தினமலர் விமர்சனம்
இரண்டு சிறுவர்களுக்கு இடையேயான ஈகோ மோதலும்ல அதனூடே ஒரு இளஞ்ஜோடியின் காதலும் பிள்ளைகளுக்கு முன்னே பெற்றோர் அடிச்சுக்கிட்டால அந்த பிள்ளைகளின் மனநிலை பாதிக்கப்படும்... எனும் மெசேஜூம்தான் பசங்க படத்தின் கதைக்களம், கரு... எல்லாம்!
புதிதாக அந்த பள்ளிக்கூடத்திற்கு படிக்க வரும் அன்புக்கரசுக்கும், ஏற்கனவே அதே பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் ஜீவா நித்யானந்தத்துக்கும் முதல் சந்திப்பிலேயே முட்டிக் கொள்கிறது. இதில் ஜீவா அவர்களது வகுப்பு ஆசிரியரின் மகன் வேறு. அதனால் அந்த வகுப்பில் படிக்கும் மாணவர்கள் எல்லாம் தனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டுமென்று விரும்புகிறான் ஜீவா. ஆனால் ஜீவாவின் எண்ணத்திற்கு எதிரான கருத்துடையவனாக இருக்கிறான் நன்றாக படிக்கும் அன்புக்கரசு. அதன் விளைவு... இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து அன்புவும், ஜீவாவும் ஒருபக்கம் அடித்துக் கொள்ள, மற்றொரு பக்கம் அன்புவின் சித்தப்பாவான எல்.ஐ.சி., ஏஜென்ட் மீனாட்சி சுந்தரத்துக்கும், ஜீவாவின் அக்கா சோபிக்கண்ணுவுக்கும் இடையில் காதல்.
ஒரு கட்டத்தில் இந்த காதலை எதிர் எதிர் துருவத்தில் இருக்கும் இரண்டு சிறுவர்களும் ஒரு சேர பார்த்து வீட்டில் பற்ற வைத்து விட, ஏற்கனவே குழந்தைகளின் மோதலால் எதிர் எதிர் வீட்டில் இருந்தும் முட்டிக்கொண்டிருக்கும் இரு குடும்பமும் அந்த காதலை அங்கீகரித்தா? அடித்துக் கொண்டதா? சிறுவர்கள் சேர்ந்தார்களா? பெரியவர்கள் பிரிந்தார்களா? என்பதை சுவாரஸ்யமாகவும், சுவையாகவும் சொல்லியிருக்கிறது மீதிக்கதை!
ஐந்தாம் அல்லது ஆறாம் வகுப்பு படிக்கும்போதே பெயருக்கு பின்னால் ஐ.ஏ.எஸ்., என தான் பின்னால் படிக்கப் போகும் படிப்பை போட்டுக் கொண்டு மற்றவர்களையும், படிக்கத் தூண்டும் வாத்தியார் விரும்பும் பிள்ளையாக சிறுவன் கிஷோர் கச்சிதம்! கிஷோரின் படத்தை வரைய, அதில் அவன் பெயரை எழுதி அந்த சுவற்றில், தன் சகாக்களுடன் மூத்திரம் பெய்யும் வாத்தியார் விரும்பாத வாத்தியார் வீட்டு பிள்ளை ஜீவாவாக ஸ்ரீராம் பிரமாதம்! இவரது சகாக்கள் பக்கடா, குட்டிமணி, அன்புக்கரசின் தோழி மனோன்மணி, தோழன் மங்களம், தங்கை தெய்வகனி, இரண்டு வயது தம்பி புஜ்ஜிமா உள்ளிட்ட எல்லோரும் பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு.
அதிலும் பெரியவர்கள் சண்டையில் புகுந்து சொக்கலிங்க வாத்தியாரின் வயித்தில் குத்திவிட்டு வரும் வாண்டு புஜ்ஜிமாவும், கருநாக்குக்காரன் சாபம் விட்டால் அன்பரசு அழிஞ்சு போவான்... என்று ஜீவா, ஸ்ரீராமுக்கு ஐடியா கொடுத்து அடிக்கடி திங்க வாங்கி திங்கும் பக்கடா பாண்டியனும் படம் முழுக்க வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றனர் பேஷ் பேஷ்!
இப்படி சிறுவர்கள் மட்டுமல்ல.. எல்.ஐ.சி., ஏஜென்ட் மீனாட்சி சுந்தரமாக வரும் விமலும், பால்வாடி பள்ளி டீச்சர் கோபிகண்ணாவாக வரும் வேகாவும் கூட செல்போன் சில்மிஷங்களால் செம காமெடி பண்ணி கலக்கி இருக்கின்றனர். அதுவும் இங்க மீனாட்சி அங்க யாரு?ன்னு ஆரம்பித்து கடைசியில் நம்ம இரண்டு பேரையும் சேர விடமாட்டாங்க போல.... பழகின பழக்கத்துக்கு ஒரு பாலிஸியாவது போடேன்னு தன் ஏஜென்ட் புத்தியை காட்டும் விமல் செம காமெடி கலாட்டா! காதல் கலாட்டாவும் கூட!
