மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தென்மேற்கு பருவக்காற்று, சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை, மதயானைக்கூட்டம், புலிவால், மஞ்சப்பை உள்பட பல ஹிட் படங்களுக்கு இசையமைத்திருப்பவர் ரகுநந்தன். என்னதான் அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டாலும், என்னைப்பொறுத்தவரை ரசிகர்கள் தங்களது கைதட்டல் மூலம் கொடுக்கும் விருதே சிறந்த விருது என்று கூறும் அவர், ரசிகர்களின் டேஸ்ட் அறிந்து சமைத்துக்கொடுக்கும் நல்ல சமையல்காரனாக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன் என்கிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த சிறப்பு பேட்டி...
* சமீபகாலமாக ரசிகர்களின் ரசனை மாறிவிட்டதாக கூறப்படுவது பற்றி உங்கள் கருத்து?
ரசிகர்களைப்பொறுத்தவரை சினிமாக்காரர்கள் கொடுக்கும் படங்கள், பாடல்களில் தங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை ரசிக்கிறார்கள். சினிமாக்காரர்கள் கொடுப்பதை ரசித்தாக வேண்டும் என்ற கட்டாயத்திலும் இருக்கிறார்கள் ரசிகர்கள். அந்த வகையில், ரசனைகளை பொறுத்தவரை தீர்மானிப்பவர்கள் சினிமாக்காரர்கள்தான், மேலும், நம்முடைய ரசிகர்களைப்பொறுத்தவரை வித்தியாசமான, அவர்களின் விருப்பம் அறிந்து நல்ல படைப்புகளை கொடுத்தால் கைதட்டி வரவேற்பார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டு ரசிகர்களின் ரசனை எப்போதுமே ஆரோக்கியமாகவே உள்ளது. அவர்களுக்கு நல்ல தீனி போட வேண்டிய கடமை ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும் உள்ளது.
* நீங்கள் இசையமைத்த படங்களில் எந்தமாதிரியான இசைக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தார்கள்?
நல்ல மெலோடியான பாடல்களுக்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதனால் இன்றைய ரசிகர்களின் ரசனை குத்துப்பாடல்கள் பக்கம் திரும்பிவிட்டதாக மற்றவர்கள் சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை. அதனால்தான் எனது படங்களில் மெலோடி பாடல்களுக்கு முதலிடம் கொடுக்கிறேன். பார்ஸ்ட் பீட் பாடல்கள் இடம்பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் அதிலும் ஒரு மெலோடித்தன்மையை கலந்துதான் எனது இசையை வெளிப்படுத்தி வருகிறேன். அதனால் தமிழ்நாட்டு ரசிகர்களின் ரசனை இப்போதும் ஆரோக்கியமாகவே உள்ளது. அவர்களது ரசனைக்கு தீனி போடக்கூடிய இசைக்கலைஞர்கள்தான் இப்போது குறைவாக இருப்பதாக கருதுகிறேன். இருப்பினும், ஏற்கனவே நான் சொன்னது போன்று, நாம் நல்லபடியாக நல்லதாக சமைத்துக்கொடுத்தால் அவர்கள் சாப்பிடுவதற்காக தயாராகவே உள்ளார்கள்.
* எந்த மாதிரியான கதைக்களங்களில் இசையமைப்பாளர்கள் ஸ்கோர் பண்ண முடியும்?
நல்ல கதைகள், குறிப்பாக, காதல், செண்டிமென்ட், கோபம், மகிழ்ச்சி என அனைத்து விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கதைகள் அமைகிறபோது ஒரு இசையமைப்பாளர் அதற்கேற்ற இசைக்கருவிகளை இசைத்து முழு ஸ்கோர் பண்ண முடியும். கூடவே இசை சம்பந்தமான கதைகளிலும் திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கும்.
* சீனுராமசாமி இயக்கும் படங்களில் உங்களது பாடல்கள் அதிக உருக்கமாக வெளிப்படுகிறதே?
