ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஆமதாபாத் : பத்மாவாத் படம் திரையிட எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தில் ஆமதாபாத்தில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் நடந்துள்ளன.
பத்மாவாத் படத்திற்கு கர்னிசேனா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் திரையிட தடை விதித்துள்ளது. எனினும் சுப்ரீம் கோர்ட் திரையிட அனுமதி அளித்துள்ளது. வரும் 25-ம் தேதி நாடு முழுவதும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் பி.வி.ஆர்., மல்டிப்ளக்ஸ் காம்ப்ளக்சில் திரையிட உள்ளதை அறிந்த கும்பல் இரவில் தர்ணா செய்தது. அப்போது திடீரென வன்முறையில் இறங்கியது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட டூவீலர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் அங்கு பதட்டம் காணப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வன்முறை கும்பலை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சற்றுநேரத்தில் வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து அங்கு பதட்டம் நீடிக்கிறது.
144 தடை உத்தரவு
இந்த படம் வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா மாநிலம் குர்கானில் கலவரம் வெடித்தது. கர்னி சேனா அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். கடைகள் மற்றும் பொது சொத்துகளை சேதப்படுத்திய அந்த கும்பல், சோஹ்னா என்ற இடத்தில் பஸ்சை தீவைத்து எரித்தனர். அந்த வழியாக சென்ற வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர்.
இதனையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், வணிக வளாகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த போலீசார் யாரும் சம்பவ இடத்தில் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளப்புகள் மற்றும் பார்களை மறு உத்தரவு வரும் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. படத்தை வெளியிட மாட்டோம் என விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.
பாதுகாப்பு
உ.பி., மாநிலம் மீரட் நகரில் தியேட்டரை மர்ம கும்பல் அடித்து நொறுக்கியது. இதனையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எட்டவா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கடைகளை வலுக்கட்டாயமாக மூட கட்டாயப்படுத்தினர். வாகனங்களை அடித்து சேதப்படுத்தினர். இதனையடுத்து அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.லக்னோவில் தியேட்டர் முன்பு போராட்டம் நடத்தியவர்கள், படத்தை திரையிட்டால், எதையும் செய்ய தயங்க மாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முற்றுகை
ராஜஸ்தானில் நூற்றுக் கணக்கான பெண்கள் பத்மாவத் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது எனக்கூறி சித்தூர்கர் கோட்டையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், அப்பெண்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கோட்டையை அதிகாரிகள் மூடினர். டில்லி ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை போராட்டக்காரர்கள் மறித்தனர். டில்லி அஜ்மீர் சாலையில் போராட்டக்காரர்கள் டயர்களை தீவைத்து எரித்து போக்குவரத்தை தடை செய்துள்ளனர். சிகார் பகுதயில் பஸ் கல்வீசி சேதப்படுத்தப்பட்டது.
48 பேர் கைது
பத்மாவத் படத்திற்கு எதிராக குஜராத் தலைநகர் ஆமதாபாத் நகரில், மல்டிபிளக்ஸ் அரங்கில், வன்முறை கும்பல் தர்ணா போராட்டத்தில் இறங்கியது. அப்போது வன்முறை வெடித்ததில் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 48 பேர் கைது செய்யப்பட்டனர்.