தினமலர் விமர்சனம் » மிட்டாய்
தினமலர் விமர்சனம்
நட்பிற்காக காதலியை விட்டுக் கொடுக்கவும், காதலை தியாகம் செய்யவும் தயங்காத நண்பர்களின் கலக்கல் கதைதான் "மிட்டாய்". கலங்க வைக்கும் க்ளைமாக்ஸை உள்ளடக்கிய கதையும் கூட "மிட்டாய்" என்பது மிரட்டல்!
ஊதாரியாக, காதலி கிடைத்ததும் உயர்பவராக கதையின் நாயகர் சூர்யாவாக, நடிகர் சந்தோஷ் நன்றாகவே நடித்திருக்கிறார். ஒரு காதல் செய்வீர், திருரங்கா, உள்ளிட்ட இவரது முந்தைய படங்களில் நடித்திருந்ததை காட்டிலும் மிட்டாயில் மிளிர்ந்திருக்கிறார். உடம்பை சற்றே குறைத்தால் இன்னும் உயரத்தை எட்டலாம் இவர். கதையின் மற்றொரு நாயகராக சந்தோஷின் நண்பராக வரும் பிரபாவும் பிரமாதம். நட்பிற்காக காதலையே தியாகம் செய்ய துணியும் இவரது பாத்திரம் புதுமை!
கதையின் நாயகி பூஜாவாக, புதுமுகம் மாயா உன்னி, குடும்ப குத்து விளக்கு எனும் அளவிற்கு ரொம்பவும் ஹோம்லி! நடிக்கவும் செய்து நன்றாகவும் இருக்கும். அம்மணியை, தமிழ் சினிமாவில் ரொம்பவே எதிர்பார்க்கலாம்! படத்தில் அவரது பெயருக்கு முன் தரப்பட்டிருக்கும் "தேன் மிட்டாய்" எனும் அடைமொழி மாதிரியே இனிக்கிறார்.
மகாநதி சங்கர், சிங்கமுத்து, நெல்லை சிவா, சாம்ஸ், பூச்சி செந்தில், லொள்ளுசபா சாமிநாதன், மீரா கிருஷ்ணன், சேது பாரதி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள். ஆனால் யாரும் பெரிதாக மின்னாதது "மிட்டாய்" படத்தின் பலவீனம்!
சபேஷ் முரளியின் இசை, நாக கிருஷ்ணனின் ஒளிப்பதிவு இரண்டும் "மிட்டாய்" படத்தை கொட்டாவி விட வைக்காமல் பார்க்க வைப்பது பலம், பலவந்தம். மந்திரம், மாயாஜாலம் எல்லாம்!. இயக்குநர் அன்பு அருள்நிதி, பாரதிராஜாவின் சிஷ்யர் என்பதாலோ என்னவோ, "அடி ஆத்தாடி..." எனும் குருநாதரின் "கடலோர கவிதைகள்" படப்பாடலை ஹீரோயினுக்கு பதில் ஹீரோவை ஆடவிட்டு ரீ-மிக்ஸ் செய்து இருக்கிறார்.
இந்த இனிமையும், க்ளைமாக்ஸ் புதுமையையும் படத்தின் பிற காட்சிகளிலும், குறிப்பாக முன்பாதி காட்சிகளில் புகுத்தியிருந்தால் "மிட்டாய்", தேன்மிட்டாயாக இனித்திருக்கும். அப்படி இல்லாததால், "பாதி புளிப்பு மிட்டாய்", "மீதி தேன் மிட்டாய்" ஹீ... ஹீ...!