தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர் மோகன்பாபு. தமிழ் நடிகரான ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். சமீபத்தில் கூட இருவரும் திருப்பதியில் சந்தித்து பேசிக் கொண்டனர்.
மோகன்பாபுவுக்கும் அவரது இரண்டாவது மகன் நடிகர் மஞ்சு மனோஜுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக குடும்ப சண்டை நிலவி வருகிறது. கடந்த சில மாதங்களாக அது கடுமையாகிவிட்டது. அவர்களது மோதலைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற டிவி நிருபரை தாக்கிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளார் மோகன் பாபு.
இந்நிலையில் நேற்று திருப்பதியில் மஞ்சு மனோஜ் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். சந்திரகிரி என்ற இடத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் மஞ்சு மனோஜ். அவரை பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் வரவேற்றார்கள்.
நேற்று இரவு திருப்பதியில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்தார் மனோஜ். அவருக்கு பாதுகாவலான தனியார் பவுன்சர்கள் அங்கு இருந்தனர். அந்தப் பக்கமாக ரோந்து சென்ற காவல்துறையினர் பவுன்சர்கள் இருப்பதைப் பார்த்து விசாரித்துள்ளனர். அதன்பின் பகாராபேட் காவல் நிலையத்திற்கு மஞ்சு மனோஜ் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.