ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
பட்டத்து யானை படத்தில் நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா, விஷால் ஜோடியாக அறிமுகமாகிறார். ஐஸ்வர்யாவை சென்னை, அண்ணாசாலையில் உள்ள ரெயின் ட்ரீ நட்சத்திர ஓட்டலில் நடிகர் அர்ஜூன் கையை பிடித்து அழைத்து வந்து பத்திரிக்கை மற்றும் மீடியாக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவ்விழாவில் நடிகர் அர்ஜூன், அவரது மகள் ஐஸ்வர்யா, பட்டத்து யானை கதாநாயகர் விஷால், இயக்குனர் பூபதி பாண்டியன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் மகள் ஐஸ்வர்யாவை அறிமுகம் செய்து வைத்து பேசிய நடிகர் அர்ஜூன் நான் எத்தனையோ முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருக்கிறேன். ஆனால் அப்போது எல்லாம் இல்லாத படபடப்பும், இனம் புரியாத சந்தோஷமும் இந்தமுறை என்னுள் இருக்கிறது. அதற்கு காரணம் என் மகளும் நான் சார்ந்து இருக்கும் சினிமா துறையிலேயே அடியெடுத்து வைப்பது தான். என் நண்பர்களில் பலரும் என் மகளை நடிகையாக அறிமுகப்படுத்துகிறேன் என்றதும் வாழ்த்து தெரிவித்தனர். ஒரு சிலர் அவர்களும் நண்பர்கள் தான்... ஆண்பிள்ளை என்றால் பரவாயில்லை, பெண் மகளை சினிமாவிலா...? என்று கேட்டனர். அவர்களிடம் நான் சார்ந்திருக்கும் துறையே நானே தவறாக பேசக்கூடாது. எல்லா துறையிலும் எல்லாமும் இருக்கிறது என்று விளக்கம் சொல்லி, எந்தவித பயமும் இன்றி பட்டத்து யானை படத்தில் கதாநாயகியாக நடிக்க எனது மகள் ஐஸ்வர்யா விருப்பப்படி சம்மதித்தேன்.
தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஐஸ்வர்யாவை நடிக்க கேட்டு பலரும் வந்திருக்கின்றனர். ஆனாலும் தமிழில் பட்டத்து யானை படத்தில் அவரை அறிமுகம் செய்ய காரணம் நடிகர் விஷாலும், அவரது தந்தை ஜி.கே.ரெட்டியும் தான். விஷால் உதவி இயக்குனராக என்னிடம் ஏழுமலை உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்தபோது அவர் பெரிய நடிகராக வருவார் என்று கூறியவன் நான். இன்று அதற்கு கைமாறாக அவரது படத்தில் எனது மகளை விஷால் விரும்பி கேட்டு கதாநாயகி ஆக்கியிருக்கிறார். இதற்காக விஷால், அவரது அப்பா ஜி.கே.ரெட்டி, இயக்குனர் பூபதி பாண்டியன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோருக்கு நன்றி என்றார்.
இதே விழாவில் பேசிய விஷால், அர்ஜூன் என்னை பெரிய நடிகராக வருவார் என்று முன்பே கூறியதற்காக மட்டுமின்றி, அவரிடம் வேலைபார்த்தபோது அவரிடம் பெற்ற பேட்டா காசு ரூ.100 தான் எனது முதல் சம்பளம். அதுமாதிரி கிடைத்த பணத்தை சேர்த்து என் தாய்க்கும், தந்தைக்கும் புது உடைகள் வாங்கி கொடுத்தேன். அந்த மகிழ்ச்சிக்கும் காரணம் அர்ஜூன் சார் தான். அவரது மகளுடன் ஜோடி சேர்ந்திருப்பது மகிழ்ச்சி என்றார்.
விழாவில் ஐஸ்வர்யாவிடம், ஏற்கனவே தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் ஐஸ்வர்யா என்ற பெயரில் நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால் தங்கள் பெயரை எதுவும் மாற்றிக்கொள்வீர்களா என்று செய்தியாளர் கேட்டபோது, என் பெயர் ஐஸ்வர்யா அர்ஜூன் என்றார். அதேமாதிரி இந்தியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் தமிழை மறந்து விடுவீர்களா என்று கேட்டபோது, அப்படியெல்லாம் கிடையாது. இப்போது கூட ஷாரூக்கான் ஜோடியாக ஒரு படத்தில் கேட்டு இருக்கிறார்கள் என்று நகைச்சுவையாக பேசிய ஐஸ்வர்யா சென்னை, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பட்டபடிப்பை முடித்துவிட்டு, லண்டனில் உயர் படிப்பையும் முடித்து கோலிவுட்டில் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.