தனது அம்மா வனிதாவின் முன்னாள் கணவனுக்கு பிறந்தவர் என்றாலும் தனது சகோதரியான நிக்கி கல்ராணி மீது பாசமாக இருக்கிறார் வினீத் சீனிவாசன்.. ஆனால் அவரது தந்தை நெடுமுடி வேணுவோ, வளர்ப்பு மகளான நிக்கியை தனது மகளாக கருதாமல், அவரை அடைய நினைத்து சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறார். தனது தந்தையை கொன்றுவிட்டால் அம்மாவும் சகோதரியும் நிம்மதியாக வாழ்வார்கள் என நினைத்து தந்தையை சிலிண்டர் விபத்தை ஏற்படுத்தி கொல்ல முயற்சிக்கிறார் வினீத் சீனிவாசன். ஆனால் அதில் எதிர்பாராதவிதமாக அவரது அம்மா பலியாக, கொலைக்குற்றத்திற்காக ஜெயிலுக்கு போகிறார் வினீத் சீனிவாசன். ஜெயிலுக்கு மகனை பார்க்கவரும் நெடுமுடி வேணு, இனி நிக்கியை அடைவதில் தனக்கு யாரும் தடையில்லை.. வருகிற ஊர்த்திருவிழாவின்போது அதை நிறைவேற்றுவேன் என கொக்கரித்துவிட்டு செல்கிறார்.
இந்த நிலையில் கண்ணூர் ஜெயிலில் இருந்து திருவனந்தபுரம் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த கைதிகளான வினீத் சீனிவாசனையும் செம்பான் வினோத்தையும் அழைத்துக்கொண்டு இரண்டு போலீஸ்காரர்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள்.. திடீரென கிடைக்கும் ஒரு வாய்ப்பை பயன்படுத்தி வினீத் சீனிவாசன் தப்பிக்கிறார். போலீஸ் விசாரணையில் அவர் தனது தந்தையை கொல்ல ஊருக்கு சென்றிருப்பார் என விபரம் கிடைக்கிறது. வினீத் சீனிவாசன் தந்தையிடம் இருந்து தனது சகோதரியை காப்பாற்றினாரா அல்லது அதற்கு முன்னரே போலீஸ் வலையில் சிக்கினாரா என்பது க்ளைமாக்ஸ்.
வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தந்தை என செய்தித்தாள்களில் அவ்வப்போது நாம் படிக்க நேர்கின்ற விஷயத்தை கருவாக வைத்து படத்தை உருவாக்கியுள்ளார்கள்.. வினீத் சீனிவாசன் தான் ஏற்றிருக்கும் அப்பாவி சகோதரன் வேடத்துக்கு தனது நடிப்பின் மூலம் நியாயம் செய்துள்ளார். சில காட்சிகளில் மட்டுமே வரும் நிக்கியை அவரது அக்காவாக மாற்றி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் பாவாடை தாவணியில் நிக்கியை பார்ப்பதும் புது அனுபவம் தான்.
மகளை அடைய நினைக்கும் காமுகனாக, வளர்ப்பு தந்தையாக நெடுமுடி வேணுவின் குரூரமான நடிப்பு ஒரு பதைபதைப்பை ஏற்படுத்தவே செய்கிறது. காமம் கண்ணை மறைக்க தனது மகனையே கொல்வதற்காக அவர் துணியும்போது பகீரென்கிறது.
சீரியசான கதையை அவ்வப்போது ஜாலி மூடுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு இன்னொரு கைதியாக நடித்திருக்கும் செம்பான் வினோத்துக்கும் போலீஸ்காரர்களாக வரும் ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஸ்ரீஜித் ரவிக்கும் உண்டு. ரயில் பயணத்தில் இந்த மூவரும் அடிக்கும் கூத்துக்கள் தான் சற்று ரிலாக்சை தருகின்றன. க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு பத்து நிமிடம் விறுவிறுப்பை கூட்டியுள்ளது நிஜம்.
வினீத் சீனிவாசன் நடித்தால் அது காமெடிப்படமாகத்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டு இந்தப்படமும் அதேபோல முழுக்க முழுக்க காமெடி கதையாக இருக்கும் என எதிர்பார்த்து வருபவர்களுக்கு கொஞ்சமல்ல.. நிறையவே ஏமாற்றத்தை தந்துள்ளார்கள் இயக்குனர்களான ரெஜிஸ் ஆண்டனி - ஜாக்சன் ஆண்டனி இருவரும்.