தெலுங்கு திரையுலகில் பல வருடங்களுக்கு முன்பு கதாநாயகனாக நடித்து தற்போது தென்னிந்திய அளவில் மிகவும் தேடப்படும் வில்லன் நடிகராக நடித்து வருபவர் நடிகர் ஜெகபதிபாபு. கடந்த வருடம் வெளியான சல்மான்கானின் கிசிகா பாய் கிசிகி ஜான் படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்தார். பிரபலங்களை வைத்து பல நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவது வழக்கம். அதில் சில மோசடிகளும் அவ்வப்போது நடைபெறும். அப்படி ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் தன்னை ஏமாற்றியது குறித்து இப்போது வெளிப்படையாகவே கூறியுள்ளார் ஜெகபதிபாபு.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சோசியல் மீடியா பதிவில் கூறும்போது, “ரியல் எஸ்டேட்டில் அதிக அளவில் மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதல்வர் ரேவந்த் ரெட்டி கூட இது குறித்து எச்சரித்து இருந்தார். சமீபத்தில் நான் ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடித்தேன். அவர்கள் என்னை கூட ஏமாற்றி விட்டனர். அவர்கள் யார், என்ன நடந்தது, இதையெல்லாம் விரைவில் சொல்கிறேன். ஒரு இடத்தை வாங்குவதற்கு முன்பாக ரியல் எஸ்டேட் குறித்த நடைமுறைகளையும் விதிமுறைகளையும் கட்டாயம் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.. யாருடைய வலையிலும் விழுந்து விட வேண்டாம்” என்று எச்சரிக்கும் விதமாக கூறியுள்ளார்.