மாயநதி,Mayanadhi

மாயநதி - பட காட்சிகள் ↓

மாயநதி - சினி விழா ↓

Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - அபி சரவணன், வெண்பா
தயாரிப்பு - ராஜி நிலா முகில் பிலிம்ஸ்
இயக்கம் - அசோக் தியாகராஜன்
இசை - ராஜா பவதாரிணி
வெளியான தேதி - 31 ஜனவரி 2020
நேரம் - 2 மணி நேரம் 5 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

தமிழ் சினிமாவில் படிக்கும் காலத்தில் வரும் காதலைப் பற்றி பல படங்கள் வந்துவிட்டன. அந்த விதத்தில் வந்துள்ள மற்றுமொரு படம் தான் இந்த மாயநதி.

பள்ளிப் பருவக் காதலைச் சொல்லி வரும் படங்களுக்கு தடை விதித்தால் கூட நன்றாகத்தான் இருக்கும். இந்தப் படத்தில் நல்ல விஷயத்தைச் சொல்ல வருகிறோம் என்று சொல்லிவிட்டு, தன்னைக் காதலிக்க மறுக்கும் பள்ளி மாணவி மீது, பள்ளியின் முன் ஆசிட் வீசும் பள்ளி மாணவன், பின்னர் அவனே துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சுடப் போவது என சில தவறான விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள். பள்ளியில் இருக்கும் ஒரு மாணவி குடிப்பவள் என்றும், மற்றொரு மாணவி எப்போதும் மேக்கப்புடனேயே திரிவாள் என்றும் சில தவறான கண்ணோட்டக் கதாபாத்திரங்களும் படத்தில் உள்ளன. இவற்றையெல்லாம் தவிர்த்திருக்க வேண்டும்.

காதல் கதைகளைச் சொல்ல எவ்வளவோ களங்கள் இருக்கின்றன. அப்படியிருக்க பள்ளிப் பருவத்தில் வருவது காதல் என்பதை இன்னும் எத்தனை படங்களில் பார்க்கப் போகிறோமோ தெரியவில்லை. அந்த வயதில் தங்களுடன் பழகும் எதிர்பாலினத்தவருடன் ஒரு ஈர்ப்பு வரும். அது பலருக்கும் வருவதுதான். அதை சரியாக அணுகி அது காதலல்ல என இந்தப் படத்தில் சொல்லியிருக்கலாம். அதை விட்டுவிட்டு காதலித்து பள்ளி படிக்கும் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு கஷ்டப்படுவதைக் காட்டி நம்மையும் கஷ்டப்படுத்தி இருக்கிறார்கள்.

பள்ளி ஆசிரியர் ஆடுகளம் நரேன். மனைவி இல்லாமல் தன் மகள் வெண்பாவை குழந்தையிலிருந்தே மிகவும் பாசமாக வளர்த்து வருகிறார். வெண்பா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார். மாவட்ட அளவில் பத்தாவதில் முதலிடம் பிடித்தவர். தற்போது பன்னிரெண்டாவதிலும் வகுப்பில் முதல் மாணவியாகவே இருக்கிறார். டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்பதே அவரது லட்சியம். வெண்பாவுக்கும் அவரை ஆட்டோவில் அழைத்துச் செல்லும் அபி சரவணனுக்கும் காதல் மலர்கிறது. அதனால் படிப்பில் தடுமாறுகிறார் வெண்பா. ஒரு கட்டத்தில் வெண்பா எங்கே தனக்குக் கிடைக்காமல் போய்விடுவாரோ என்ற எண்ணத்தில் வெண்பாவின் மனதை மாற்றி கல்யாணம் செய்து கொள்கிறார் அபி. இதைப் பார்த்த வெண்பா அப்பா, அதிர்ச்சியில் எங்கோ போய்விடுகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

காதல் என்ற ஒற்றை வார்த்தையை வைத்து பலரும் பல நாடகமாடி அப்பாவிப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் பல கஷ்டங்களைப்படுகிறார்கள். பெற்றோர் யாரும் தங்கள் பிள்ளைகள் கெட்டுப் போகட்டும் என நினைக்க மாட்டார்கள். பெற்றோர் கொடுக்காத பாசத்தை பொய்க் காதல் செய்பவர்களால் எப்படி கொடுக்க முடியும். அப்படிப்பட்டவர்களிடம் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் உணர்த்தும். கிளைமாக்சில் வெண்பாவின் நிலைமையைப் பார்த்து நமக்கு பரிதாபம்தான் வருகிறது. பள்ளிப் பருவத்து அறியாக் காதல் ஒரு மாணவியின் வாழ்க்கையை எப்படி பாழாக்கி விடுகிறது.

ஆட்டோ டிரைவராக அபி சரவணன். படத்தில் நல்லவனாகப் பார்க்க முயற்சித்தாலும் நம்மால் பார்க்க முடியவில்லை. அவரும் தெரியாமல் தவறு செய்துவிட்டார் என்றாவது ஒரு வசனத்திலாவது வைத்திருக்கலாம். அதில் எந்த அழுத்தமும் இல்லை. அப்படியிருப்பவருக்கு படத்தில் கொடுத்திருக்கும் முடிவு ஏற்க முடியாத ஒன்று.

பள்ளி மாணவியாக வெண்பா. அம்மாதிரியான கதாபாத்திரங்களுக்கு அவர் பொருத்தமானவர் என முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது. இருந்தாலும் அவரும் கிடைத்த கதாபாத்திரத்தில் தன்னால் எவ்வளவு இயல்பாக நடிக்க முடியுமோ அவ்வளவு நடித்திருக்கிறார்.

ஆடுகளம் நரேன் போன்ற அப்பாவி அப்பாக்கள் இந்த உலகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். காதலித்தவனுடன் ஓடி வந்து தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்களுக்கு ஒரு காலத்தில் தன் அப்பா, அம்மா எப்படியெல்லாம் தங்களை வளர்த்தார்கள் என்பதை நிச்சயம் உணர்வார்கள்.

படத்தின் பெரிய பலமே இசையமைப்பாளர் ராஜா பவதாரிணி. எமோஷனலான காட்சிகளில் தன் அப்பா ராஜாவை ஞாபகப்படுத்துகிறார். அப்பா, மகள் இடையிலான பாசப் பாடலான யாவும் இங்கு நீதானே.. பாடல் உணர்வுவூர்மாய் அமைந்துள்ளது. மற்ற பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. தொடர்ந்து இசையமையுங்கள் பவதாரிணி.

காதல் தவறா, சரியா என ஒரு முடிவுக்கு வராமல் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் அசோக் தியாகராஜன். சொல்ல வந்து கருத்து சரிதான், அதைச் சொல்லும் விதத்தில் சொல்லியிருந்தால் இன்னும் அதிகமான கவனத்தைப் பெற்றிருக்க முடியும்.

மாயநதி - தேக்கத்துடன்...

 

பட குழுவினர்

மாயநதி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