தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக ஏப்ரல் மாதக் கடைசியில் இருந்து தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்களை விரைவில் திறக்க அரசு அனுமதி கொடுக்கும் என்ற நம்பிக்கை திரையுலகத்தில் எழுந்துள்ளது.
அதனால், சில தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களைத் தியேட்டர்களில் வெளியிடுவதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள். தற்போதைய நிலவரப்படி சில படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட நிறுவனங்கள் வாங்கிவிட்டன. ஓடிடி வேண்டாம், அல்லது ஓடிடியில் நல்ல விலை கிடைக்கவில்லை என்ற காரணங்களால் சிலர் படங்களைத் தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
இருந்தாலும் முன்பு போல வாரத்திற்கு நான்கைந்து படங்கள் வெளிவருவதற்கான வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. தியேட்டர்கள் திறக்கப்பட்டால் எப்படியான படங்கள் வெளிவரும் எனத் திரையுலகினரிடம் விசாரித்த போது ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த', அஜித் நடித்துள்ள 'வலிமை' ஆகிய இரண்டு படங்கள் தான் தியேட்டர்களுக்கான டார்கெட்.
அந்தப் படங்கள் மூலம் தான் சினிமா தியேட்டர்களுக்கு மக்களை மீண்டும் வரவழைக்க முடியும். மக்கள் இன்னும் கொரோனாவிலிருந்து முழுமையாக மீளவில்லை. அவர்களது குழந்தைகளின் படிப்பு, சரியான வருமானம் இல்லாத பொருளாதார சூழல், பெட்ரோல், காஸ் ஆகியவற்றின் விலையேற்றம் என தங்கள் இயல்பு வாழ்க்கையில் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனால், தற்போதைக்கு அவர்களால் உடனடியாக பொழுதுபோக்கும் மனநிலைக்கு மாறி தியேட்டர்கள் பக்கம் படம் பார்க்க வருவார்கள் என்பது சந்தேகம்தான். அந்த கூடுதல் செலவைத் தற்போது தவிர்க்கவே பார்ப்பார்கள்.
இருப்பினும் சினிமா தியேட்டர்களுக்கு வந்து படங்களைப் பார்ப்பதுதான் கொண்டாட்டம் என நினைக்கும் அந்த தீவிர ரசிகர்களை 'அண்ணாத்த, வலிமை' ஆகியவை தான் வரவழைக்கும் என்கிறார்கள். இருப்பினும் தியேட்டர்களைத் திறந்தால் நிறைய தியேட்டர்களில் தங்களது படங்களை வெளியிட வாய்ப்பிருக்கும் என நினைக்கும் சில தயாரிப்பாளர்கள் அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கிவிட்டார்களாம்.
தியேட்டர்கள் திறப்பு பற்றி அரசு அறிவித்தால் உடனடியாக அந்தப் புதிய படங்களின் வெளியீடு பற்றிய அறிவிப்பும் வந்துவிடும் என்பதுதான் இப்போதைய நிலை.