பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவான தெலுங்குப் படமான 'கல்கி 2898 ஏடி' படம் பான் இந்தியா படமாக வெளியாகி 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
அந்தப் படத்தைப் பற்றியும், அமிதாப், பிரபாஸ் பற்றியும் ஹிந்தி நடிகரான அர்ஷத் வர்சி கிண்டலாகப் பேசி பேட்டி ஒன்றைக் கொடுத்திருந்தார். படத்தில் பிரபாஸ் ஜோக்கர் போல இருந்தார் என்ற அவரது பேச்சு பிரபாஸ் ரசிகர்களையும், தெலுங்குத் திரையுலகினரையும் கோபப்பட வைத்தது.
தெலுங்கு சினிமா ரசிகர் ஒருவர் கல்கி படத்தின் ஒரு காட்சியைப் பகிர்ந்து அது ஒட்டுமொத்த பாலிவுட்டை விடவும் சிறந்தது என்று போட்டிருந்தார். அப்பதிவில்தான் படத்தின் இயக்குனரான நாக் அஷ்வின், அதற்குப் பதிலளிக்கும் விதத்தில், கனிவாக ஒரு கமெண்ட் போட்டு அர்ஷத் வர்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
“பின்னோக்கிப் போக வேண்டாம். இனி வடக்கு தெற்கு அல்லது பாலிவுட், டோலிவுட் என எதுவும் இல்லை. பெரிய படங்களைப் பாருங்கள். இந்திய திரையுலகம் ஒன்றானது. அர்ஷத் சாப் தனது வார்த்தைகளை சிறப்பாகத் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், பரவாயில்லை, அவரது குழந்தைகளுக்கு புஜ்ஜி பொம்மைகளை அனுப்பி வைக்கிறேன். நான் இன்னும் கடுமையாக உழைப்பேன். கல்கி 2 வெளியாகும் போது முதல் நாள் முதல் காட்சியில் பிரபாஸ் இதுவரை இல்லாத அளவில் சிறப்பாக இருக்கிறார் என டுவீட் செய்வீர்கள்,” என்று கனிவான பதிலடி கொடுத்திருக்கிறார்.