என்எப்டிசி எனப்படும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் இந்தியாவின் சிறப்பு, பன்முக தன்மை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கும் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. சிறந்த படத்திற்கான தங்கத்தாமரை தேசிய விருது பெற்ற தமிழ் படமான மறுபக்கம் என்எப்டிசி தயாரித்த படம். இதன் இயக்குனர் சேதுமாதவன் சமீபத்தில் மரணம் அடைந்தார். அதேபோல மகேந்திரன் இயக்கிய சாசனம், பொன்வண்ணன் இயக்கிய நதி கரையினிலே உள்ளிட்ட படங்கள் என்எப்டிசி தயாரித்த படங்கள்.
தற்போது என்எப்டிசி படம் தயாரிப்பில் முனைப்பு காட்டத் தொடங்கி உள்ளது இந்திய மொழிகளில் இந்தியாவின் பன்முக தன்மை, சிறப்பை அடிப்படையாக கொண்ட கதைகள் இருந்தால் அதனை இயக்குனர்கள் வருகிற ஜனவரி 31ம் தேதிக்குள் அந்த கதையை என்எப்டிசிக்கு கொடுக்கலாம்.
இதற்கான விண்ணப்பத்தை என்எப்டிசி தளத்தில் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து தங்களிடம் உள்ள கதையை பதிவேற்றம் செய்யலாம். இதற்கென நியமிக்கப்படும் நடுவர் குழு கதையை தேர்வு செய்து தயாரிக்கும். சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் அறிமுக இயக்குனர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.