதன் பிறகு மோகன்லால் மன உளைச்சலுடன் இருக்கிறார். இன்னொரு பக்கம் ஹாஸ்டலில் இருந்த மகன் காணாமல் போய்விட்டார் என்கிற தகவல் மோகன்லாலுக்கு தெரிய வருகிறது..

இன்ஸ்பெக்டர் தன்னிடம் டாக்ஸியை ஒப்படைக்க சொல்லி சொன்னது, அதன்பிறகு ஒரு கொலை செய்யப்பட்ட உடலை தன்னுடைய டாக்ஸியிலேயே கடத்தி அப்புறப்படுத்த முயற்சித்தது, தற்போது தனது மகன் காணாமல் போனது என எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து கணக்குப் போடும் மோகன்லாலுக்கு தனக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய சதி நடந்து இருக்கும் அதிர்ச்சி உண்மை தெரிய வருகிறது. அது என்ன ? அவரது மகன் என்ன ஆனார் ? இன்ஸ்பெக்டர் யாரை கொலை செய்து அப்புறப்படுத்தினார் ? இது மோகன்லால் வாழ்க்கையில் அடுத்தடுத்து என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது ? என்பது விறுவிறுப்பான மீதிக்கதை

நடிப்பு

த்ரிஷ்யம் படத்திற்குப் பிறகு, மீண்டும் மோகன்லாலை ரசிகர்கள் எப்படி எதிர்பார்த்தார்களோ அதேபோல இந்த படத்தில் திரும்பி வந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். குடும்பத்திற்காக வாழ்வது, குடும்பத்தின் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்வது என ஒரு அப்பாவியாக இருக்கும் மோகன்லால், எப்படி ருத்ரமூர்த்தியாக மாறுகிறார் என்பதை படம் முழுவதும் தனது நடிப்பு பரிமாணத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் மோகன்லால். இன்ஸ்பெக்டர், எஸ்ஐ இருவரிடமும் அவர் மாட்டிக்கொண்டு தவித்தபடி கார் ஓட்டும் காட்சிகளில் அவரது தவிப்பு அவ்வளவு எதார்த்தம். பாத்ரூமில் ஷவரை திறந்துவிட்டு நனைந்தபடி அவர் அழுது கதறுவது நம் மனதை பிசைகிறது. அதேசமயம் கடைசி அரை மணி நேரத்தில் அவர் ஆடும் ஆக்சன் ஆட்டம் தியேட்டரில் விசில் பறக்க வைக்கிறது.

நீண்ட நாளைக்கு பிறகு மோகன்லாலுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஷோபனா. வயதானாலும் அவரது நடிப்பில் எந்த மாற்றமும் தெரியவில்லை.. குறிப்பாக தன்னை சித்தரவதை செய்துகொண்டிருக்கும் இன்ஸ்பெக்டரை, தனது கணவர் போன் செய்து மிரட்டும்போது, இயலாமையால் பின்வாங்கும் இன்ஸ்பெக்டரை ஒரு பார்வை பார்க்கிறாரே பாருங்கள்.. மணிசித்திரதாழ் படத்தில் அவர் நடித்திருந்த கங்காவின் அதே பார்வையை இதில் மீண்டும் பார்க்க முடிகிறது. அந்த ஒரு காட்சி போதும் அவருடைய நடிப்புக்கு..

இவர்கள் இருவரையும் தாண்டி படம் முழுவதும் தனி ராஜாங்கம் நடத்தி இருக்கிறார்கள் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பிரகாஷ் வர்மாவும், எஸ்ஐயாக நடித்திருக்கும் பினு பப்புவும். இதில் பினு பப்பு பல வருடங்களாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அந்த எஸ்ஐ பென்னி என்கிற முழு நீள கதாபாத்திரம் அவரது திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல் என்று சொல்லலாம். இவ்வளவு கொடூரமாக ஒரு போலீஸ்காரர் இருக்க முடியுமா என காட்சிக்கு காட்சி தனது குரூரத்தின் அளவை ஏற்றிக்கொண்டே செல்கிறார். குறிப்பாக மோகன்லாலுக்கும் அவருக்கும் இடையான வாக்குவாதங்கள் அனல் பறக்கிறது.

அதே சமயம் இந்த படத்தின் மூலம் தான், முதன்முறையாக நடிகராக அறிமுகமாகியுள்ள பிரகாஷ் வர்மா நம்மை அப்படியே ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறார். இதுதான் அவருக்கு முதல் படம் என்றால் நம்பவே முடியாது. ஒரு உயர் அதிகாரியாக வன்மம், நம்ப வைத்து கழுத்தறுக்கும் துரோகம், சிரித்துக்கொண்டே தனது தவறுக்கு மற்றவரை துணைபோக வைக்கும் தந்திரம் என நல்லவர் உருவத்தில் இருக்கும் ஒரு நயவஞ்சகர் கதாபாத்திரத்தை கச்சிதமாக படம் முழுவதும் வெளிப்படுத்தி இருக்கிறார் பிரகாஷ் வர்மா. இனி மலையாள திரையுலகில் இவர் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிடுவார் என்பது உறுதி.

