நாயகன் - ஜுனியர் என்.டி.ஆர்
நாயகி - ராகுல் ப்ரீத்தி சிங்
இயக்குனர் - சுகுமார்
தெலுங்கு தேசமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த திரைப்படம் தான் நானாக்கு பிரேமதோ, ஜுனியர் என்.டி.ஆரின் நடிப்பில் ஏக எதிர்பார்ப்புக்கு இடையே இப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி உள்ளது. நாயகன் அபிராம் (என்.டி.ஆர்) லண்டனில் ஒரு மிகப்பெரும் தொழில் அதிபர், வசதி வாய்ப்புகளுடன் வாழ்க்கையை அனுபவித்து வரும் அபிராம், ஒரு நாள் தனது தந்தைக்கு கேன்சர் என்பதை அறிகிறார். தனது தந்தையை பார்த்துக்கொள்ள எண்ணி ஓடோடி வருகிறார்.
இந்த நேரத்தில் அவரது தந்தை தனது கடைசி ஆசையை சொல்கிறார் லண்டனில் வாழும் இந்திய வம்சாவழியை சேர்ந்த ஒரு பெரும் பணக்காரரான கிருஷ்ண மூர்த்தியை (ஜெகபதிபாபு) காண வேண்டும் என்கிறார். மேலும் தான் எப்படியெல்லாம் கிருஷ்ணமூர்த்தியால் ஏமாற்றப்பட்டேன் என்பதையும் சொல்கிறார். இனி என்ன எப்போதும் போல் நாயகன் பழிவாங்கவேண்டுமே அது நடக்கிறது.
ஆனால் வழக்கமான நாயகன் போல் ரத்தம் தெறிக்க தெறிக்க அல்ல, புத்தி கூர்மையால் மதி நுட்பத்தால் எதிரியை வீழ்த்தும் நாயகனாக அபிராம் திரையில் ஜொலிக்கின்றார். அபிராம் கிருஷ்ணமூர்த்தியை அவனது போக்கிலேயே விட்டு ஏமாற்ற முயற்சி செய்கிறார். ஒரு புறம் பல்வேறு ஏமாற்று திட்டங்கள் போடும் நபராகவும், மறுபுறம் பாசமான மகனாகவும் என்.டி,ஆர் லைக்ஸ் அள்ளுகிறார்.
அதுவும் வித்தியாசமாக நடை உடை பாவனை என எல்லாம் புது மாதிரியாக திரையில் தோன்றி தன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். வில்லனாக ஜெகபதி பாபு வாழ்ந்திருக்கிறார் என்று கூட சொல்லலாம், ஒரு பார்வையில் மிரட்டுவதாகட்டும் கம்பீரமான குரலில் பேசுவதாகட்டும் அசரவைக்கிறார் மனிதர்.ஜெகபதி பாபுவை தெலுங்கு சினிமாவில் இனி பல படங்களில் வில்லனாக எதிர்பார்க்கலாம் அப்படி ஒரு கிளாஸ் வில்லனாக படத்தில் வருகிறார்.
ஜுனியர் என்.டி.ஆரின் 25வது படம் அவரின் திரைவாழ்க்கையில் குறிப்பிடும் படியான படமாக அமைந்திருக்கிறது. உணர்வு பூர்வமான காட்சிகளாகட்டும், நடனமாகட்டும் ஜுனியர் என்.டி.ஆர் தன்னில் சிறந்ததை வெளிப்படுத்தியிருக்கிறார். இவ்வளவு இருந்தும் படத்தின் பிரச்சனை என்று பார்த்தால், அதில் வரும் நாடகத்தனமாக காட்சிகளை சொல்லலாம். அப்புறம் ராகுல் பிரீத்தி சிங் வரும் தொடக்க காட்சிகளை யோசிக்காமல் வெட்டி இருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
இயக்குனர் சுகுமார் எடுத்துக்கொண்ட பழிவாங்கல் என்கிற ஒருவரி கதையை அழகாக நுட்பமாக பல காட்சிகளை இணைத்து அருமையாக திரைக்கதை அமைத்திருக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை படத்தில் அளவாக ஒலிக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டிய விசயம் படத்தின் ஒளிப்பதிவைத்தான். அயல் தேசத்தை அழகாக பதிவு செய்திருக்கிறார் விஜய் சி.சக்கரவர்த்தி. நாடகத்தனமான காட்சிகளை தவிர்த்து விட்டு பார்த்தால் படம் நன்றாக வந்திருக்கிறது எனலாம். புதிய என்.டி.ஆர் கிளாஸ் லுக்கில் தனது ரசிகர்களை திருப்திபடுத்துவார்.
நானாக்கு பிரேமதோ - ரசிக்க வைக்கும்.