தினமலர் விமர்சனம்
ஹாலிவுட், பாலிவுட் ஸ்டைலில், ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் என மூன்று ஹீரோக்கள் சேர்ந்து நடித்திருக்கும் திரைப்படம் தான், புறம்போக்கு என்கிற பொதுவுடமை. நட்சத்திர சேர்க்கை மட்டுமல்ல, படத்திலும் ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு நிகராக, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், புறம்போக்கு என்கிற பொதுவுடமை மிரட்டலாகவும், பிரமாண்டமாகவும், புரட்சி பேசி வௌிவந்திருக்கிறது.
கதைப்படி, புரட்சிகர படையை சேர்ந்த பாலு என்கிற ஆர்யா தூக்குதண்டனை கைதி. அவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டிய இளம் சிறை அதிகாரி மெக்கலே எனும் ஷாம். டில்லியிலிருந்து தூக்கு தண்டனை கைதி பாலுவை ஹெலிகாப்டரில் சென்னை அழைத்து வரும் ஷாம், அவரை சிறையில் தள்ளுகிறார். தூக்கு போட வேண்டிய கேங்மேன் எமலிங்கமாக விஜய் சேதுபதி வருகிறார். பரம்பரை பரம்பரையாக தூக்கு போடுவதை தொழிலாக கொண்ட குடும்பம் விஜய் சேதுபதி உடையது என்பதாலும், தனது 18 வயதிலேயே அப்பாவுக்கு முடியாமையால் ஒரு நிரபராதியை தூக்கில் போட்டதால் இனி யாரையும் தூக்கில் போடுவதில்லை எனும் உறுதியில் ரயில்வே கலாசியாக வேலை பார்த்து வரும் விஜய் சேதுபதியை, பாலு எனும் ஆர்யாவை தூக்கு போட அழைக்கிறார் ஷாம். ஆனால் தனது உறுதிமொழியை சொல்லி, தான் யாரையும் தூக்கிலிடமாட்டேன் என பிடிவாதம் பிடிக்கும் விஜய் சேதுபதியை வழிக்கு கொண்டு வர சகலமும் செய்கிறார் ஷாம். ஆனாலும் முழுநேர குடிகாரரான எமலிங்கம் - விஜய் சேதுபதி வழிக்கு வர மறுக்கிறார்.
இந்நிலையில் தங்கள் இயக்கத்தை சேர்ந்த பாலு உடனடியாக தூக்கில் இடப்படாமல் இருப்பதற்கு தூக்குபோடும் தொழிலாளி எமலிங்கத்தை தீர்த்து கட்டினால், தூக்கு தண்டனை தள்ளிப்போகும் எனும் எண்ணத்துடன் விஜய் சேதுபதியை கொல்ல துரத்துகிறது கதாநாயகி குயிலி - கார்த்திகா தலைமையிலான புரட்சிகர அமைப்பு. ஆனால் ஒருக்கட்டத்தில் எமலிங்கத்திற்கே யாரையும் தூக்கில் போட விருப்பம் இல்லையென கார்த்திகா அண்ட் கோவினருக்கு தெரிய வர, சிறை அதிகாரி மெக்கலே எனும் ஷாமின் பிடியில் இருக்கும் புரட்சியாளர் பாலு - ஆர்யாவை தப்பிக்க வைக்க, விஜய் சேதுபதியை தங்கள் கூட்டணியில் சேர்க்கிறார் கார்த்திகா. கார்த்திகாவின் திட்டம் நிறைவேறியதா.?, பாலு - ஆர்யா தப்பித்தாரா..?, அதற்கு எமலிங்கம்-விஜய்சேதுபதி உதவினாரா...? சிறை அதிகாரி மெக்கலே - ஷாமின் நிலை என்ன...? என்பதற்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் யாரும் எதிர்பாராதவிதமாக விடை சொல்கிறது புறம்போக்கு என்கிற பொதுவுடமை.
எமலிங்கமாக விஜய் சேதுபதி கிடைத்த இடத்தில் எல்லாம் பிரமாதமாக நடித்திருக்கிறார். அவரை மாதிரியே புரட்சியாளர் பாலு - ஆர்யா, சிறை அதிகாரி மெக்கலே - ஷாம், கதாநாயகி, புரட்சிப்பெண் குயிலி - கார்த்திகா உள்ளிட்டோரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள் மிரட்டி.
