மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
'பாகுபலி 2' படத்தை கர்நாடகாவில் திரையிட கன்னட அமைப்புகள் அனுமதி மறுத்து வருகின்றன. மேலும், 9 வருடங்களுக்கு முன் சத்யராஜ் பேசிய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கோரி வருகின்றன. சத்யராஜை எதிர்த்தும், பாகுபலி 2 பட வெளியீட்டை எதிர்த்தும், 'பாகுபலி 2' படம் உலகம் முழுவதும் வெளியாகும் நாளான ஏப்ரல் 28ம் தேதி பந்த் ஒன்றை நடத்த உள்ளார்கள். ஒரு திரைப்படத்தை எதிர்த்து பந்த் நடத்தும் அளவிற்கு கன்னட அமைப்புகள் இறங்கிப் போயுள்ளன.
உண்மையிலேயே கன்னட உணர்வுடன் இந்த விவகாரம் நடக்கவில்லை என கன்னடத் திரையுலகத்திலிருந்து நமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் சுமார் 12 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டு சுமார் 50 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. செலவெல்லாம் போக சுமார் 35 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டிக் கொடுத்திருக்கிறது. அதனால் 'பாகுபலி 2' படத்தின் இரண்டாம் பாகத்தின் கர்நாடக உரிமைக்கு சுமார் 35 கோடி ரூபாய் வரை தயாரிப்பாளர் தரப்பில் விலை நிர்ணம் செய்துள்ளார்கள்.
இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்ட விவகாரம்தான் கன்னடத் திரையுலகத்தினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என கன்னடம் அல்லாத மொழிகளில் அவர்களது மாநிலத்தில் ஒரு படத்தின் விலையை இந்த அளவிற்கு நிர்ணயம் செய்தால் அவர்களால் முதல் பாகத்தைப் போல இரண்டாவது பாகத்தில் லாபம் சம்பாதிக்க முடியாது. அதனால், 'சிண்டிகேட்' அமைத்து 'பாகுபலி 2' படத்தின் உரிமையை தாங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு வாங்க முடிவு செய்துள்ளனர். அது, பாகுபலி தயாரிப்பாளர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. அவர்கள் 35 கோடிக்கும் கீழாக வியாபாரம் செய்ய முடியாது என மறுத்துவிட்டனர்.
அதனால்தான், கன்னட அமைப்புகளுடன் கலந்து பேசி, 'பாகுபலி 2' படத்தின் வெளியீட்டிற்குப் பிரச்சனை செய்ய முடிவெடுத்துள்ளார்கள். அந்தப் படத்திற்கு எதிராக எந்த விஷயமமுமே இல்லாததால் 9 வருடங்களுக்கு முன்பாக சத்யராஜ் பேசிய பேச்சைத் திரும்ப தூசி தட்டி, அவர் மன்னிப்பு கேட்டால்தான் படம் வெளியாகும் என பிரச்சனையை ஆரம்பித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
'பாகுபலி' படத் தயாரிப்பாளர்கள் 'நான் ஈ' நடிகரான கிச்சா சுதீப் மூலமாக கன்னட அமைப்புகளுடன் பேசி வருகிறார்களாம். ஏதாவது உடன்பாடு எட்டினால் மட்டுமே படம் வெளியாகும் என்பதுதான் தற்போதைய நிலை என்கிறார்கள். சுமூகமாகப் போக சிலர் 50 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசுவதாகவும் தெரிகிறது. இதை கன்னடத் திரையுலகத்தைச் சார்ந்த தமிழ்ப் படங்களில் நடித்த நடிகர் ஒருவரே முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இதுதான் உண்மையான பிரச்சனை, மற்றபடி 'பாகுபலி 2' படத்தைப் பார்க்க கன்னட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிகிறது.
சத்யராஜ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டால், இங்கு தமிழ்நாட்டில் படத்தை வெளியிட எதிர்ப்புக் குரல் எழும்பவும் வாய்ப்புள்ளது. கர்நாடகாவில் வெளியிடாமல் போனால் 50 கோடி வரைதான் நஷ்டம் வரும். ஆனால், உலகம் முழுவதும் தமிழில் வெளியானால் சுமார் 200 கோடி வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் 'பாகுபலி' தயாரிப்பாளர்கள் இந்த நிலைமையை எப்படி அணுகப் போகிறார்கள் என்பதை தென்னிந்தியத் திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.