மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
திரைப்படம் என்பது ஒரு கூட்டு முயற்சி. தனி ஒரு மனிதனால் மட்டும் ஒரு திரைப்படம் உருவாகி விட முடியாது. கனவுத் தொழிற்சாலை என்றழைக்கப்படும் இந்தத் தொழிற்சாலையில் எண்ணற்ற தொழிலாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இவர்களில் பலர் இன்னமும் கூட நம் கண்களுக்குத் தெரியாமலேயே விருந்து படைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் பெயரைக் கூட நாம் படித்துப் பார்ப்பதில்லை. முன்பாவது படம் ஆரம்பிப்பதற்கு படத்தின் டைட்டிலில் இவர்கள் பெயர் வரும். தற்போது டைட்டிலைக் கூட ஹாலிவுட் படங்களைப் பார்த்து காப்பியடித்து, படம் முடிந்த பின்தான் போடுகிறார்கள். படம் முடிந்து வீட்டுக்குப் போகும் அவசரத்தில் இவர்களின் பெயரைக் கூட நாம் வெறுமனே படித்துக் கூடப் பார்ப்பதில்லை.
24 கிராஃப்ட் இல்லாமல் திரைப்படம் இல்லை. ஒரு திரைப்பட உருவாக்கத்தில் இந்த 24 கிராஃப்ட் கலைஞர்களின் பங்கும் முக்கியம். இன்று இந்த 24 கிராஃப்ட்டையும் கடந்து புதிது புதிதாக சில துறைகள் தொழில்நுட்ப மாற்றத்தில் உருவாகியுள்ளன. இவர்களில் யாரை முதலில் நாம் கண்டு கொள்வது. நம் மனம் கவர்ந்த நட்சத்திரங்களின் முகத்தை நாமும் கவரும் விதத்தில் அழகுபடுத்தித் தரும் மேக்கப் கலைஞர்களிலிருந்து பார்ப்போம்.
மேக்கப் கலைஞர்கள்
இப்போதுதான் மேக்கப்பைப் பற்றி அனைவரும் மெனக் கெட்டு புதிது புதிதாக பல விஷயங்களை முயற்சி செய்து பார்த்து வருகிறார்கள். காதல் இளவரசன் கமல்ஹாசனைக் கூட அவ்வை சண்முகியாக 60வயது பாட்டியாக மாற்றும் திறமை இந்த மேக்கப் கலைஞர்களுக்கு உண்டு. சமீபத்தில் இந்த மேக்கப் விஷயத்தால்தான் ஷங்கரின் ஐ படத்தில் கூட விக்ரம் அதிகமாக பேசப்பட்டார். நிறங்களை மீறி நம் நினைவில் நட்சத்திரங்கள் இடம் பிடிப்பதில் மேக்கப் கலைஞர்களின் பங்கு மிகவும் பெரியது.
கலை கலைஞர்கள்
ஆர்ட் டிபார்ட்மென்ட் என படப்பிடிப்பில் அழைக்கப்படும் இந்தக் கலை கலைஞர்கள், அரங்க அமைப்பை யதார்த்தமாகக் காட்ட கடினமாக உழைப்பார்கள். பல இயக்குனர்களின் இயக்கத்தில் யதார்த்தமாகவும், சில இயக்குனர்களின் இயக்கத்தில் பிரம்மாண்டமாகவும் தங்களது பணியை இவர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள். பாடல் காட்சிகளில் இந்தக் கலைஞர்களின் உழைப்பு மிகவும் முக்கியமானது. வெளிநாடுகளில் பாடல் காட்சிகள் இல்லையென்றால் ஸ்டுடியோக்களில் அமைக்கப்படும் பிரம்மாண்டமான அரங்குகள் இவர்களின் கடின உழைப்பில் உருவாகி ரசிக்க வைக்கின்றன. பல சமயங்களில் இரவு, பகலாக வேலை பார்த்து முடிக்கும் சூழ்நிலையிலும் அழகு குலையாமல் பேரழகை தங்களது அரங்குகளில் வெளிப்படுத்துவார்கள்.
ஆடை அலங்கார கலைஞர்கள்
ஆள் பாதி ஆடை பாதி என்று அந்தக் காலத்திலேயே சொல்லி விட்டார்கள். திரைப்படங்களில் இது முற்றிலும் பொருத்தமாக இருக்கும் ஒன்று. ஒரு நட்சத்திரத்தின் கதாபாத்திரத்தையும், அவர்களது நடிப்புத் திறனை மேலும் வெளிப்படுத்துவதிலும் ஆடைகளுக்கும் மிக முக்கிய பங்குண்டு. நட்சத்திரங்கள் திரைப்படங்களில் அணியும் ஆடைகள்தான் பல நேரங்களில் இளைஞர்கள், இளைஞிகளின் ஃபேஷனையும், டிரெண்டையும் முடிவு செய்கின்றன. ரசிகர்களைக் கவரும் விதத்தில் ஒரு ஆடையை உருவாக்குவது என்பது எவ்வளவு பெரிய விஷயம். அதை இந்த ஆடை அலங்காரக் கலைஞர்கள் அனாயாசயமாக செய்து விடுகிறார்கள்.
