உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் | விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி | 'ஜனநாயகன்' படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | ஒன்றிணைந்து பேசுவோம் : திரையுலகினருக்கு கமல்ஹாசன் அழைப்பு | ரவி மோகனை பிரிந்தார் கெனிஷா : சென்னையை விட்டும் வெளியேறினார் | தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா |

ஒரு மொழியில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தின் கதையை, வெவ்வேறு மொழிகளில் திரைப்படமாக எடுத்து வெற்றி காண்பது என்பது இன்று வரை சினிமா உலகில் நிகழ்ந்து வரும் இயல்பான ஒன்று. அதேபோல் ஒரு மொழியில் வெளிவந்து வெற்றி பெற்ற ஒரு இயக்குரின் திரைப்படக் கதையை, சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வேறொரு இயக்குநர் அதே கதையை அன்றைய இளம் கலைஞர்களை வைத்து இயக்கி வெற்றி கண்டதையும் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் இங்கே நாம் காண இருப்பது, ஒரு இயக்குநர் இயக்கி வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தின் கதையை, சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவரே அந்தக் கதையை கையிலெடுத்து, அன்றைய திரைக் கலைஞர்களை வைத்து எடுத்து, மீண்டும் அதே வெற்றியை சுவைக்க எண்ணிய ஒரு இயக்குநரின் திரைப்படத்தைப் பற்றித்தான் இங்கே நாம் காண இருக்கின்றோம்.
1950களில் தமிழ் திரையுலகில் ஒரு பாடலாசிரியராக அறிமுகமாகி பின் வசனகர்த்தாவாக உயர்ந்து அதன்பின் இயக்குநர் அவதாரம் எடுத்தவர்தான் 'இயக்குநர் திலகம்' கே எஸ் கோபாலகிருஷ்ணன். 1962ஆம் ஆண்டு வெளிவந்த “சாரதா” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், 1992ம் ஆண்டு விஜயகாந்த், பானுப்ரியா நடிப்பில் வெளிவந்த “காவியத் தலைவன்” வரை ஏறக்குறைய 70 திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார். அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளிவந்து வணிக ரீதியாக வெற்றி பெற்ற ஒரு திரைப்படம்தான் “கண்கண்ட தெய்வம்”.
1967ல் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ் வி ரங்காராவ், எஸ் வி சுப்பையா, பத்மினி, நாகேஷ், ஓ ஏ கே தேவர், எஸ் வி சகஸ்ரநாமம், வி நாகையா, எஸ் ராமாராவ், சிவக்குமார், கள்ளபார்ட் நடராஜன், மகரன், ஏ வீரப்பன் ஆகியோர் நடித்திருந்தனர். 1967 செப்டம்பர் 15 அன்று வெளிவந்த இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற, இதே படத்தை தெலுங்கில் “பந்தவ்யலு” என்ற பெயரில் நடிகர் எஸ் வி ரங்காராவ் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி நடித்திருந்ததோடு, படத்தையும் இயக்கியிருந்தார்.
மீண்டும் 18 ஆண்டுகளுக்குப் பின் தனது கதை, வசனம் இயக்கத்தில் வெளிவந்த “கண்கண்ட தெய்வம்” திரைப்படத்தின் கதையையே “படிக்காத பண்ணையார்” என்ற பெயரில் இயக்கி வெளியிட்டிருந்தார் 'இயக்குநர் திலகம்' கே எஸ் கோபாலகிருஷ்ணன். எஸ் வி ரங்காராவ் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தில் சிவாஜிகணேசனும், எஸ் வி சுப்பையாவின் கதாபாத்திரத்தில் தேங்காய் சீனிவாசனும், நடிகை பத்மினியின் கதாபாத்திரத்தில் கே ஆர் விஜயாவும், நடிகர் ஓ ஏ கே தேவர் ஏற்று நடித்திருந்த வில்லன் கதாபாத்திரத்தில் கல்கத்தா விஸ்வநாதனும், நடிகர் சிவக்குமார் ஏற்று நடித்திருந்த வேலையாள் கதாபாத்திரத்தில் 'அச்சமில்லை' கோபி என அன்றைய திரைக்கலைஞர்களை வைத்து படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன்.
'இசைஞானி' இளையராஜாவின் இசையில் 1985ம் ஆண்டு மார்ச் 23 அன்று வெளிவந்த இத்திரைப்படம், நடிகை கே ஆர் விஜயாவின் 200வது திரைப்படம் என்ற அந்தஸ்தோடு வந்ததே தவிர, அவரது முந்தைய திரைப்படமான “கண்கண்ட தெய்வம்” திரைப்படத்தைப் போல் வணிக ரீதியான வெற்றியைப் பெறாமல் போனது துரதிர்ஷ்டமே.