தினமலர் விமர்சனம் » சுட்டிச் சாத்தான்
தினமலர் விமர்சனம்
சென்ற தலைமுறையினரின் உள்ளங்களை கொள்ளை கொண்ட மை டியர் குட்டிச்சாத்தான் மறுவடிவம் பெற்று நேற்றைய தொழில்நுட்பங்களையும், நாளைய தொழில்நுட்பங்களையும் கலந்து கட்டி கலக்கலாக வெளிவந்திருக்கும் படம்தான் இன்றைய மை டியர் குட்டிச்சாத்தான் (சுட்டிச் சாத்தான்).
கதைப்படி, மந்திர தந்திரங்கள் மூலம் நல்ல காரியங்கள் பல ஆற்றும் மந்திரவாதி பிரகாஷ் ராஜ், அவரது மகள் ஊர்மிளா! அந்த குடும்பத்தின் குலதெய்வமாக விளங்கும் குட்டி சாத்தானை பிரகாஷ் ராஜிடம் உதவியாளராக பணிபுரியும் வில்லன் மந்திரவாதி, தன் தந்திரத்தின் மூலம் பிரகாஷ் ராஜை கொன்று அவரிடமிருந்து கடத்துகிறான். கடத்தப்பட்ட அந்த சாத்தான் மூலம் பாழடைந்த பங்களாவில் புதைந்து கிடக்கும் விலை மதிப்பில்லா புதையலை கொள்ளையடிக்கத் திட்டமிடும் வில்லன், குட்டிச் சாத்தானை தீய வழிகளிலும் திருப்ப முயல்கிறான். ஆனால் சாத்தானோ... பேபி சோனியா, மாஸ்டர் சுரேஷ் உள்ளிட்ட குழந்தைகளின் கையில் கிடைத்து, அவர்கள் விரும்பும் சிறுவன் உருவத்தில், அவர்களுக்கு மட்டுமே தெரியும் வகையில் உரு மாறி உலா வருகிறது. சிறுவர்களுக்கு தேவையான வசதிகளையும், விளையாட்டுக்களையும் செய்யும் சாத்தானை சிறுவர்களிடம் இருந்து பிரித்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள களம் இறங்குகிறான் வில்லன். இது ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் சாத்தானை தங்கள் குடும்ப குல தெய்வமாக கருதும் ஊர்மிளா, சாத்தானைத் தேடி அப்பா பிரகாஷ் இறந்த துக்கத்தில் இருந்து மீண்டு கிளம்புகிறார். குட்டி சாத்தான் யார் கையில் கிடைத்தது? குழந்தைகள் என்ன ஆனார்கள்? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு பளீச் என விடையளிக்கிறது சுட்டி சாத்தானின் மீதிக் கதை!
பழைய மைடியர் குட்டிச் சாத்தானில் நடித்த பேபி சோனியா, மாஸ்டர் சுரேஷ், மாஸ்டர் முகேஷ் உள்ளிட்டவர்களுடன் அவர்களைப் போன்றே புதிய கலரில் மின்னுகிறார் குட்டிச்சாத்தானாக வரும் மாஸ்டர் அர்விந்த். குழந்தை நட்சத்திரங்கள் நால்வருமே நன்றாக நடித்திருக்கின்றனர்.
இந்த பழைய குழந்தை முகங்களுடன் மந்திரவாதி பிரகாஷ்ராஜ், அவரது மகளாக இந்தி நடிகை ரங்கீலா புகழ் ஊர்மீளா, காமெடி சந்தானம் உள்ளிட்டவர்களும் கலக்கலாக கலந்து அசத்தலாக நடித்திருக்கின்றனர். அதிலும் ரோபோ மூலம் புதையலை கண்டுபிடிக்கப் போகிறேன் பேர்வழி... என தன் இரு உதவியாளர்களுடன் களம் இறங்குவது செம காமெடி. அவரை மாதிரியே மந்திரவாதி பிரகாஷ் ராஜூம் ஆரம்ப காட்சிகளில் சாந்தனுடன் பண்ணும் சேட்டைகள் சிறுவர்களின் சிரிப்புக்கு பஞ்சம் வைக்காது.
