தினமலர் விமர்சனம் » சமர்
தினமலர் விமர்சனம்
"செல்லமே", "அவன் இவன்" படத்திற்குப்பின் விஷால் வித்தியாசமாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "சமர்".
ஊட்டி காட்டிலாக்கா அதிகாரியின் மகன் விஷாலுக்கும், ஊட்டியை சுற்றிப்பார்க்க வரும் சுனைனாவுக்கும் காதல். சரியான புரிந்துணர்வு இல்லாததால் அந்த காதல் புட்டுக்கொண்டு போக, கோபித்துக் கொண்டு தாய்லாந்து போகும் சுனைனா, அங்கிருந்து விஷாலுக்கு "உன்னை மறக்க முடியவில்லை... உடனே புறப்பட்டு பாங்காக் வா..." என லவ் லெட்டருடன் பிளைட் டிக்கெட்டையும் அனுப்பி வைக்கிறார். முன்பின் விமானத்தில் சென்ற அனுபவமில்லாத விஷாலுக்கு உடன் பயணிக்கும் த்ரிஷா, வித்தியாச அனுபவம் தருகிறார். கூடவே நமக்கு அதிர்ச்சியும் தருகிறார். அது ஏன்.? எதற்கு..? எப்படி...? என்பது தான் "சமர்" படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்புமான மீதிக்கதை!
விஷால் வழக்கம் போலவே ரொமான்டிக் ஹீரோவாகவும், ஆக்ஷ்ன் நாயகராகவும் அசத்தியிருக்கிறார். த்ரிஷா, சுனைனா என்று இண்டு நாயகியர், இருவரில் சூழ்நிலை கைதியாக, வில்லி கம் நாயகியாக வரும் த்ரிஷாவே மனம் கவர்கிறார். சம்பத், ஜே.பி., ஸ்ரீமன், ஜான் விஜய், உமா பத்மநாபன் தொடங்கி நம்பமுடியாத வில்லன்கள் ஜே.டி., சக்கரவர்த்தி, மனோஜ் பாஜ்பாய் வரை சகலரும் படத்தின் பலம்!
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு, எஸ்.ராமகிருஷ்ணனின் வசனம், "தீராத விளையாட்டு பிள்ளை" திருவின் எழுத்து-இயக்கம் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், பின் பாதியில் இருக்கும் வித்தியாசமும், விறுவிறுப்பும் முன்பாதியில் இல்லை என்றாலும் "சமர்" சுமாருமில்லை, போருமில்லை!
ஆக மொத்தத்தில் "சமர்" - "கமர்"ஷியல்!-----------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
“சமர்’ என்றால் போர் என்று அர்த்தம். Bore என்றும் சொல்லலாம்.
வீடியோ கேமில் ஆக்ஸிடெண்ட் செய்து, எதிரிகளைக் கொன்றெல்லாம் ஜாலியாக நீங்கள் விளையாடியிருக்கிறீர்களா? அதையே இரண்டு பணக்கார கிறுக்குப் பசங்கள் நிஜத்தில் நிகழ்த்திப் பார்க்கிறார்கள். சம்பந்தமில்லாமல் சிலரை டார்கெட் செய்து, அவருக்குப் பல குழப்பங்களைக் கொடுத்து, கடைசியில் அந்த ஆள் சாவானா மாட்டானா என்று விளையாடுகிறார்கள். அந்த விளையாட்டில் விஷாலும், த்ரிஷாவும் சிக்கிக் கொள்ள க்ளைமாக்ஸ் என்ன? அந்த இரண்டு கிறுக்குப் பசங்களையும் விஷால் காலி செய்வதுதான் சமர்!
தேக்குமரக் காட்டில் விஷாலின் ஆரம்பக் காட்சி செமை பில்டப்பைத் தருகிறது. தான் பெரிய கோடீஸ்வரனாக பாங்காக்கில் வரவேற்கப்படும்போதும், திடீரென அந்த மதிப்பெல்லாம் கழன்று போகும்போதும் அதிர்ச்சியை அழகாகக் காட்டியிருக்கிறார்.
த்ரிஷா பளிச்சென்று அப்படியே இருக்கிறார். வழக்கம்போல் டிரெஸ் சென்ஸ். அவரும் கூட்டுக்களவாணி என்று தெரியவருவது திடுக். சுனைனா ஓகே. ஒரு பாடல் பளிச். கேமரா பாங்காக்கை அழகாகக் சுற்றிக் காட்டுகிறது.
படத்தில் எப்போதுமே யாராவது இரண்டு பேர், கையையோ காலையோ ஆட்டிக் கொண்டு பக்கம் பக்கமாய்ப் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். அதனால் நல்ல டயலாக்குகளைக் கூட ரசிக்க முடியாமல் போய் விடுகிறது. மூன்று படங்களில் எழுத வேண்டிய வசனத்தை ஒரே படத்தில் எழுதியிருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.
வித்தியாசமான கதையை, திரைக்கதை என்ற பெயரில் கொத்துக்கறி போட்டிருக்கிறார்கள்!
குமுதம் ரேட்டிங் - ஓகே.