நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் |
சென்னை தியேட்டர் ஒன்றில், தகராறில் ஈடுபட்ட, சினிமா நடிகை புவனேஸ்வரியை, ஆம்பூர் அருகே போலீசார் கைது செய்தனர். சென்னை சினிமா தியேட்டர் ஒன்றில், கார் நிறுத்தும் போது, குமார் என்ற டிரைவருக்கும்; நடிகை புவனேஸ்வரி மற்றும் அவருடன் வந்த வக்கீல்கள் இருவருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டது. இதில், கார் டிரைவர் குமார், அவர் குடும்பத்தினர், தியேட்டர் காவலாளி மற்றும் விசாரணை நடத்திய போலீசார், சரமாரியாக தாக்கப்பட்டனர்.
சென்னை, நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து, தலைமறைவான நடிகை புவனேஸ்வரி மற்றும் அவருடன் இருந்த வக்கீல்களை தேடினர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே, போலீசார் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் சென்று கொண்டிருந்த, "இனோவா காரை, காலை, 10:00 மணிக்கு, பச்சகுப்பத்தில் மடக்கிப் பிடித்து, சோதனை செய்தனர்; காருக்குள் நடிகை புவனேஸ்வரி இருப்பது தெரிந்தது. சந்தேகப்பட்ட போலீசார், கார் டிரைவரிடம், "காரில் இருப்பவர், புவனேஸ்வரி தானே? என, கேட்டனர். அதற்கு, "நான் புவனேஸ்வரி இல்லை; பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் என, புவனேஸ்வரி பதிலளித்தார். ரோந்து போலீசார், காரை, ஆம்பூர் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்த போது, காருக்குள் இருப்பது, நடிகை புவனேஸ்வரி என்பது தெரிந்தது. இதையடுத்து புவனேஸ்வரியை, போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு, சென்னை நீலாங்கரையில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தகவல் கொடுத்தனர். நீலாங்கரை போலீசார், வந்து அழைத்து செல்வதாக கூறினர். இதனால் புவனேஸ்வரியை, வேலூர் அடுத்த சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனுக்கு, அழைத்து வந்தனர். அங்கு புவனேஸ்வரி, 30 நிமிடம் அமர்ந்திருந்தார். பகல், 12:30 மணிக்கு நீலாங்கரை போலீசாரிடம் புவனேஸ்வரி ஒப்படைக்கப்பட்டார். பின், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக உள்ள மற்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
பிரியாணி கேட்ட புவனேஸ்வரி : ஆம்பூர் போலீசார், புவனேஸ்வரியை கைது செய்த போது, "நான் சாப்பிடவில்லை என, அவர் கூறினார். இட்லி, தோசை வாங்கி தந்த போது, "எனக்கு, ஆம்பூர் பிரியாணி வேண்டும் என கேட்டார். "இந்த நேரத்தில், பிரியாணி ரெடியாகாது எனக் கூறிய போலீசார், இட்லி, தோசை கொடுத்துள்ளனர். புவனேஸ்வரி தோசை மட்டும் சாப்பிட்டார். நீலாங்கரை போலீசார் வரும் வரை, சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனில் புவனேஸ்வரி காத்திருந்தார். அந்த நேரத்தில், பிரியாணி குறித்து, மீண்டும் பேச்சு எழுந்தது. சில போலீசார், ஆர்வமாக, "ஆம்பூர் பிரியாணிக்கு பதில், வேலூர் பிரியாணி நன்றாக இருக்கும் என்று கூறி, வாங்கி கொடுத்துள்ளனர். அதை புவனேஸ்வரி, ருசித்து சாப்பிட்டார் என்று கூறப்பட்டது. நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு, அங்குள்ள போட்டோகிராபர்கள், நிருபர்கள் சென்றனர். படம் எடுக்க விடாமல், பல காரணங்களை கூறி, போலீசார் தடுத்து விட்டனர். பிறகு, சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து, ரகசியமாக, நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.