மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
'தெறி' திரைப்படம் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு வினியோக ஏரியாவில் மட்டும் சுமார் 60 தியேட்டர்களில் வெளியாகவில்லை. விஜய் போன்ற ஒரு முன்னணி வசூல் நடிகரின் படம் இப்படி திரையரங்க உரிமையாளர்களால் வெளியாகாமல் தடுத்து நிறுத்தப்பட்டது கோலிவுட்டில் பலத்த ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய் படம் பார்க்க அவருடைய ரசிகர்கள் எப்போதுமே மிகவும் ஆவலுடன் இருப்பார்கள். படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே படத்தின் அசலையும் எடுத்துவிடுவார்கள். அடுத்த நாட்களிலிருந்து அவர்களுக்கு லாபமும் கிடைக்க ஆரம்பிக்கும்.
ஆனால், 'தெறி' படம் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் வெளியாகாமல் போனதால் அந்தப் படத்தை வெளியிட இருந்த தியேட்டர்கள் வேறு வழியில்லாமல் பழைய படங்களையே ஓட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். கடந்த வாரம் வெளிவந்த படங்களும், அதற்கு முன் வெளிவந்த படங்களும் ஒரு சில நாட்களிலேயே படம் பார்க்க விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் ரசிகர்கள் வந்தனர். அந்த நஷ்டத்திலிருந்தே மீண்டு வராத நிலையில் விடுமுறை நாட்களில் குடும்பத்தினரும், குழந்தைகளும் வந்து பார்க்க நினைத்த 'தெறி' படத்தைத் திரையிட முடியாத நிலையில் தெரிந்தே வசூலை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
செங்கல்பட்டு ஏரியாவில் பெரிய ஊரான காஞ்சிபுரத்தில் விஜய் படங்கள் வெளிவந்தால் முதல் நாளிலே சுமார் 200 ரூபாய் அளவிற்கு டிக்கெட் விலை இருக்குமாம். சில நாட்கள் கழித்து 150 ரூபாயும், அதன் பின்னர் 120 ரூபாயும், அடுத்து 100 ரூபாயும் என தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்வார்களாம். 'எந்திரன்' திரைப்படத்திற்கு முதல் சில நாட்கள் 250 ரூபாய் வரை டிக்கெட்டை விற்றிருக்கிறார்கள். 'தெறி' படம் நேற்று வெளியாகியிருந்தால் அந்த அளவிற்கு டிக்கெட்டை விற்றிருப்பார்கள் என்று தெரிவிக்கிறார்கள். சராசரியாக 30 ரூபாய்க்கு விற்க வேண்டிய டிக்கெட்டின் விலைதான் இத்தனை மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.
தற்போது செங்கல்பட்டு ஏரியாவில் 'தெறி' வெளியாகாததால் காஞ்சிபுரத்தில் உள்ள ரசிகர்கள் அருகில் உள்ள செய்யாறு, அரக்கோணம் ஆகிய ஊர்களுக்கும் செங்கல்பட்டு, தாம்பரம் பகுதியில் உள்ளவர்கள் சென்னைக்கும், திருவள்ளூர் பகுதியில் உள்ளவர்கள் அரக்கோணம், சென்னைக்கும் சென்று படத்தைப் பார்த்து வருகிறார்கள்.
செங்கல்பட்டு ஏரியாவில் ஜாபார்கான்பேட்டையில் உள்ள காசி தியேட்டரில் 'தெறி' படம் வெளியாகவில்லை. ஆனால், அருகில் உள்ள உதயம் வளாகத்தில் டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்த நிலையில் மேலும் டிக்கெட்டுகள் கேட்டு வருபவர்களுக்கு டிக்கெட்டுகளைக் கொடுத்து அவர்களை காசி தியேட்டருக்கு அனுப்புகிறார்கள். அங்கு எந்த போஸ்டரும், பேனரும் இல்லாமலேயே வெளியில் தெரியாமல் 'தெறி' படத்தைத் நேற்று இரவு முதல் திரையிட்டு வருகிறார்கள்.
'தெறி' பட செங்கல்பட்டு வினியோக விவகாரத்தால் தற்போது தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகிய இருவருக்குமிடையே ஒரு மோதலை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஹீரோக்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்ற குரல் அதிகமாக ஒலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'தெறி' படத்திற்கு விஜய்க்கு சுமார் 30 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளதாகவும், அஜித்தின் அடுத்த படத்திற்கு 40 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளதாகவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது. ஹீரோக்களின் சம்பளம்தான் ஒரு பெரிய படத்தின் செலவில் பாதித் தொகையாக அமைந்துவிடுகிறது. எனவே, ஹீரோக்கள் சம்பளத்தைக் குறைத்தால் டிக்கெட் விலையைக் குறைக்கவும் வாய்ப்புகள் அதிகம் உருவாகும். ரசிகர்களும் தியேட்டருக்கு அதிகமாக வருவார்கள் என்ற பேச்சு தற்போது பலமாக எழுந்துள்ளது.
அதற்கு தற்போதைய 'தெறி' செங்கல்பட்டு ஏரியா வெளியீடு என்பது ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.