நடிகர்கள் : மம்முட்டி, ஸ்டண்ட் சில்வா, தர்மஜன் போல்காட்டி, ஹரீஷ் பெருமுனா, சௌபின் சாஹிர், லிஜிமோல், ஜாய் மேத்யூ, மொட்ட ராஜேந்திரன், சம்பத்ராம் மற்றும் பலர்
இசை : ஆதர்ஷ் ஆப்ரஹாம்
ஒளிப்பதிவு : சதாத் சைனுதீன்
டைரக்சன் : ஷம்தத் சைனுதீன்
விஸ்வரூபம்-2 ஒளிப்பதிவாளர் ஷம்தத் சைனுதீன் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ள படம் இது..
கோடீஸ்வரர் ஜாய் மேத்யூ வீட்டில் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸை திருடுகிறார் ஸ்டண்ட் சில்வா. தர்மஜன் போல்காட்டி, ஹரீஷ் பெருமுனா இருவரும் அவரது கூட்டாளிகள். இந்த நகையை மீட்டுத்தருமாறு தனது போலீஸ் அதிகாரி நண்பரான மம்முடியிடம் வேண்டுகோள் வைக்கிறார் ஜாய் மேத்யூ. கிடைக்கும் சில தடயங்கள் மூலம் ஸ்டண்ட் சில்வா தான் இதை திருடியவர் என்பதை கண்டுபிடிக்கும் மம்முட்டி அதிர்ச்சிக்கு ஆளாகிறார். முன்னை விட வேகத்துடன் தனது உதவியாளர்கள் இருவருடனும் சேர்ந்து அவர்களுக்கு வலை வீசுகிறார்.
இதற்கிடையே போலீஸிடமிருந்து தப்பிக்கும் அவசரத்தில் அந்த வைர நெக்லஸை ஒரு பேக் கடையில் உள்ள பேக்கில் ஒளித்து வைக்கிறார் தர்மஜன். எதிர்பாராதவிதமாக அந்த பேக்கை சிறுவன் ஒருவன் வாங்கிச்செல்கிறான். இந்த விஷயம் தெரிந்து அவனை பிடிப்பதற்காக அவனது பக்கத்து வீட்டுப்பெண் லிஜி மோலையும் காப்பாற்ற வந்த அவரது காதலன் சௌபின் சாஹிரையும் கடத்துகிறார் சில்வா. ஒரு வழியாக அந்த பேக்கை கைப்பற்ற, அதிலோ நெக்லஸை காணவில்லை..
நெக்லஸ் எங்கே போனது..? சில்வாவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருந்தது..? இவர்களை மம்முட்டி எப்படி நெருங்குகிறார்..? சில்வாவுக்கும் மம்முட்டிக்குமான தீர்க்கப்படாத கணக்கு என்ன என்பதை மீதிப்படம் விவரிக்கிறது.
ரொம்பவே சாதரணமான கதை தான். அதை பில்டப்புகளால் கமர்ஷியல் ஆக்க முயற்சித்திருக்கிறார்கள். யூனிபார்ம் போடாத போலீஸ் அதிகாரியாக வழக்கம்போல மம்முட்டி. நகை திருடர்களை கோட்டைவிட்டு தடுமாறும்போது என்னடா இது மம்முட்டிக்கு வந்த சோதனை என நினைக்க தோன்றுகிறது.. ஆக்சன் காட்சிகளில் ஓரளவுக்கு அந்த குறையை நிவர்த்தி செய்கிறார்.
இதுவரை சின்னச்சின்ன ரோல்களில் தலைகாட்டிய ஸ்டண்ட் சில்வா, இதில் மெயின் வில்லனாக படம் முழுதும் வருகிறார். சொல்லப்போனால் நாயகன் மம்முட்டியை விட அவர்தான் அதிக காட்சிகளில் வருகிறார்.. அவரது கையாட்களாக வரும் தர்மஜன் மற்றும் ஹரீஷ் பெருமுனா இருவரும் சில்வாவின் சீரியஸ் காட்சிகளுக்கு நடுவே காமெடி கலாட்டா பண்ணுகிறார்கள். சௌபின் சாஹிர், லிஜிமோல் காதல் எபிசொட் பெரிதாக எடுபடவில்லை..
பிளாஸ்பேக் காட்சியில் இன்னொரு வில்லனாக என்ட்ரி கொடுத்து ஆச்சர்யப்படுத்துகிறார் மொட்ட ராஜேந்திரன்.. அதுமட்டுமல்ல வில்லனாக பார்த்துவந்த சம்பத்ராம் இதில் மம்முட்டியின் நண்பராக பாசிடிவ் ரோலில் சபாஷ் பெறுகிறார். சிறுவன் சம்பந்தப்பட்ட காட்சிகள், குறிப்பாக அவன் தனக்கான தேவைகளை தானே நிறைவேற்றிக்கொள்ளும் காட்சிகள் நெகிழ வைக்கின்றன.
வில்லன் தன்னுடன் காமெடியன்களை கூடவே வைத்திருப்பதால் படத்தில் வில்லத்தனம் அத்தனை சீரியஸாக இல்லை.. கைக்கெட்டியவர்களை ஆரம்பத்திலேயே கோட்டைவிட்டதால், அதன்பின் மம்முட்டி அன் கோவின் தேடுதல் வேட்டை சலிப்பையே ஏற்படுத்திறது.. குறிப்பாக மம்முட்டியை ஜீப்பிலேயே சுற்ற வைத்து வீணடித்துள்ளார்கள். சுமாரான கதை, உப்புச்சப்பில்லாத திரைக்கதை, எந்தவித திருப்பமும் இன்றி நகரும் காட்சிகள் என சாதாரண ரசிகனுக்கான தீனி எதுவும் இதில் இல்லை. படத்தின் பெரும்பாலான காட்சிகள் தமிழ் வசனங்களிலேயே நகர்வதும் சில தமிழ் முகங்கள் இருப்பதும் மட்டும் தான் கொஞ்சம் ஆறுதல்.
மொத்தத்தில், ஸ்ட்ரீட்லைட்ஸ் என்று சொல்லி சோடியம் விளக்கிற்கு பதிலாக குண்டு பல்பை எரியவிட்டுள்ளார்கள்.