ஸ்டன்ட் கலைஞர்கள்
கரணம் தப்பினால் மரணம் இதுதான் ஸ்டன்ட் கலைஞர்களின் நிலைமை. சினிமா சண்டைதானே என சிலர் சாதாரணமாகச் சொல்லி விடுவார்கள். ஆனால், நிஜ சண்டையை விட மிகவும் ஆபத்தான் சண்டை சினிமா சண்டைகள்தான். பலமாக அடிப்பது போல் இருக்க வேண்டும், ஆனால் படவே கூடாது. சினிமா சண்டைக் காட்சிகளில் டைமிங் மட்டும் மிஸ் ஆனால், மொத்தமும் மிஸ் ஆகி விடும். உயரத்தில் இருந்து குதித்து, மண் புழுதியில், சேற்றில் உருண்டு புரண்டு, கண்ணாடிகளின் மீது விழுந்து, ஓடுகளின் மீது விழுந்து, தங்களை மிகவும் வருத்திக் கொண்டு நம்மை மிரள வைக்கிறார்கள்.
டப்பிங் கலைஞர்கள்
இன்று உள்ள 99 சதவீத நடிகைகள் பின்னணிக் குரலால் மட்டுமே ஜொலி ஜொலிக்கிறார்கள். அவர்களே, அவர்களது சொந்தக் குரலில் பேசினால் கூட நாம் ஏற்றுக் கொள்வோமா என்பது சந்தேகம்தான். தாங்கள் வாங்கும் சம்பளத்தில் பாதியை தங்களுக்கு டப்பிங் குரல் கொடுக்கும் கலைஞர்களுக்கு நடிகைகள் கொடுத்தால் கூட தவறில்லை. பொருத்தமான குரல் இல்லாததால் சில நடிகைகளை சில படங்களில் நம்மால் ரசித்துக் கூடப் பார்க்க முடியாமல் போய்விட்டது. இன்னமும் கூட ஜோதிகாவையும், லைலாவையும், சிம்ரனையும் நாம் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அவருக்குப் பின்னணிக் குரல் கொடுத்த சவீதாவின் குரல் நம் மனதில் பதிந்து போனதுதான் காரணம். மோகன் போன்ற ஹீரோக்களே வெள்ளி விழா நாயகனாக வலம் வந்ததே சுரேந்தரின் பின்னணிக்குரல்தானே காரணம். இன்றைய முன்னணி நட்சத்திரங்களுக்கு யார் குரல் கொடுக்கிறார்கள் என்பதை சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களே பாராட்டவும் வெளிக்காட்டவும் மறுக்கிறார்கள்.
நடனக்கலைஞர்கள்
நடனக் கலைஞர்கள்தான் கண்களுக்குத் தெரிகிறார்களே என நீங்கள் கேட்பது கேட்கிறது, ஆனால் எத்தனை பேர் அழகான ஹீரோயின்களும், அபிமான ஹீரோக்களும் நடனமாடும் போது, பக்கத்தில் அவர்களை விட அற்புதமாக நடனமாடும் இவர்களை யார் பார்க்கிறார்கள். பல பாடல்களில் இவர்கள் பின்னணியில் அவுட் ஆப் ஃகோகஸ்-ல் மங்கலாகத்தான் தெரிவார்கள். ஹீரோயின்களை விடவும், ஹீரோக்களை விடவும் இவர்கள் மீது மற்ற எந்த வெளிச்சமும் குறைவாகத்தான் படும். பல சமயங்களில் நாயகனும், நாயகியும் செய்யும் தவறான நடன அசைவுகளைக் கூட இவர்களின் யூனிஃபார்ம் ஆன நடன அசைவுகள் சரி செய்து விடும். ஒரு பாடல் ஹிட்டாகி, நம் மனதில் இடம் பிடிக்க ஒரு வகையில் இந்த நடனக் கலைஞர்களும் காரணம்தான்.
லைட்மென்கள்
நட்சத்திரங்களின் மீது அற்புதமான வெளிச்சம் பட்டு நம் கண்களுக்கு அவர்கள் அழகாகத் தெரிவதில் இந்த லைட்மென்களின் பங்கும் குறிப்பிட வேண்டிய ஒன்று. ஒவ்வொரு லைட்டுகளும் எத்தனை கிலோ வாட் சூடு இருக்கும் தெரியுமா. அந்த சூட்டிற்கு அருகில் நின்று கொண்டு மற்றவர்களின் மீது படும் வெளிச்சத்திற்காக தங்களை இருட்டுக்குள் வைத்திருப்பவர்கள்தான் லைட்மென்கள். ஸ்டுடியோக்களி படப்பிடிப்பு நடக்கிறது என்றால் கேட்கவே வேண்டாம். அந்த சூட்டிலேயே அதிகமாக இருக்க வேண்டி வரும். ஒளிப்பதிவாளர்களின் திறமையையும், நட்சத்திரங்களின் அழகையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் லைட்மென்களின் பணியை லைட்டாக எடுத்துக் கொள்ள முடியாது.
மேலே குறிப்பிட்ட கடின உழைப்பாளிகளைத் தவிர இன்னும் எத்தனையோ துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் ஒரு படம் உருவாவதற்கு தங்களது அளப்பரிய உழைப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்தக் காலத்தில் கிராஃபிக்ஸ் கலைஞர்கள், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் கலைஞர்கள் என இன்னும் எத்தனை எத்தனை புதுப்புது துறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன.
படம் முடிந்த பின் திரையில் இவர்கள் பெயர்கள் வருவதற்குள் நாம் படம் பார்த்து விட்ட உடனேயே ஓடி வந்து விடுகிறோம். இந்த உழைப்பாளர் தினத்திலாவது இந்த உழைக்கும் கலைஞர்களை கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம்.