மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
'மிஸ்' சென்னை பட்டம் வென்று அழகி போட்டியில் மட்டுமின்றி தமிழ் சினிமாத்துறையிலும் தன் தனிப்பட்ட திறமையால் வெற்றி பெற்றவர் நடிகை கஸ்துாரி. அரசியல், சினிமா உட்பட எந்தவொரு பிரச்னைகள் குறித்தும் சமீபகாலமாக தடாலடி கருத்துக்களை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்து வருகிறார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தவர், தினமலர் வாசகர்களுக்காக மடை திறந்த வெள்ளமென கொட்டி தீர்த்தார். அதிலிருந்து...
* எதையும் விமர்சிக்கும் தைரியம் வந்தது எப்படி.
எப்போதுமே தைரியமான பொண்ணு நான். எதையும் வெளிப்படையாக பேசுவேன்.
* நடிக்கும் போது விமர்சிக்கவில்லையே வேறு ஐடியா இருக்கிறதா.
அரசியலுக்கு நான் வரப்போறேன்னு கேட்கிறீர்களா? அதெல்லாம் இல்லை. நான் முன்பும் இதுபோல கூறி வந்திருக்கிறேன். அது யார் காதிலும் விழவில்லை. தற்போது நாமே நமக்கு ஒரு ஊடகமாக மாறிட்டோம். அதனால் நிறைய பேசுவது போன்ற பிம்பம் தெரிகிறது. எந்தவொரு தொலை நோக்குடனும் பேசவில்லை.
* எப்படி இதை கூறுகிறீர்கள்.
பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்து விட்டு தாய் நாட்டிற்கு திரும்பியிருக்கிறேன். நடிகர் அமீர்கான் குறித்து பேஸ்புக்கில் பதிவு செய்தேன். முந்தைய ஆட்சி குறித்து சில விஷயங்களை எழுதினேன். அதை யாரும் கவனிக்கவில்லை. தாய்நாடு வந்த பிறகு ஒரு பேட்டி கொடுத்தேன். அதன் தலைப்பை எடுத்து எனக்கு பிடித்த தினமலர் நாளிதழ் வெளியிட்டது. அன்று வைரலானவள் தான். இன்னும் முடியவில்லை. அந்த வகையில் தினமலர் நாளிதழுக்கு நன்றி.
* அரசியலில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் உள்ளதா.
பிரதிநிதித்துவத்தை விடுங்க... முதலில் பெண்களுக்கு மரியாதை கொடுக்க சொல்லுங்க... சினிமாவிற்கு வந்த போது, 'சினிமா ஒரு சாக்கடை. அதில் நீ விழுந்து விட்டாய்,' என்றனர். ஆனால் எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் சுயமரியாதையை இழக்காமல் சினிமாவில் வெற்றி பெற்றேன். பொது வாழ்க்கைக்கு வந்த எந்த பெண்களையுமே எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற நிலையில் அரசியல் என்பது பெரிய களம். அதற்கு வீட்டினர் ஆதரவு இருந்தால் மட்டும் போதாது. எல்லோருடைய புரிதலும், ஆதரவும் இருக்க வேண்டும். அது இல்லாத போது பெண்களால் அரசியலில் வெற்றி பெறுவது கஷ்டம்.
* கமல் அரசியலுக்கு வருவது குறித்து?
நான் ஜோசியக்காரி இல்லை. பொறுப்புள்ள எந்த மனிதரும் பொறுப்பை செயலில் காட்டினால் அதை வரவேற்பேன். இதில் சினிமாவா அல்லது மற்ற துறையா என்ற கேள்வி இல்லை. இந்தியாவில் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். ஒருவருடைய தொழிலை வைத்து அவரது தகுதியை நிர்ணயிப்பது தவறான போக்கு.
* ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் ஆதரவு யாருக்கு.
மற்றவர்கள் குறித்து கேட்காமல் இந்த இரண்டு பேர் மட்டும் குறித்து கேட்கிறீர்களே... இப்போது உள்ள ஆளுங்கட்சிக்கோ, தேசிய கட்சிக்கோ, எதிர்கட்சிக்கோ, புதுக்கட்சிக்கோ ஆதரவு தருவீர்களா என கேட்காமல் இல்லாத அந்த 2 பேருக்கு ஏன் ஜோசியம் கேட்கிறீர்கள்?
* நீங்களும் சினிமா துறையில் இருப்பதால்...
நான் ஒரு மனுஷி. அதுவும் தமிழச்சி. இந்த நாட்டில் எந்த ஒரு தமிழ் உணர்வாளர்களுக்கும் என் ஆதரவு உண்டு. அந்த இருவர் மட்டுமில்லை. ஏழரை கோடி மக்களில் எந்தவொரு நல்லவர் வந்தாலும் என் ஆதரவு இருக்கும்.
* கமல் வந்தால் அவருக்கு உங்கள் யோசனை?
அரசியலுக்கு வருவது குறித்து கமல், ரஜினி நிலைப்பாடு தெரியவில்லை. தெரியும் போது தெரிவிக்கிறேன்.
* தியேட்டர் கட்டண உயர்வு?
தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய விஷயம். கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் ஜி.எஸ்.டி.,யில் மாநில வரி பங்கை விட்டு கொடுத்துள்ளனர். தமிழகத்தில் பத்து சதவீதம் ஏற்றி கேட்கின்றனர். கட்டண உயர்வு சினிமா தயாரிப்பாளர்களை பாதிக்கும். தியேட்டர் உரிமையாளர்களுக்கு பாதிப்பு இருக்காது.
* இந்தாண்டு தீபாவளி கொண்டாட்டம்?
சென்னையில் குடும்பத்துடன்.
* பட்டாசு வெடிக்க தடையாமே
பட்டாசு வெடிக்காதீர்கள் என்பதில் உடன்பாடில்லை. பட்டாசு வெடிப்பதை மாசு என்பவர்கள், கோயில் திருவிழாக்களில் சிலர் பண்ணுகிற அலப்பறை, ஒலிபெருக்கி தொந்தரவை எண்ணிபார்க்க வேண்டும்.
* மறைந்த முதல்வர் ஜெ.,
இந்தியாவின் இரும்பு மனிதர் படேல் என்றால் தமிழகத்தின் இரும்பு மனுஷி ஜெ.,
* விஜய்சேதுபதி கட்டி பிடித்து வாழ்த்தியது?
ஸ்டன்ட் நடிகர்கள் விழாவில் அவர் ஹக் செய்து வாழ்த்தியது உண்மையே. பீட்சாவில் அவருடன் நடிக்க இருந்தது சில காரணங்களால் முடியவில்லை. அவருடன் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்துள்ளேன்.