எல்லா டைரக்டர்களின் படங்களிலும் நன்றாக இசையமைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருக்கும். ஆனால், சீனுராமசாமியைப்பொறுத்தவரை, நம்மிடம் இசையமைக்கும் வேலையை கொடுத்து விட்டால் அதன்பிறகு அதில் தலையிடவே மாட்டார். அதனால் நமக்கு பொறுப்பும், பயமும் அதிகமாகி விடும். அதேசமயம் முழு சுதந்திரம் தரப்பட்டதால் எந்த தடையும் இன்றி தேவையான இசையை நம் விருப்பத்திற்கு கொடுக்க முடியும். அதனால் எனக்கு யார் முழுசுதந்திரம் கொடுத்தாலும் அந்த படங்களில் எனது இசைத்திறமை கூடுதலாகவும் முழுமையாகவும் வெளிப்படும்.
* கிராமத்து கதைகளுக்கு நீங்கள் முதலிடம் கொடுப்பதாக தெரிகிறதே?
என்னைப்பொறுத்தவரை கிராமம், நகரம் என எந்த கதைக்களமாக இருந்தாலும் இசையமைக்க தயாராக இருக்கிறேன். ஆனால், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, சுந்தரபாண்டியன், மதயானைக்கூட்டம், மஞ்சப்பை என கிராமத்து கதைகளுக்கு அதிகமாக நான் இசையமைத்திருப்பதால் மற்றவர்கள் அப்படி நினைக்கலாம். ஆனால் இப்போது அரை டஜன் படங்களுக்கு இசையமைக்கிறேன். அதில் 4 படங்கள் சிட்டி சப்ஜெக்டுகளில்தான் உருவாகிறது. இந்த படங்கள் வெளிவரும்போது என் மீது விழுந்திருக்கும் கிராமத்து முத்திரை மாறி விடும்.
* குத்துப்பாடல்களின் ஆதிக்கம் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?
இசை என்பது மனசை மயிலிறகாய் வருடுவதாக இருக்க வேண்டும். மயக்கும் இசையை கேட்கத்தான் எந்த காலத்து ரசிகர்களும் ஆசைப்படுகிறார்கள். அந்த மாதிரியான பாடல்கள்தான் காலத்துக்கும் மக்கள் மத்தியில் ஒலித்துக்கொண்டேயிருக்கும். ஆனால் குத்துப்பாடல்கள் என்கிறபோது அந்த படங்கள் வெளிவந்த நேரத்தில் மட்டுமே ஒலிக்கும். அதன்பிறகு காணாமல் போய் விடும். அதனால்தான் நான் குத்துப்பாடல்கள் கட்டாயம் என்று டைரக்டர்கள் கேட்டாலும் அந்த பாடல்களிலும் மெலோடித்தன்மையை கலந்து வெளிப்படுத்தி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைக்க முயற்சி எடுக்கிறேன். குறிப்பாக, பார்ஸ்ட்புட் மாதிரியான இசையை கொடுப்பதில் எனக்கு எப்போதுமே ஈடுபாடு இருந்ததில்லை. என்னிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொரு இசையும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
* சினிமா பாடல்களுக்கு இசையமைப்பது மட்டுமே ஒரு இசைக்கலைஞனுக்கு திருப்தியை கொடுத்து விடுமா?
சினிமா பாடல்கள் என்கிறபோது மற்றவர்கள் கேட்பது போன்ற இசையை கொடுக்க வேண்டும். அதில் சில சமயங்களில் திருப்தி கிடைக்கும், கிடைக்காமலும் இருக்கும். அதனால் எனக்கு இசை ஆல்பங்கள் பண்ண வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. ஏற்கனவே பக்தி உள்பட சில ஆல்பங்களை பண்ணியிருந்தாலும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த வந்தே மாதரம் போன்று ஒரு ஆல்பம் பண்ணும் ஆசை உள்ளது. அது வறுமையில் வாடும் ஏழைகளின் சூழலை மையமாகக் கொண்டு உருவாகும். அதேசமயம் அவர்களின மனதில் நம்பிக்கையை விதைக்கும் புரட்சிகரமான ஆல்பமாக இருக்கும். அந்த ஆல்பத்தை 2016ல் வெளியிடுவேன்.