பைக்கில் பறந்தபடி குட்டிச்சாத்தானை தேடும் நாயகி ஊர்மிளா, செம த்ரில்! ஊர்மிளா வாயால் குழந்தைகளுக்காக குட்டிச்சாத்தான் திரும்ப வருவார் என க்ளைமாக்ஸில் சொல்வது இப்போதே பாகம் - இரண்டு எப்போது வரும் எனும் எதிர்பார்ப்பை சிறுவர்களிடம் மட்டுமல்ல... பெரியவர்களிடமும் கிளப்பி விட்டுள்ளதென்றால் மிகையல்ல!
டிஜிட்டல் 3 டி எபெக்ட்டால் நாம் அணிந்திருக்கும் 3 டி கண்ணாடியையும் மீறி நம் கண்களை குத்துவது போன்று வரும் மளக்கிளைகள், நெருப்பு பந்துகள், பறவைகள், பாம்புகள் எல்லாம் சிறுவர்களுக்கு மட்டுமல்ல.. பெரியவர்களுக்கும் திகில் அனுபவம். வாவ்!
26 வருடங்களுக்கு முன்பு மை டியர் குட்டிசாத்தாவைன எடுத்து இயக்கிய ஜிஜோவே இப்படத்தையும் இயக்கி இருப்பது சுட்டிச் சாத்தானின் பெரும் பலம். கார்க்கியின் பாடல் வரிகளும், இளையராஜாவின் இசையும், மனோஜ் பரமஹம்சா மற்றும் ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவும் இராம.நாராயணனின் தயாரிப்பில் சுட்டிச்சாத்தானை மேலும் படு சுட்டி ஆக்கி இருக்கின்றன என்பது மட்டும் நிஜம்.
சுட்டிச்சாத்தான் - வசூல் கடவுள்!
-------------------------
குமுதம் விமர்சனம்அம்மாவை இழந்து பாசக்கார குடிகார அப்பாவிடம் அவதிப்படும் சுட்டிப் பெண். அவளின் இரண்டு வகுப்பு தோழர்கள்... இவர்களுக்கு நண்பனாக ஒரு சாத்தான் கிடைத்தால் எப்படி இருக்கும்...? இதுதான் கதை.
புதையலைத் தேடி வரும் பிரகாஷ்ராஜின் "ராரா.... காமெடி, சந்தானத்தின் ரோபோ டெக்னாலஜி என ஆரம்பமே மகா அமர்க்களம். "பூம்... பூம்... சாத்தான்... என ச்சும்மா இருக்கும் சாத்தானை குழந்தைகள் மூவரும் உசுப்பிவிட அப்புறமென்ன....? வீட்டுக்குள் தலைகீழாக நடப்பது, ரிக்ஷாவை ஸ்பீடாக ஓட்டி அலப்பறை கொடுப்பது, ஸ்கூல் வாத்தியாரிடம் எலும்புக்கூடாக வந்து பயமுறுத்துவது என குழந்தைகளை குஷிப்படுத்துகிறான் சுட்டிச் சாத்தான்.
டான்ஸ் ÷ஷாவில் புகுந்து ஆடிக்கொண்டிருப்பவர்களின் காஸ்ட்யூமை மாற்றுவது... பார்வையாளர்களை ஜட்டியுடன் ஓடவைப்பது என அநேக காட்சிகளில் செம காமெடி . 3டி கண்ணாடியை போட்டுப் பார்க்கும்போது கற்பூர தீபம் முதற்கொண்டு ஐஸ் க்ரீம் வரை நம் கண்முன்னே "சர் சர்... என வருவதும், தியேட்டரில் நுனி சீட்டில் அமர்ந்தபடி குழந்தைகள் அதை எட்டிப் பிடிப்பதுமாக நிறையக் காட்சிகள் கைதட்டல் போட வைக்கின்றன.
அப்பாவை திணறடிக்கும் அந்தச் சுட்டிப் பெண்ணின் கேரக்டர் கன கச்சிதம். பழைய நடிகர்கள், ஏற்கெனவே எடுக்கப்பட்ட காட்சிகள் என்றாலும் நாசர், சார்லி போன்ற நடிகர்களின் டப்பிங் குரல்கள் பக்கபலமாய் நன்றாகப் பொருந்துகிறது.
இளையராஜாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம். மதன்கார்க்கியின் வரிகள் மனதை ஈர்க்கின்றன. இயக்குநர் ஜிஜோவேக்கு இது இன்னுமொரு வெற்றிதான்.
மை டியர் சுட்டிச் சாத்தான் கெட்டிக்கார சுட்டி.
குமுதம் ரேட்டிங்....(ஓகே)