அதே மாதிரி நம் சின்ன வயது ஆசிரியர்களை ஞாபகப்படுத்தும் சொக்கலிங்கம் வாத்தியாராக ஜெயபிரகாஷ், அவரது மனைவி முத்தடக்கியாக சுஜாதா, வெள்ளைச்சாமியாக சிவக்குமார், அவரது மனைவி போது பொண்ணாக செந்தி குமாரி என எல்லோரும் பாத்திரத்திற்கு ஏற்ற பக்காவான தேர்வு!
குழந்தைகள் பற்றிய கதையை மிகவும் அழகாகவும், அழுத்தமாகவும் குடும்பம், காதல், காமெடி, செண்டிமென்ட் என ஜனரஞ்சகமாகவும், கச்சிதமாகவும் சொல்லி சிறுவர்களின் எதிர்கால கனவை தூண்டியும், பெரியவர்களின் பள்ளி பருவத்து ஞாபகங்களை தூண்டியும் விட்டு, எல்லா தரப்பு ரசிகர்களையும் தன் பசங்க படத்தின் மூலம் திருப்தி படுத்தியிருக்கிறார் புதியவர் இயக்குனர் பாண்டிராஜ். காட்சிக்கு காட்சி சபாஷ் போட வைத்திருக்கிறது ச.பிரேம்குமாரின் ஒளிப்பதிவு!. சில இடங்களில் நீளும் சிறுவர்களின் குறும்பை சற்றே படத்தொகுப்பாளர் யோக பாஸ்கர் கவனித்து கத்தரி போட்டிருக்கலாம் என தோன்றினாலும் ஜேம்ஸ் வசந்தனின் பிரமாத பிரமாண்ட இசையில் அதுவும் பெரிய குறையாக தெரியவில்லை என்பது உண்மை.
பசங்க : பாசங்க! குடும்பத்தோடு பாருங்க!!
-----------------------
கல்கி விமர்சனம்
பெற்றோர்கள் தங்கள் பிரச்னைகளை பிளள்ளைகளின் முன்னால் வைத்துக் கொண்டால் அவர்களது வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளாவதோடு அவர்களது குழந்தைகளின் மனவுலகமும் சிதைவுகளுக்கு உள்ளாகும். குழந்தைகள் கொண்டுள்ள கனவுகள் நனவாக அவர்களது தாய் தந்தையரின் ஊக்குவிப்பே முக்கியமாக இருக்க வேண்டும். அதுவே குழந்தைகள் விரும்புவதும்கூட.
கனவு காணுங்கள் என்கிற அப்துல்கலாமின் மந்திர“ சொல்லோடு படம் துவங்குகிறது. பள்ளிக் குழந்தைகளின் கனவுகளின் வழியாக நமது குடும்ப வாழ்வின் நுண்ணிய பிரச்னைகளையும், இயலாமைகளையும் மிக அழகாகப் படம் பிடித்ததோடு, வாழ்வதற்கான அர்த்தத்தையும் நேர்த்தியாகச் சொல்லியிருக்கும் அறிமுக இயக்குநர் பாண்டியராஜுக்கும், தயாரித்த சசிகுமாருக்கும் மிக அழுத்தமான கைகுலுக்கல்கள்.
எங்கிருந்துப்பா புடிச்சீங்க இந்தப் பசங்களை? அடடா! தியேட்டரையே சிரிக்க... சிரிக்க வைச்சு கதிகலங்க வைச்சுட்டாங்களே.. அந்தப் பய "பக்கடா'. ஜீவாவோடு சேர்ந்துக்கிட்டு பண்ற சேஷ்டைகள் இருக்கே, அப்படியே நமது கடந்துபோன பால்யத்தை கண்முன் நிறுத்துகின்றன. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல படம் பார்த்த சந்தோஷம்.
சண்டை போட்டுக் கொள்ளும் சிறுவர்களைக் கட்டுப்படுத்த தேசிய கீதம் போடுவதும், இதெல்லாம் சட்டசபையில் செய்ய வேண்டியது! என தலைமையாசிரியர் கடிந்து கொள்வதும் பலே ஐடியா!
நாம சொல்றதைக் கேட்கறதுக்கும், அதைப் புரிஞ்சுக்கறதுக்கும் நல்ல மனசு வேணும் சார்...
சகிப்புத் தன்மையை கடைப்பிடிக்கும்போதுதான் சந்தோஷமே என்னன்னு தெரியுது... இப்படி பல இடங்களில் வசனங்கள் நச். மீனாட்சிசுந்தரமும் (விமல்), சோபிக்கண்ணு(லேகா)வும் போட்டுக் கொள்ளும் சண்டைகளில் தியேட்டரில் சிரிப்பலை... இருவருக்கும் நல்ல தொடக்கம்.
பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். கண்களை உறுத்தாத, சீரிய ஒளிப்பதிவு தந்திருக்கும் ச.பிரேம்குமுõரின் கண்கள் அழகோ அழகு.
தகிக்கும் அனலில் கோடையின் வெப்பத்தை விரட்ட வந்திருக்கும் பசங்க! கைதட்டி வரவேற்போம்.