* சமீபகாலமாக மொழி தெரியாதவர்களை பாட வைத்து வருவது ஏன்?
என்னைக்கேட்டால் பாடல்களின் இடம்பெறும் வார்த்தைகள் தெளிவாக கேட்க வேண்டும் என்று நினைப்பேன். அதனால்தான் அதிரடியான இசையை குறைத்து மெலோடித்தன்மை கொண்ட இசைக்கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவேன். அதேபோல், நன்றாக தமிழை உச்சரிக்கக்கூடிய பாடகர்-பாடகிகளை அதிகமாக பாட வைப்பேன். தமிழை கடித்து துப்பும் வட இந்திய பாடகர்-பாடகிகளை நான் என் படங்களில் பாட வைப்பதே இல்லை.
* நடிகர்-நடிகைகள் பின்னணி பாடுவது ஆரோக்கியமான விசயமா?
அவர்கள் பாடும் பாடல்கள் ஹிட்டாகி வருவதால் அப்படி செய்கிறார்கள். ஆனால் இசையே தெரியாதவர்களை பாட வைப்பது ஆரோக்கியமான விஷயமல்ல. இப்போதைய நடிகைகளில் லட்சுமிமேனன் நன்றாக சங்கீதம் பயின்றவர். மஞ்சப்பை படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்திருந்தபோது, சில வர்ணங்கள், கீர்த்தனைகளை பாடிக்காண்பித்தார். ரொம்ப அற்புதமாக இருந்தது. சிறு வயதில் இருநதே அவர் முறையாக சங்கீதம் பயின்றிருக்கிறார். அதனால் அவருக்கு பியூச்சரில் என் இசையில் பாடல் கொடுக்க இருக்கிறேன். அந்த மாதிரி இசையை நன்கறிந்தவர்களுக்கு பாடும் வாய்ப்பு கொடுக்கலாம். அதுதான் இசைக்கு ந்ல்லது என்று கருதுகிறேன்.
* முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு நீங்கள் இன்னும் இசையமைக்கவில்லையே?
இதுவரை என்னை ப்ரூப் பண்ணக்கூடிய கதைகளுக்கு இசையமைப்பதில் மட்டுமே எனது கவனம் இருந்தது. முதலில் நல்லதொரு அடித்தளத்தை போட வேண்டும் என்பதால் என் கவனம் அப்படி சென்று கொண்டிருநதது. ஆனால், இனிமேல் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைப்பதிலும் ஆர்வம் காட்டுவேன். அதற்கான சூழ்நிலைகளும் தற்போது கைகூடும் நிலை உருவாகியுள்ளது.
* விருது பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கிறீர்களா?
அரசு தரும் விருதுகளின் மீது எனக்கு பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. ஆனால், படத்துக்குப்படம் ரசிகர்கள் விரும்பும் தரமான இசையை கொடுத்து அவர்களின் கைதட்டலை பெற வேண்டும் என்பதில்தான் எனது முழு ஆர்வமும் உள்ளது. அவர்களின் கைதட்டல்தான் ஒரு கலைஞனுக்கு சிறந்த விருது என்று நான் கருதுகிறேன். அதனால் ரசிகர்களுக்கு படத்துக்குப்படம் சிறந்த இசை விருந்தை கொடுத்து அவர்கள் தரும் கைதட்டல் விருதினை பெறுவதே என முதல் நோக்கமும், முக்கிய நோக்கமுமாக உள்ளது என்கிறார் ரகுநந்தன்.