Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில் (மலையாளம்)

சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில் (மலையாளம்),Swathanthryam ardharathriyil
  • சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில் (மலையாளம்)
  • இயக்குனர்:
02 ஏப், 2018 - 14:51 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில் (மலையாளம்)

நடிகர்கள் : ஆண்டனி வர்கீஸ், செம்பான் வினோத், விநாயகன் மற்றும் பலர்

ஒளிப்பதிவு : கிரீஷ் கங்காதரன்

இசை : தீபக் அலெக்சாண்டர்

டைரக்சன் : டினு பாப்பச்சன்

அர்த்த ராத்திரியில் சுதந்திரம் என்பது தான் படத்தின் டைட்டில்.. 'அங்கமாலி டைரீஸ்' புகழ் ஆண்டனி வர்கீஸ் ஹீரோவாக நடித்துள்ள இரண்டாவது படம் இது என்பதால் கூடுதலான எதிர்பார்ப்பு வெளியாகியுள்ளது இந்தப்படம்.

பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் ஆண்டனி வர்கீஸ், தனது காதலிக்கு போலீசார் மூலம் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரையும் அழைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்வதற்காக பெங்களூருவுக்கு விரைகிறார்கள். பெங்களூருவில் ஏற்பட்ட கலவரத்தில் காதலி தாக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். அதேசமயம் பைனான்சில் பணத்தை திருடிவிட்டதாகவும், போலீசாரை தாக்கிவிட்டு தப்பித்துவிட்டதாகாவும் கூறி ஆண்டனி வர்கீசையும் போலீஸ் சுற்றி வளைத்து கைது செய்து பெங்களூரு சிறையில் அடைக்கிறது.

சிறைச்சாலையில் ஏற்கனவே இருக்கும் கைதிகளான செம்பான் வினோத், விநாயகன் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டு இன்னும் சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு சிறையிலிருந்து தப்பிக்க முடிவெடுக்கிறார் ஆண்டனி வர்கீஸ். சிறை காவலர்களின் கண்களில் மண்ணை தூவி, கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஜெயில் அறையிலேயே சுரங்கம் தோண்டுகிறார்கள்.

ஆகஸ்ட்-15ஆம் தேதி அதிகாலையில் தப்பிச்செல்வதுதான் அவர்கள் திட்டம். அதற்கேற்ப தங்களது அறைகளில் சேர்க்கப்படும் புதிய கைதிகளை, தங்களது திட்டம் தெரிந்துவிடாதபடி போலீசாரிடம் நாடகமாடி வெவ்வேறு அறைகளுக்கு மாற்றிவிடுகிறார்கள்.. இவர்கள் தப்பிச்செல்லும் தினத்தன்று, ஆண்டனி வர்கீஸை கொல்வதற்காகவே இரண்டு குண்டர்கள் ஜெயிலுக்குள் இவர்களது அறைகளுக்கே அனுப்பப்படுகிறார்கள். கூடவே ஜெயிலில் ஆண்டனியுடன், அவர் வந்தநாள் முதல் விரோதமாக இருக்கும் டிடோ வில்சனும் அந்த அறையில் அடைக்கப்படுகிறார். டிடோ வில்சனுக்கும் இவர்கள் தப்பிச்செல்லும் திட்டம் தெரியவருகிறது.

சிறையில் இருக்கும் இந்த மற்ற மூவரையும், வெளியில் பாரா இருக்கும் போலீசாரையும் ஏமாற்றிவிட்டு இவர்களால் தப்பிக்க முடிந்ததா, அந்த அர்த்த ராத்திரியில் இவர்களுக்கு சுதந்திரம் கிடைத்ததா என்பது விறுவிறுப்பான க்ளைமாக்ஸ்.

கைதிகள் சிறையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் பல படங்களை நாம் பார்த்திருப்போம்.. சிறைக்கு அடியில் சுரங்கம் தோண்டி தப்பித்தார்கள் என கால்பக்க செய்தியாக படித்து ஆச்சர்யப்பட்டிருப்போம். ஆனால் இந்தப்படத்தில் அப்படி ஒரு தப்பிக்கும் நிகழ்வு இப்படியான ஒரு திட்டமிடலுடன் தான் நடந்திருக்கும் என நுணுக்கமாக அதை காட்சிப்படுத்திய விதத்தில் தான் தனித்து நிற்கிறார்கள்.

முதல் படத்திலேயே முத்திரை பதித்தாலும், இதிலும் ரப் அன்ட் டப்பான தோற்றத்துடன் கைதியாக வலம்வரும் ஆண்டனி வர்கீஸ், இன்னும் சில படங்களில் முன்னணி கதாநாயகனாக மாறிவிடுவர் என நம்பலாம். அதற்கான நடிப்பும் உழைப்பும் முயற்சியும் அவரிடம் நன்கு தெரிகிறது. உடன் நடித்துள்ள சீனியர் நடிகர்காளன செம்பான் வினோத் மற்றும் விநாயகன் இருவரும், தாங்கள் தேர்ந்த நடிகர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள்.

முரட்டுத்தனமான ஜெயிலராக வரும் ராஜேஷ் சர்மா ஒருபக்கம் மிரட்டுகிறார் என்றால் இன்னொரு பக்கம் ஆக்ரோஷமான கைதியாக மிரட்டுகிறார் டிடோ வில்சன். ஆண்டனியின் திட்டத்தை கண்டுபிடித்து அதை டிடோ வில்சன் தடுக்க முயலும் க்ளைமாக்ஸ் காட்சியும், சுரங்கம் வழியாக ஆண்டனி அன் கோ தப்பிக்க முயலும் காட்சியும், அதை தொடர்ந்து நடைபெறும் களேபரங்களும் நம்மை கால்மணி நேரம் இருக்கை நுனியிலேயே உட்கார வைத்து விடுகின்றன.

கிரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவும், தீபக் அலெக்சாண்டரின் பின்னணி இசையும் கடைசி இருபது நிமிட காட்சிகளில் நம்மை பதைபதைக்க வைக்கின்றன. ஜெயிலில் இருந்து தப்பிக்க ஆண்டனி அன் கோ ஒவ்வொரு ஸ்டெப்பாக காய் நகர்த்தும் காட்சிகளை இயக்குனர் டினு பாப்பச்சன் மிகவும் நயமாக கையாண்டுள்ளார்.

புதிய நடிகர், புது இயக்குனர் தானே என சில படங்களை அலட்சியமாக ஒதுக்கிவிட கூடாது என்பதற்கு இந்தப்படம் ஒரு நல்ல உதாரணம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in