தினமலர் விமர்சனம் » பதினெட்டான் குடி
தினமலர் விமர்சனம்
நடிகர் - இயக்குநர் ஆர்.பாண்டியராஜனின் வாரிசு பிருத்வி நாயகராக நடித்து வெளிவந்திருக்கும் மற்றுமொரு படம் "பதினெட்டான் குடி"! மூன்றாவது படமா? நான்காவது படமா...? என்பது அப்பாவுக்கும் பிள்ளைக்குமே வெளிச்சம்!!
வீட்டு விசேஷங்கள், விழா, வேத்திகளுக்கு தார்பாய், பந்தல் போட்டு, மைக்செட் ஸ்பீக்கர் கட்டும் கடை வைத்திருக்கும் அப்பாவி சிங்கம் புலி. அவரிடம் வேலை பார்க்கும் அடப்பாவி கேரக்டர்கள் பிருத்வி, யோகி, ஜெயகாந்த், அருண் உள்ளிட்டோர். இவர்கள் பந்தல் போட போன இடத்தில் பள்ளி மாணவி ஸ்ரீநிஷா, ப்ருத்வி மீது காதல் கொள்ள, அந்த காதல் முறைமாமன், நுரைமாமன், அப்பன், ஆத்தா, தாத்தா என எல்லோரையும் தாண்டி கைகூடியதா...? இல்லை காதல் முறிந்ததா...? என்பது தான் வித்தியாசமாகவும், விளையாட்டாகவும் சற்றே விநோதமாகவும் படமாக்கி இருக்கும் "பதினெட்டான் குடி" படத்தின் மீதிக்கதை!
நாயகர் ப்ருத்வி, நாயகி ஸ்ரீநிஷா இருவரைக் காட்டிலும் சிங்கம்புலி, யோகி, வெங்கடேஷ், ஜெயகாந்த், அருண் உள்ளிட்டோர் அதிகமாக நடித்து "பதினெட்டான் குடி"யை தூக்கி நிறுத்துகிறேன் பேர்வழி... என தூக்கி அடித்திருக்கின்றனர்! பாவம்!!
வி.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு, சரவண கணேஷின் இசை இரண்டும் என்.சுந்தரேஸ்வரனின் எழுத்து-இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்து, இப்படத்தின் மூலம் ஏதோ சொல்ல முயன்று, அதுமுடியாமல் விக்கித்து போய் விலகி நிற்கின்றன என்பது மேலும் பாவம்!
மொத்தத்தில் "பதினெட்டான் குடி", "பரிகாசிக்கும்படி"யும் இல்லை! "பாராட்டும்படி"யும் இல்லை!! என்பது ரசிகர்களுக்கு லாபம்!!!