தினமலர் விமர்சனம் » நில் கவனி செல்லாதே
தினமலர் விமர்சனம்
"வெண்ணிலா கபடிக்குழு" படத்தை தயாரித்ததின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த ஆனந்த் சக்கரவர்த்தி, கதை நாயகர்களில் ஒருவராக நடித்து இயக்கி, தயாரித்து இருக்கும் படம்தான் "நில் கவனி செல்லாதே".
கதைப்படி காதலர்கள் ஆனந்த் சக்கரவர்த்தியும், தன்ஷிகாவும், இவர்களது நண்பர்கள் ராம்சி, ஜெகன் இருவரும், இந்த நால்வர் கூட்டணியுடன் இவர்களது அமெரிக்க சினேகிதி லட்சுமி நாயரும் தொல்பொருள் ஆராய்ச்சிக்காக சென்னை வந்து சேர்ந்து கொள்கிறார். நண்பர்களில் ஒருவரான ராம்சியுடன் காதலும் கொள்கிறார். ஆராய்ச்சிக்காக ஆந்திர பார்டரில் அடர்ந்த காட்டில் உள்ள தெள்ளூர் கிராமத்தின் புராதான கோயிலுக்கு ஐந்துபேரும் ஒரு ஆடம்பர சொகுசு வேனில் ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என உல்லாச பயணம் கிளம்புகின்றனர். அவர்களது உற்சாகம் எல்லாம் பைத்தியகாரி மாதிரி தோற்றத்தில், முகம் முழுவதும் நகக்கீறல் காயங்களுடன் அந்த காட்டு வழி பாதையில் தென்படும் ஒரு பெண்ணை முதலுதவிக்காக அந்த வேனில் ஏற்றும்வரை தான். அதன்பின் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சாகும் அந்த பெண்ணின் பேச்சை மீறி தெள்ளூரை நோக்கி போகும், அந்த ஐவரணி படும் பாடு ஹாலிவுட் ரேஞ்சுக்கு கொடூரமாகவும், கொலைகளமாகவும், படமாக்கி இருப்பது மட்டுமே "நில் கவனி செல்லாதே" படத்தின் சிறப்பு!
படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான ஆனந்த் சக்கரவர்த்தி அலட்டிக் கொள்ளாமல் நடித்து சபாஷ் வாங்கிவிடுகிறார். மற்றொரு நாயகர் ராம்சியும் அதே சபாஷ் பெறுகிறார்! ஆனால் காமெடி ஜெகன் மட்டும், காதலி கிடைக்காத வருத்தத்தில் நாய் மாதிரி நாக்கை தொங்கபோட்டுக் கொண்டு அலைவது சிரிப்பிற்கு பதில் கடுப்பையே வரவழைக்கிறது. ஜெகன் காமெடி பண்ணுங்கள், கடிக்காதீர்கள்!
"பேராண்மை" உள்ளிட்ட படங்களில் நான்கைந்து நாயகியரில் ஒருவராக நடித்த தன்ஷிகா இதில் இரட்டை நாயகியரில் ஒருவராக வந்து அசத்தலாக நடித்திருக்கிறார். அவரை தைரியசாலி பெண்ணாக காட்டி, அவரையே பயப்படும் படியான காட்சிகளில் நடிக்க வைத்து ரசிகர்களை பயமுறுத்தியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியத்தை காட்டுகிறது. தன்ஷிகா மாதிரியே புதுமுகம் லட்சுமிநாயரும், அமெரிக்க ரிட்டன்ஸ் பெண்ணாக அருமையாக நடித்திருக்கிறார். தன்ஷிகா-ஆனந்த் காதலை விட, லட்சுமி-ராம்சியின் காதல், படம் முடிந்த பின்னரும் நினைவில் நிற்கிறது. அதேமாதிரி அவர்களுக்கு ஏற்படும் கொடூரமும் மனதை விட்டு நீங்காமல் நிற்கிறது.
வைடு ஆங்கிளில் ஹெலிகாப்டர் ஷாட்டில் ஆரம்பமாகும் நில் கவனி செல்லாதே படத்தின் ஆரம்ப காட்சியிலேயே பிரமாண்டம் நம் வாயை பிளக்க வைக்கிறது. அதே நேரம், அதே பிரமாண்டத்தை படம் முழுக்க எதிர்பார்த்து ஏமாறவும் முடிவது மைனஸ்!
ரத்தகாட்டேரி போன்ற அந்த கொலை வெறிமனிதன், ஊனமுற்ற அவனது அப்பா, டிபன்கடை வைத்திருக்கும் அவனது அம்மா, காட்டிலாக்கா அதிகாரி அழகம் பெருமாள் என ஒவ்வொருவரும் படத்தில் திகிலை கிளப்பினாலும் படம் எப்படா முடியும்? எனும் எண்ணத்தையும் கிளப்புவது பலவீனம்!
லட்சுமணின் அழகிய ஒளிப்பதிவும், செல்வ கணேசின் மிரட்டும் பின்னணி இசையும், நில் கவனி செல்லாதே படத்தை ரசிகர்களிடம் செல்ல வைத்திருக்கிறது எனலாம்!