தினமலர் விமர்சனம் » இளைஞன்
தினமலர் விமர்சனம்
தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனத்தில் வெளிவந்திருக்கும் 75வது கலை படைப்பு, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் 50வது திரைப்படம் என எண்ணற்ற அருமை, பெருமைகளுடன் தைப்பொங்கலுக்கு வெளிவந்திருக்கும் தமிழ்படம் தான் இளைஞன்!
50வது ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில் நடக்கும் கதை! கதைப்படி ராஜநாயகம் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் தொழிலாளர்களை அடிமையாக நடத்துகிறார் அந்த கம்பெனியின் சிட்டிங் முதலாளியும், சீட்டிங் முதலாளியுமான ராஜநாயகம் எனும் வில்லன் சுமன். அவரது அயோக்கியதனத்தை எதிர்க்கும் தொழிலாளிகள் எல்லோருக்கும் தண்டனை, அதுவும் மரண தண்டனை என்னும் அளவிற்கு கொடூரமான வில்லன் சுமன். அப்படிப்பட்டவரை ஒருநாள் தன் மகன் ஒரு வார்த்தை கேட்டுவிட்டான் என்பதற்காக போதையை ஏற்றிக் கொண்டுபோய் எதிர்க்கிறார் தொழிலாளி ஆரோக்கியசாமி எனும் நாசர். நாசருக்கும், சுமன் தன் பாணியில் முடிவுகட்ட, நாசரின் மகனான கார்க்கி எனும் பா.விஜய் அதே கம்பெனியில் தொழிலாளியாக சேர்ந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஒன்று சேர்த்து கொண்டு சுமனையும், அவரது அதிகார வர்க்கத்தையும் மீட்டு எடுப்பதுதான் இளைஞன் படத்தின் மொத்த கதையும்!
ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்து கதை என்றாலும் அதை எத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முடியுமோ அத்தனை விறுவிறுப்பாகவும் சொல்ல முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றனர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும் கதை, வசனகர்த்தா கலைஞர் கருணாநிதியும்!
கதாநாயகர் கார்க்கியாக பா.விஜய் ஆரம்ப காட்சிகளில் தெரிந்தாலும் அதன்பின் பாத்திரம் அறிந்து பளிச் என்று நடித்திருக்கிறார். தொப்பை தொந்தியெல்லாம் குறைத்து கதாநாயகர்களுக்குரிய லட்சணத்தை பெற கடினமாக உழைத்திருக்கும் பா.விஜய்க்கு காதல் நாயகர் பட்டத்தை வேண்டுமானால் சிபாரிசிக்கலாம். ஆனால் புரட்சி நாயகர் பட்டத்திற்காக அவர் போராடியிருப்பது குருவி தலையில் பனங்காய் வைத்த கதையாக தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை!
வள்ளியம்மை பாத்திரத்தில் குஷ்பு பா.விஜய்யின் தாயாக தன் தாய்மையையே சிறப்பான நடிப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். பேஷ், பேஷ்! ரம்யா நம்பீசன் கணக்குபிள்ளை ஒய்.ஜி.எம்.மின் மகளாக பா.விஜய்யின் காதலியாக காதல் ஓவியங்கள் தீட்டுவதும், காதல் காவியங்கள் பாடுவதும் இளைஞன் படத்தின் குறிப்பிடத்தக்க சுவாரஸ்யங்கள்.
கெட்ட சுமனின் நல்ல தங்கையாக லண்டன் ரிட்டன் மீரா ஜாஸ்மின் தொழிலாளிக்காக போராடுவதும், பா.விஜய்க்கும் மீராவுக்கு காதல் ஏற்பட்டு விடுமோ? என ரம்யா பயப்படுவதும் இளைஞனை மேலும் சுவாரஸ்யபடுத்துகின்றன. வஸந்தசேனாவின் மறுபதிப்பாக சேனா நமீதா சுமனை தூண்டி விடுவதும், தூண்டில் போடுவதும் போராளி இளைஞனுக்கு போனஸ் மதிப்பெண்களை அள்ளித்தரும் சமாச்சாரங்கள்.
நமீதா-வடிவேலு காம்பினேஷன் கனவு காமெடி, கருணாஸ், டெல்லி கணேஷ், மணிவண்ணன், ஒய்.ஜி.மகேந்திரன், தியாகு, நான் கடவுள் ராஜேந்திரன், இளவரசு, ராஜ் கபூர், பாலாசிங் என படத்தில் எண்ணற்ற நட்சத்திரப் பட்டாளங்கள். அத்தனைக்கும் அழுத்தமான பாத்திரங்கள் என்பது கருணாநிதியின் கதை வசனத்திற்கான பெருமைக்குரிய சான்று!
வித்யாசகரின் இசையும், பி.எல்.சஞ்சயின் ஒளிப்பதிவும் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தினை மேலும் பிரமாண்டப்படுத்தி இருக்கின்றன.
தொழிலாளிகளின் தன்மானம் பற்றியும் அறியாதவன் பெண் மானத்தையும் அபகரிப்பவன்!! உள்ளிட்ட வசன காட்சிகளின் மூலமும் அதைகாட்சிப்படுத்தி இருக்கும் விதத்தின் மூலமும் "இளைஞன்" நல்ல கலைஞ(ர்)ன் எனலாம்!