வர்சனின் இசையில், ஆழ்வௌ்ளி கிழங்கு... பாடல் தாளம் போட வைத்தாலும், இமயமலையில், ஆர்யா-கார்த்திகா இடையேயான டூயட் பாடல் வலிய திணிக்கப்பட்டிருப்பது போன்று தோன்றுகிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டுகிறது.
ஏகாம்பரத்தின் ரம்மியமான ஔிப்பதிவு, குலுமாணியை கண்களுக்கு குளிர்ச்சி விருந்து படைக்க வைத்திருக்கிறது. அதேசமயம் சிறைசாலை காட்சிகளில் அவரின் ஔிப்பதிவு மிரட்டியிருக்கிறது.
இயற்கை, ஈ, பேராண்மை படங்களை போன்று, எஸ்.பி.ஜனநாதனின் இயக்கத்தில் வௌிவந்துள்ள புறம்போக்கு என்கிற பொதுவுடமை, படமும், நல்ல முற்போக்கு சிந்தனையுள்ள தரமான கருத்துக்களை சொல்லியிருக்கும் சிறந்த புரட்சிகரமான படம்!
குமுதம் விமர்சனம்
தீவிரவாதி ஆர்யா. போலீஸ் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கிறது. ஏடிஜிபி ஷாம்க்கு அவரை தூக்கிலிடும் பொறுப்பு. தூக்கு தண்டனை நிறைவேற்றும் நபராக விஜய் சேதுபதி - கார்த்திகா சார்ந்த தீவிரவாத குழு ஆர்யாவைத் தப்ப வைக்க முயற்சிக்கிறதுதான் கதை!
ஏற்கெனவே தூக்கு தண்டனையை நிறைவேற்றியதால் விஜய்சேதுபதி மனநிலை பாதிக்கப்பட்டு - அதை மறைக்க குடித்துவிட்டு கூத்தடிப்பது கலகல! மனநலம் தேறிவரும் நிலையில், இந்த தூக்கு வருகிறது. அதனால் அந்தப் பணியை ஏற்க மறுப்பதும் போலீஸ் அவரை சம்மதிக்க வைத்து தூக்குபோட முயற்சிப்பதும் கலக்கல்.
தீவிரவாதி ஆர்யா ஆக்ஷன், கலாய்த்தல், சடுகுடு என்று எதுவும் இல்லாமல் என்ன தேவையோ அதை மட்டும் தந்துள்ளார். கடைசிக் காட்சியில் கண்ணில் நீர் வரவழைத்துவிடுகிறார்.
ஜெயில் அதிகாரி மெக்காலேவாக ஷாம். பெயரும் பதவியுமே அவர் கேரக்டரை சொல்லி விடுகிறது. சட்டப்படி செயல்படும் நேர்மையான அதிகாரி. தப்பிக்கும் ஆர்யாவைப் படிக்கும் காட்சியில் மனிதர் ஸ்கோர் பண்ணியிருக்கிறார்.
போராளி குயிலியாக கார்த்திகா கொடுத்ததை ஒழுங்காக செய்திருக்கிறார். போராட்டத்தில் தோற்றாலும் மனதில் நிற்கிறார்.
ஆர்யாவை தீவிரவாதியாக காட்டப்படும் காட்சிகள் அவசரகதியில் எடுத்ததுபோல் இருப்பது சிறிது குறையே!
மற்றபடி, ஆக் ஷன் அதிரடி என்று படத்தை மசாலாவாக்காமல் நடப்பதை நடந்தமாதிரி காட்டி, நிஜத்திற்கு அருகில் நம்மை நிறுத்திவிடுகிறார் இயக்குநர் எஸ்.பி ஜனநாதன். 12 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த குற்றவாளியை, அவர் அந்தத் தப்பை பண்ணவில்லை என்று எழுதி வைத்துவிட்டு - விசாரித்த இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டதால் கைதியை விடுதலை செய்வதாக வரும் காட்சி ஒன்று போதும் இயக்குநரின் டச்சிற்கு.
புறம்போக்கு - நம்பிக்கை வாக்கு
குமுதம் ரேட்டிங்- நன்று