படம் பார்க்கும் நமக்கு இயக்குனர் பாரதிராஜாவும், நடிகர் இளவரசும் வந்து போகும் சில காட்சிகள் ரொம்பவே சர்ப்ரைஸாக இருக்கிறது. பாரதிராஜாவுக்கும் மோகன்லாலுக்குமான மாஸ்டர்-சிஷ்யன் உறவை அழகியலுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். இன்னொரு ஆச்சரியம் படத்தில் விஜய்சேதுபதியும் இருக்கிறார். அது எப்படி என்பது படம் பார்ப்பவர்களுக்கான சஸ்பென்ஸ் ஆகவே இருக்கட்டும். மோகன்லாலின் மகன், மகளாக நடித்திருப்பவர்கள், அவரது நண்பர்களாக வரும் மணியம் பிள்ளை ராஜு உள்ளிட்டவர்கள் எல்லோருமே கதைக்கு பக்கபலமாக துணை நின்று இருக்கிறார்கள்.

இடைவேளை வரையிலான திக் திக் காட்சிகளுக்கும் சரி, கிளைமாக்ஸில் அரை மணி நேரம் நம்மை ஆக்சன் மூடுக்கு மாற்றுவதிலும் சரி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நூறு சதவீதம் சரியாக செய்து தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார். அடர்ந்த காட்டுக்குள் மோகன்லால் மேற்கொள்ளும் அந்த டாக்சி பயணத்தில் நாமும் சிக்கிக் கொண்டது போன்ற ஒரு உணர்வை தனது ஒளிப்பதிவால் ஏற்படுத்தி விடுகிறார் ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார். கிளைமாக்ஸில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் அந்த சண்டைக்காட்சியை அவர் படமாக்கிய விதம் இன்னும் அருமை.

பிளஸ் & மைனஸ்

சமீபகாலமாக பல இயக்குனர்கள் மோகன்லாலை வித்தியாசமாக காட்டுகிறோம் என நினைத்து அவரது ரசிகர்களிடமிருந்து அவரை தள்ளியே வைத்து விட்டார்கள். ஆனால் இந்த படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்கள் ஆராதிக்கும் வழக்கமான மோகன்லாலை திருப்பி அழைத்து வந்துள்ளார் இயக்குனர் தருண்மூர்த்தி. படத்தின் கதை மற்றும் கிளைமாக்ஸ் என்னவோ பல படங்களில் நாம் பார்த்தது தான். ஆனால் தனது கதை சொல்லும் விதம், உணர்வுப்பூர்வமாக அந்த கிளைமாக்ஸை நோக்கி நகர்த்தி சென்ற விதம் குறித்து நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது.

குறிப்பாக படத்தின் திருப்புமுனையான காட்சி ஒன்றை துவக்க காட்சியான நிலச்சரிவு காட்சியுடன் பொருத்தி இருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம். மோகன்லால் மகனைப் பற்றிய உண்மை தெரியவரும் போது அவருக்கு ஏற்படும் அதிர்ச்சியை நமக்கும் கடத்தி இருக்கிறார் இயக்குனர். அது மட்டுமல்ல, ஆணவக்கொலை போல, அந்தஸ்து கொலையையும் இந்த படத்தின் மையக்கருத்தாக அவர் கையாண்டு உள்ளார். மோகன்லாலுக்கும் ஷோபனாவுக்குமான கணவன் மனைவி உறவிலுள்ள சஸ்பென்ஸ் கூட படத்தின் திருப்பத்திற்கு துணை நின்று இருக்கிறது. சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும், கதையின் போக்கில் அவையெல்லாம் ஒதுக்கி தள்ளப்படுகின்றன. அந்த வகையில் மோகன்லால் ரசிகர்களுக்கு நீண்ட நாளைக்கு பிறகு தன் கையால் ஒரு விருந்து படைத்துள்ளார் இயக்குனர் தருண்மூர்த்தி.

தொடரும் - மோகன்லால் ரிட்டன்ஸ்

 

பட குழுவினர்

தொடரும் (மலையாளம்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மோகன்லால்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன் லால். கேரள மாநிலத்தில் பிறந்த மோகன்லால், 1978ம் ஆண்டு திறனோட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார். மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். 4 முறை தேசிய விருது, பிலிம்பேர், மாநில விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

மேலும் விமர்சனம் ↓