நடிகர்கள் : ஜெயராம், குஞ்சாக்கோ போபன், அனுஸ்ரீ, தர்மஜன் போல்காட்டி, சலீம்குமார், மணியம்பிள்ள ராஜூ
டைரக்சன் : ரமேஷ் பிஷரோடி
மலையாளத்தில் பிரபல சின்னத்திரை தொகுப்பாளரான ரமேஷ் பிஷரோடி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள படம் தான் இந்த பஞ்சவர்ண தத்த (பஞ்சவர்ண தத்தை - பஞ்சவர்ண கிளி)
எம்.எல்.ஏவான குஞ்சாக்கோ போபன் அடுத்த தேர்தலுக்கு தயாராகிறார். இந்த நிலையில் அபார்ட்மெண்ட் பகுதிகளின் நடுவே குடிசை போட்டு விலங்குகள், பறவைகளை வளர்த்து வருகிறார் ஜெயராம். அது தங்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும், அவரை அந்த இடத்தைவிட்டு காலி செய்தால் தங்கள் பகுதி ஓட்டு முழுவதும் குஞ்சாக்கோவுக்குத் தான் என்கிறார்கள் அந்த அபார்ட்மென்ட்வாசிகள். குஞ்சாக்கோவும் விலங்குகள் நல வாரியத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார்.
இதனால் பறவைகளையும் விலங்குகளையும் தூக்கி வந்து போலீஸ் ஸ்டேஷனில் வைக்கிறார்கள். ஆனால் ஜெயராம் அனைத்திற்கும் உரிய அனுமதி வைத்திருக்கிறார். ஆகவே அவரது வளர்ப்பு பிராணிகளை அவரையே எடுத்துச்செல்ல சொல்கிறார்கள் போலீஸார். அதேசமயம் ஜெயராமல் அவரது இடத்திற்கு மீண்டும் அவற்றை கொண்டு செல்ல முடியாத சூழல்.
இந்தநிலையில் ஜெயராமுக்கு இந்த சிக்கலை ஏற்படுத்திய குஞ்சக்கோவின் மனைவி அனுஸ்ரீ, போதையில் ஜெயராம் இருப்பிடத்தில் இருந்து ஒரு பஞ்சவர்ண கிளியை தூக்கிச்செல்வது சிசிடிவி காட்சி மூலம் ஜெயராமுக்கு தெரியவருகிறது. அதை தொடர்ந்து அனுஸ்ரீ மேல் வழக்கு பதியும் சிக்கலும், அதனை வைத்து குஞ்சாக்கோவுக்கு தேர்தல் அரசியல் எதிரிகளால் சிக்கலும் உருவாகும் நிலை ஏற்படுகிறது.
இதையடுத்து வேறு வழியின்றி தன்னுடைய பங்களாவிலேயே ஜெயராமும் அவரது பிராணிகளும் தாங்கிக்கொள்ள இடம் கொடுத்து பிரச்சனையை செட்டில் செய்கிறார் குஞ்சாக்கோ. அதன்பின் வரும் நாட்களில் ஜெயராமுக்கும் குஞ்சாக்கோவுக்கும் பிணக்கம் அதிகமானதா, அல்லது இருவருக்குள்ளும் புரிதல் ஏற்பட்டு இணக்கம் ஆனார்களா என்பது மீதிக்கதை..
ஒவ்வொரு மனிதர்களும் தன்னை சுற்றி இறுக்கம், கோபம் என வேலிகளை போட்டுக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் மறைந்திருக்கும் மனிதம் வெளிப்படும்போது எதிரிகளும் நண்பர்களாக மாறும் அதிசயம் நடக்கிறது. இதை பாடமாக எடுக்காமல் ஜாலியான படமாக எடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் ரமேஷ் பிஷரோடி.
மொட்டைத்தலையும் தொந்தி வயிறுமாக இதுநாள் வரை நாம் பார்த்திராத புது ஜெயராம் நம்மை படம் முழுதும் பிரமிப்பூட்டுகிறார். உருவத்தில் மட்டுமல்ல அந்த கேரக்டருக்கேற்ற நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் கூட நிறைய வித்தியாசம் காட்டியுள்ளார். எம்.எல்.ஏவாக வரும் குஞ்சாக்கோ வழக்கம்போல் தனது ஜென்டில்மேன் எல்லையை தாண்டாமல் நடிப்பில் பாந்தம் காட்டியுள்ளார். அவரது மனைவியாக வரும் அனுஸ்ரீ பஞ்சவர்ண கிளியை தன்னையறியாமல் எடுத்துச்செல்லும் காட்சியிலும் குஞ்சாக்கோவுடன் கலகலப்பான மனைவியாக நடந்துகொள்வதிலும் சபாஷ் பெறுகிறார்.
ஜெயராமின் உதவியாளராக, இடைவேளைக்கு பின்னர் என்ட்ரி ஆனாலும் வசனங்களை அள்ளித்தெளித்து கைதட்டல்களை அள்ளுகிறார் தர்மஜன் போல்காட்டி. எதிர்தரப்பு அரசியல்வாதியாக வரும் சலீம்குமார், குஞ்சாக்கோவின் அம்மாவாக வருபவர் என பலரும் கவனம் ஈர்க்கிறார்கள். குறிப்பாக படம் முழுதும் யானை, ஒட்டகம், கிளிகள் என விலங்குகளையும் பறவைகளையும் கிராபிக்ஸ் இல்லாமல் ஒரிஜினலாக பயன்படுத்தியுள்ளது மிகப்பெரிய ஆச்சர்யம் தருகிறது. அதிலும் யானை மதம் பிடித்து ஓடும் காட்சி அவ்வளவு நேர்த்தியாக இயல்பாக படமாக்கப்பட்டுள்ளது.
மற்றபடி மிகப்பெரிய ட்விஸ்ட்டுகள், அடிதடி சண்டைகள் என இல்லாமல், அவ்வப்போது சென்டிமென்ட்டை தொட்டுக்கொண்டு பயணிக்கிறது இந்த 'பஞ்சவர்ண தத்த'.
மொத்தத்தில் ஒரு பீல்குட் படம் என்று இதை தாராளமாக சொல்லாம்.