தெலுங்கு திரையுலகில் சீனியர் நடிகர்களில் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி மட்டுமே இப்போதும் தங்களது திரையுலக பயணத்தை கதாநாயகர்களாக தொடர்ந்து வருகிறார்கள். இதில் நடிகர் பாலகிருஷ்ணாவின் படங்களுக்கு என ஒரு தனி வரவேற்பு தொடர்ந்து இருந்து வருகிறது. அதனால் தான் இந்த வருட துவக்கத்தில் வெளியான வீரசிம்ஹா ரெட்டி, சமீபத்தில் வெளியான பகவந்த் கேசரி என பாலகிருஷ்ணாவின் படங்கள் தொடர்ந்து வெற்றியை பெற்று வருகின்றன.
அனில் ரவிபுடி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ம் தேதி பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், ஸ்ரீலீலா, அர்ஜுன் ராம்பால் ஆகியோர் நடித்திருந்த பகவந்த் கேசரி திரைப்படத்தை தற்போது ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் இந்த படத்தின் ஹிந்தி டப்பிங்கிற்காக தானே சொந்தமாக குரல் கொடுத்திருக்கிறார் பாலகிருஷ்ணா. ஹிந்தியில் அவர் டப்பிங் பேசும் முதல் திரைப்படமும் இதுதான். அவரது படங்கள் இதற்கு முன் யூடியூப் மூலமாக ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருவதால் இந்த பகவந்த் கேசரியை நேரடியாக திரையரங்குகளிலேயே வெளியிட திட்டமிட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன.