விமர்சனம்
தயாரிப்பு - ஒயிட் லாம்ப் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - அந்தோணி சாமி
இசை - நாக உதயன்
நடிப்பு - அபி சரவணன், ஷைனி
வெளியான தேதி - 4 பிப்ரவரி 2022
நேரம் - 2 மணி நேரம் 27 நிமிடம்
ரேட்டிங் - 2/5
சாதிப் பிரச்சினைகளை மையமாக வைத்து படம் எடுத்தால் தமிழ் சினிமாவில் பரபரப்பாகப் பேசப்படலாம் என பலர் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த விதத்தில் இந்தப் படத்தையும் ஒரு சாதிச் சண்டைப் படமாகக் கொடுத்து தங்களைப் பற்றிப் பேச வைக்கலாம் என முயற்சித்திருக்கிறார்கள்.
படத்தில் பல இடங்களில் பின்னணியில் புகைப்படங்களாக இடம் பெறும் சாதித் தலைவர்களின் படங்களை சென்சாரில் மறைக்கச் சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. சில இடங்களில் சாதிக் கட்சிகள், சங்கங்களின் போர்டுகளும் மறைக்கப்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு படம் முழுவதும் சாதியக் குறியீடுகள்தான் அதிகம் நிறைந்திருக்கிறது.
சாதி, மதம் என எந்த பேதமும் இல்லாமல் இருக்கும் கிராமத்தில் ஊர் பெரிய மனிதராக இருந்து மக்களை நல்வழியில் நடத்தி வருபவர் பொன்வண்ணன். அவரது ஒரே மகன் அபிசரவணன். கல்லூரியில் படிக்கும் அவரும் எந்த சாதி வேறுபாடும் பார்க்காமல் அனைவருடனும் நட்பாகவே பழகுகிறார்கள். அவர்கள் படிக்கும் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே சாதிப் பெருமை பேசப்படுகிறது. தன்னுடைய நெருங்கிய நண்பனாக இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை சூழ்நிலை காரணமாகக் கொலை செய்ய நேரிடுகிறது. அதனால் சிறைக்குச் செல்கிறார் அபி. பழிக்குப் பிழயாக சிறையில் அவரைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அவரது சாதியைச் சேர்ந்த ஒருவர் காப்பாற்ற, தன் சாதி மீது பாசம் கொள்ள ஆரம்பிக்கிறார் அபி. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கல்லூரிகளில் இருக்கும் சாதிய வேறுபாடுகளைப் பற்றியும், கிராமத்தில் இருக்கும் சாதி ஒற்றுமையைப் பற்றியும் படத்தில் காட்டினாலும் வழக்கம் போல ஒரு சாதியைக் குறை சொல்லியும், வேறொரு சாதியை குற்றம் சொல்லியும் எடுக்கப்படும் படங்களின் வரிசையில்தான் இந்தப் படமும் உள்ளது. படத்தை இயக்கியதோடு சாதி வெறி பிடித்த வில்லனாகவும் நடித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் அந்தோணி சாமி.
ஆரம்பத்தில் சாதி வேறுபாடு பார்க்காத மாணவராக இருக்கும் அபி சரவணன் பின்னர் சாதி வெறி பிடிக்கும் அளவிற்கு மாற்றப்படுகிறார். மாணவராக நடிக்கும் போது வழக்கமான கிராமத்து இளைஞனராக யதார்த்தமாக நடிக்க முயற்சித்திருக்கிறார். சிறைக்குச் சென்ற பின் ஆக்ஷன் நடிப்பிற்கு மாறத் தடுமாறுகிறார்.
அபி சரவணனின் முறைப் பெண்ணாக ஷைனி. அபியை விழுந்து விழுந்து காதலிக்கிறார். யதார்த்தமான கிராமத்துப் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதற்காக ஷைனியைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. வழக்கமான கதாநாயகிகள் போல இல்லாமல் இருக்கிறார்.
பொன்வண்ணன், சீதா, இளவரசு, போஸ் வெங்கட் என குணச்சித்திரக் கதாபாத்திரங்களுக்கு யதார்த்தமான சீனியர் நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்திருக்கிறார்கள். அவர்களும் குறை வைக்காமல் நடித்திருக்கிறார்கள்.
இடைவேளை வரை கதை ஓரளவிற்குக் குழப்பமில்லாமல் பயணிக்கிறது. இடைவேளைக்குப் பிறகு திரைக்கதையில் எதையெதையோ சேர்த்து என்னென்னமோ சொல்ல முயற்சிக்கிறார் இயக்குனர். குறிப்பிட்ட ஒரு சாதியின் மீது அவருக்கு என்ன கோபமோ ?. அவர்கள் சாயம் வெளுக்க வேண்டும் என நினைத்து தன் படத்தின் சாயத்தை வெளிப்படுத்துகிறார்.
சாயம் - சாதியம்